**Followers.அன்பர்கள்.** தாங்களும் இணையலாமே!!!

ஹை டெக் தில்லு முல்லுகள்- ஹைவே ஹோட்டல்கள்!! .. ஜாக்கிரதை!! சாலையோர உணவகங்கள்!!

>> Tuesday, April 29, 2008

ஜாக்கிரதை!! சாலையோர உணவகங்கள்.
பாரம்பர்ய உணவா? அப்படின்னா இன்னாதுப்பா? என்று ஆச்சரியத்துடன் கேட்கும் அளவிற்கு அந்நிய உணவுகளின் ஆதிக்கம் அதிகரித்து மக்களை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது.

இந்த ஆதிக்கப்பிடியில் சிக்கித் தவிப்பது ஸ்டார் ஹோட்டல்கள் + ஹைக்ளாஸ் ஃபேமிலிகள் மட்டுமல்ல. சாலையோர நடைபாதை உணவகங்களும் அதை நம்பிச் சாப்பிடும் கஸ்டமர்களும் தான். இப்போதெல்லாம் உணவுகள் வேகவைக்கப்படுவதைப் பார்ப்பதற்கே அரிதாக இருக்கிறது. உணவுகளை வாணலியில் போட்டு வறுத்து பாதியை கீழே கொட்டி மீதியை ப்ளேட்டில் கொட்டி ஃபாஸ்ட்டாக கொடுக்கப்படும் உணவுகளுக்கு ஏக போக வரவேற்பு.

ஆகவே சாதாரண மக்கள் ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்களுக்குச் சென்று சாப்பிட வேண்டுமெனில் தங்கள் சொத்தையே எழுதி வைத்துவிட்டுத்தான் வரவேண்டும். எனவேதான் விலை குறைந்த சாலையோர உணவுகளை பலர் விரும்பியும், விரும்பாமலும் சாப்பிடுவதன் காரணம். வெளியூரிலிருந்து வேலை தேடி வந்திருக்கும் பேச்சுலர்களுக்கு அரசாங்கத்தின் மூலம் கேஸ் சிலிண்டர் கிடைக்கப் பெறாமல் நடைபாதைக் கடைகளை நோக்கி நடை போடுவதும் இன்னொரு காரணம்.

சரி, எது எப்படியோ சாலையோர உணவகங்கள் ஏழைகளின் அக்க்ஷய பாத்திரமாகவும், பேச்சுலர்களின் ஃபைவ்ஸ்டார் ஹோட்டலாகவும் மாறிப் போனாலும் இதனால் ஏற்படும் உடல்நலக் கேடுகளையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய நேரம். ஏனெனில் சுகாதாரமற்ற குடிநீர், தரம் குறைந்த உணவு வகைகள், சுத்தமில்லாத பாதுகாப்பு, சுவை கூட்ட உடலுக்குத் தீங்கைக் கொண்டு வரும் எசன்ஸ் கலப்பது என தரமற்ற உணவுகளால் பலவிதமான நோய்களும் பிரச்சினைகளும் நம்மை தாக்கி மரணப்படுகுழியில் தள்ள பல் இளித்து நிற்கின்றன சாலையோரங்களில்.

சாலையோர உணவக ஓனர்களின் வயிற்றில் அடிக்கும் விஷயமாக இருந்தாலும், பல்லாயிரக்கணக்கானோர் உடல்நலம் பாதிக்கப்படாமல் பாதுகாத்துக் கொள்ள வழிவகுக்கும் ஓர் விழிப்புணர்வு விஷயமாகும். எனவேதான் தரமற்ற உணவுகளால் என்னமாதிரியான பிரச்சினைகளும் நோய்களும் ஏற்படும்? இதைத் தடுக்க என்ன வழி? அரசாங்கம் என்ன செய்ய வேண்டும்? என பல கேள்விகள் மூளையைச் சீண்ட ஆரம்பித்திருக்கின்றன.

‘‘சாலையோரக் கடைகளில் சுத்தமான தண்ணீர் கிடையாது. சமையல் அறை அவுங்களுக்குத் தனியா இல்லை. இதனால் ஏற்படுகிற ஆரோக்கியக் கேடுகள் அவங்களுக்குத் தெரியாமலேயே இருக்கு. இதை அறியாமைன்னு கூடச் சொல்லலாம். 99 சதவீதம் கையை சுத்தமா கழுவுறதுமில்ல, கையுறை (க்ளவுஸ்) அணியறதுமில்ல. இதனால அவங்க உடம்புல இருக்குற ‘கொக்கிப்புழு’ சாப்பிடுறவங்களுக்கும் பரவ வாய்ப்பு இருக்கு. சமைக்கிறவங்க சுத்தமா இருந்தாலும் சமையல் முறைகளிலும் சத்தம் தேவை. சமைச்ச உணவுகள் சரியா மூடி வைக்காம வாகனங்களின் மாசு நிறைந்த காற்று பட்டு நச்சுக்கிருமிகள் உள்ளே புக வாய்ப்பு இருக்கு.

அதுவும் பஜ்ஜி, வடை, பிரியாணி, ஃப்ரைடு ரைஸ்னு எல்லாத்திலேயுமே கலர் பவுடர், எசன்ஸ் எல்லாம் கலக்குறாங்க. இதனால நிச்சயமா உடம்புல பாதிப்பு ஏற்படும். தாய்லாந்து போன்ற நாடுகளுக்கு போனப்போ, சாலையோர உணவுகளை அவ்வளவு சுத்தமாக கையுறை அணிந்து உணவு பரிமாறுவதைப் பார்த்து அதிசயித்துப் போனேன். ஆனா நம்ம ஊர்ல அப்படியில்லைன்னு நெனைக்கும் போது கொஞ்சம் வேதனையாகவும், வருத்தமாகவும் இருக்கு.

இதுக்கு அரசும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும்தான் சரியான பயிற்சிகளைக் கொடுத்து சாலையோர உணவகங்களால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்க முன் வரணும். நுகர்வோர்களை(வாங்கிச் சாப்பிடும்)யும் பாதுகாக்க சரியான நடவடிக்கை எடுக்கணும்.

சமீபத்துல சாலையோர கடைகளில் மாமிசம் டேஸ்ட்டா இருக்கவும், நல்லா வேகணும்ங்கிறதுக்காகவும் பேராசிட்டமல் மாத்திரையை கலக்கிறாங்கங்கிறது தெரிய வந்திருப்பது அதிர்ச்சிக்குரிய விஷயம்.

இப்படி ஹோட்டல்களில் விற்கப்படும் உணவுகளில் கலப்படமோ, தரம் குன்றியதாக சுகாதாரம் அற்றதாக இருந்தால் உங்களின் நகராட்சி, அல்லது மாநகராட்சி, சுகாதார அலுவலரிடம் புகார் கொடுக்கலாம். அதுவே கிராமப்புறமாக இருந்தால், சுகாதார நோய்த்தடுப்பு மற்றும் உணவு ஆய்வாளர் அல்லது மாவட்ட நுகர்வோர் பாதுகாப்புக் குழுத் தலைவரிடம் புகார் கொடுத்தால் ‘1954 உணவு கலப்படத் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.

இப்போ நுகர்வோர் பாதுகாப்புச் சட்டமும் வந்துடுச்சு. தொடர்ந்து உணவுக் கலப்படம், தரமற்ற உணவுகளைத் தயாரித்து விற்கப்படும் உணவுகளைச் சாப்பிட்டு வயிற்றுக் கோளாறோ அல்லது உடல் ரீதியான பாதிப்புகளோ ஏற்பட்டால் மாவட்ட நுகர்வோர் குறை தீர்க்கும் மன்றங்களில் புகார் செய்யும் பட்சத்தில் நடவடிக்கை எடுப்பதோடு நஷ்டஈடும் வழங்கப்படும். அதேபோல சம்பந்தப்பட்ட உள்ளாட்சி, நகராட்சி, மாநகராட்சி மூலம் பதிவு பெற்ற உணவகங்களில் சாப்பிடுவது நுகர்வோருக்குப் பாதுகாப்பானது. பாதிப்பு ஏற்பட்டால் கண்டிப்பாக புகார் செய்யத் தயங்க வேண்டாம்’’ என்கிறார் தமிழ்நாடு உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையாளர் க.ராஜாராமன், ஐ.ஏ.எஸ்.

இதனால் ஏற்படும் வயிற்றுப் பிரச்சினைகள் மற்றும் நோய்கள் குறித்து குடல் இரைப்பை மற்றும் லேபரோஸ்கோபி அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர்

பி. சதீஷிடம் கேட்டோம் ‘‘இதில் சிந்தித்துச் செயல்பட வேண்டியது மூன்று விஷயங்கள் இருக்கின்றன. அதாவது உணவு சுகாதாரம், என்ன இருக்கிறது? எந்த மாதிரியான சமையல் முறை? என்பதை கவனிக்க வேண்டும். உணவை சூடாகச் சாப்பிட்டால் நுண்ணுயிர்க் கிருமிகள் உணவில் இருக்க வாய்ப்பில்லை. அதே நேரத்தில் எதில் வைத்து சாப்பிடுகிறோமோ அதிலும் பாதிப்பு இருக்கக்கூடும். சுத்தமில்லாத பாத்திரமாக இருந்தால் பாக்டீரியா, வைரஸ், அமீபா போன்ற கிருமிகள் உணவு வழியாக நமக்குப் பரவி பாதிப்பை ஏற்படுத்தும். ஆக, உணவு, பாத்திரம், தண்ணீர், மூன்றும் முக்கியம்.

உணவு சுகாதாரம், இல்லை என்றால் பாக்டீரியா மூலம் டைஃபாய்டு போன்ற வியாதிகள் வந்து இம்சிக்கக்கூடும். வைரஸ் கிருமி தொற்று ஏற்பட்டால் மஞ்சள் காமாலை நோய் (ஹெப்படைட்டிஸ் ஏ,இ) வர வாய்ப்பிருக்கிறது. அதுவே அமீபா என்றால் வயிற்றுப் பிரச்சினைகள் போன்ற பிரச்சினைகள் ஏற்படும். இதெல்லாம் சுகாதாரமின்மையால் ஏற்படும் பிரச்சினைகள்.

இதுவே உணவில் என்ன இருக்கிறது என்று ஆராய்ந்தால் தரமான அரிசியா? தேவையான அளவு காரமா? உப்பு, எண்ணெய், தரமானதுதானா? அளவு சரியா என்று பார்க்க வேண்டும். இல்லையெனில் நெஞ்செரிச்சல், அல்சர், கேஸ் ப்ராப்ளம் எல்லாம் ஏற்படும்.

அடுத்து சமையல் முறை. உணவு நன்கு வேக வைக்கப்பட்டதாக இருந்தால் பிரச்சினை இல்லை. சரியாக வேகாமல் பாதி அளவு வெந்திருக்கும் ஃப்ரைடு ரைஸ், பிரியாணிகளால் அஜீரணக் கோளாறு, வயிறு உப்புசம், நெஞ்செரிச்சல், எல்லாம் ஏற்படக்கூடும். அதே போல் எண்ணெயை திரும்பத் திரும்ப (ரீ யூஸ்) பயன்படுத்துவதால் நெஞ்செரிச்சல், அசிடிட்டி, கேஸ் ப்ராப்ளம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. இதுபோன்ற குறிப்பிட்ட பல பிரச்சினைகள் சாலையோர உணவகங்களில் சாப்பிடுவதால் ஏற்படுகின்றன.

இதுபோன்ற பிரச்சினைகள் தொடர்வதால் அல்சர் போன்ற பிரச்சினைகள் வருவதோடு இரைப்பை மற்றும் சிறுகுடலில் இரத்தக்கசிவு ஏற்படக்கூடிய அபாயமும் உள்ளது. எனவே, ஏற்கெனவே அசிடிட்டி, நெஞ்செரிச்சல் உள்ளவர்கள் இதுபோன்ற உணவுகளை முற்றிலுமாக தவிர்ப்பது நல்லது. இல்லை என்றால் குடல் அடைப்பு ஏற்பட்டு அறுவை சிகிச்சை செய்துதான் காப்பாற்றும் சூழல் ஏற்படும்’’ என்று எச்சரிக்கிறார்.

‘‘சாலையோர உணவகங்கள் என்பது சுய வேலைவாய்ப்பு. வேலைக்கு ஆள் சேர்க்கத் தேவையில்லை. ஏழை எளியவர்கள் அனைவரும் (பணக்காரர்கள் விரும்பினால்) சாப்பிட முடியும். ஏனென்றால் உடனுக்குடன் கேட்டதும் சூடாக அதே நேரத்தில் விலை கம்மியாகவும் கிடைக்கும். எனவே பலர் சாலையோர கடைகளை விரும்பிச் செல்கிறார்கள். இதுக்கு சட்டம் போட்டு இவர்களை ஒடுக்குவதை விட ட்ராஃபிக் பாதிக்காதவாறு, சுத்தமாக, சுகாதாரமாக உணவுகளைத் தயாரித்து விற்க அரசாங்கத்தின் மூலம் திட்டம்தான் போட வேண்டும்.

அதற்கான சரியான பயிற்சி கொடுக்க வேண்டும். அந்தந்த ஏரியாவுக்கு இத்தனை கடைகள் என்று பிரித்து சரியான இடத்தைக் கொடுத்து அருகில் சுத்தமான குடிநீர் வசதியையும் ஏற்படுத்த வேண்டும். விலைக்கு ஏற்ப அங்கு சாப்பிடும் உணவுகள் கலப்படம் நிறைந்தவையாகவும், எண்ணெய், காய்கறிகள், சிக்கன், மட்டன்களில் தரம் குறைந்ததாகவும் இருக்கும்.

இவற்றையெல்லாம் ஹெல்த் இன்ஸ்பெக்டர்கள் பரிசோதனை செய்ய வேண்டும். வெயில் காலம் வேறு ஆரம்பித்துவிட்டதால் உணவு கெட்டுப் போயிருந்தால் கூட தெரியாது. இதனால் பல பிரச்சினைகள் ஏற்படும் என்பதைப் புரிந்துகொண்டு மக்கள் தான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்’’ என்கிறார் சிட்டிஸன் கன்சியூமர் சிவிக் ஆக்ஷன் குரூப் துணை இயக்குனர் ஷோபா ஐயர்.

கன்ஸ்யூமர் அசோசியேஷன் ஆஃப் இண்டியாவின் இயக்குனர் சந்தானராஜ் கூறும்போது, ‘‘சாலையோரக் கடைகளில் சரியான தண்ணீர் இருக்க வாய்ப்பில்லை. வாகனப் புகைகள் உணவில் புகும். உணவின் குவாலிட்டியும் குறைவு.

போண்டா, பஜ்ஜிகளை பேப்பரில் வைத்துக் கொடுப்பார்கள். அந்த பேப்பரில் உள்ள எழுத்து அச்சு நம் உடலுக்குள் சென்றால் இரத்த சோகை வியாதி ஏற்படும். சிலர் உணவில் சுவை கூட்டவும், மணமூட்டவும் அஜினமோட்டோ கலக்குறாங்க. இதனால் எந்த நன்மையுமில்லை. கேன்சர் மாதிரியான பிரச்சினைகள் வரும். ப்ளாஸ்டிக் கவரில் வைத்துச் சாப்பிடுவதாலும் கேன்சர் போன்ற பிரச்சினைகள் வரும்.

எல்லாப் பொருட்களாலுமே கலப்படும் வந்துவிட்டது. பார்த்துப் பார்த்து வாங்கி சமைக்கும் உணவுகளிலேயே பாதிப்புகள் இருக்கின்றன. சம்பாதிக்கும் நோக்கத்தோடு ‘‘யாரோ சாப்பிட்டு என்ன ஆனால் நமக்கென்ன என்ன?’’ என்று அலட்சியத்தோடு வாங்கி சமைக்கும் போது எந்த மாதிரி பிரச்சினைகள் வருகிறது என்பதை சொல்லித் தானா தெரிய வேண்டும்’’.

டாக்டர். ஜெயந்தி (டயட்டீஷியன்) இதுபற்றி கூறும் போது, ‘‘சுவைகூட்டவும், மணமூட்டவும் பல வேதிப் பொருட்கள் கலக்கப்படுகின்றன. வீட்டில் இயற்கையான பூண்டு, இஞ்சி, மசாலா செய்து சாப்பிடுவதற்கும் வெளியில் சாப்பிடுவதற்கும் வித்தியாசம் இருக்கிறது. எண்ணெயை 1000சி சூடேற்றிய பிறகு திரும்பவும் அளவுக்கு மீறி சூடேற்றுவதால் அதன் உண்மைத்தன்மை மாறி பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.

மசாலா + கலர் பவுடர்கள் அதிகமாக சாப்பிடுவதால் உடலில் குடலை அரிக்க ஆரம்பித்துவிடும். குறிப்பாக ரோட்டோர கடைகளில் பிரியாணி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் தரமற்ற பிரியாணிகளாலும் பல பிரச்சினைகள் இருக்கின்றன. பிரியாணிக்கு வெங்காயப் பச்சடியை தயிரோடு கலந்து சாப்பிடுவதால் ஜீரண சக்தி கிடைக்கிறது.

கத்திரிக்காயில் நார்ச்சத்து இருப்பதால் பிரியாணியிலுள்ள கொழுப்பை உடலில் சேர்க்காமல் இருக்கும். வேளா வேளைக்கு வரிந்து கட்டிக்கொண்டு உள்ளே தள்ளக்கூடாது.

ஒரு சராசரி மனிதன் பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை பிரியாணி சாப்பிடலாம். அதுக்குக் கூட சரியான உடற்பயிற்சி தேவை. முன்பெல்லாம் நாற்பது வயதுக்கு மேல் தான் கண் பிரச்சினை, இடுப்பு வலி, மூட்டு வலியெல்லாம் வரும். இப்போது உணவில் கெமிக்கல் இருப்பதால் 20 வயசிலேயே எல்லாப் பிரச்சினையும் வர ஆரம்பித்துவிட்டது.

எண்ணெய், மசாலாக்கள் அதிகரிப்பால் கேன்சர், உணவுக் குழாய் பாதிப்புகள் ஏற்படுகின்றன. எல்லா கேட்டரிங் சென்டர்களிலும் உணவு தயாரிக்கும் முறைகளை (HACCP) கடைப்பிடிக்க வேண்டும். மக்களுக்கு உணவுக்கட்டுப்பாடு மற்றும் விழிப்புணர்வு தேவை’’ என்கிறார்.

இதுபற்றி சென்னை மாநகராட்சி சுகாதார அலுவலர் டாக்டர். எஸ்.கிருஷ்ணாவிடம் பேசினோம்.

‘‘222 ஆஃப் தி முன்சிபல் ஆக்ட்’ படி சாலையோரங்களில் எந்தவிதமான ஆக்கிரமிப்பும் இருக்கக்கூடாது. ஆனால், சாலையோரங்களில் பலர் கடைகளை வைக்க ஆரம்பித்திருக்கிறார்கள். இது ஏழை, எளிய மக்களிடம் வரவேற்பும் பெற்றுள்ளது. அதற்காக சாப்பிடுபவர்களின் உடலுக்கு தீங்கு விளைவிப்பதை கண்டுகொள்ளாமல் விட்டுவிட முடியாது.

முக்கியமாக சுத்தமில்லாத தண்ணீரால் ஈக்கோலை, டைபாய்டு, காலரா போன்ற நோய்கள் ஏற்படக்கூடும். 500 எம்.எல். தண்ணீரில் ஆயிரக்கணக்கான கிருமிகள் அடங்கியிருக்கிறது. சில உணவுகளை ஃபிரிஜ்ஜில் வைத்து வெளியே வைக்கும் போது பாக்டீரியா கிருமிகளின் எண்ணிக்கை பல ஆயிரமாக அதிகரித்துவிடும்/. இதற்கு ‘Aflotosin’ விஷத்தன்மை என்பார்கள். சிலர் உணவுகளில் மாத்திரைகள் கலப்பது அதிகரித்து விட்டது.

இதனால் தலைவலி, உடம்பு வலி என பல பிரச்சினைகள் ஏற்படும். இதைத் தடுக்க ரெயில்வே ஸ்டேஷன் உணவகங்களுக்கு லைசன்ஸ் கொடுப்பது போல் சாலையோர உணவகங்களுக்கும் லைசன்ஸ் கொடுத்து முறைப்படுத்த ஏற்பாடு செய்ய வேண்டும். அப்போதுதான் சாலையோர உணவகங்களால் ஏற்படும் பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.’’

ம்... சொல்லவேண்டியதை சொல்லியாச்சு!

ம.மனோ, --KUMUDAM HEALTH

ஹைவே ஹோட்டல்கள் .ஹை டெக் தில்லு முல்லுகள்.

இங்கே சிறுநீர் கழித்துக் கொண்டிருப்பவர்கள் பரிதாபத்திற்குரிய பாவப்பட்டவர்கள். ஏனெனில், தன் வாழ்நாளில் யாரிடமும் வாங்காத பேச்சுக்களையும் திட்டுகளையும் இங்கே சிறுநீர் கழிக்கும் இருபது முப்பது நொடிகளுக்குள் வாங்கிவிடுவார்கள். இன்னும் ஒரு சிலரோ, ரத்தம் சொட்ட உருட்டுக்கட்டையால் அடி வாங்கிக் கொண்டு ஊர் திரும்புவார்கள்.

உலகிலேயே மிக அசுத்தமான இடத்தில் காஸ்ட்லியான வியாபாரச் சந்தை எதுவென்றால், அது தமிழகமெங்கும் விரவியிருக்கும் மோட்டல்கள்தான். ஆம்! மோட்டல் எனப்படும் பேருந்து பயணத்தில் சாலையோர உணவகங்களில்தான் மேலே சொன்ன மகா கொடுமைகள்.

‘‘கீரையில உப்பு அதிகம். உருளைக்கிழங்கு வேகவே இல்லை. ரசம்ங்கிற பேர்ல கோமியம். அரை வேக்காட்டில் புழுத்துப்போன சாப்பாட்டுக்கு அம்பது ரூபா புடுங்கறீங்களே’’ என்று பயணி ஒருவர் சென்னை செல்லும் வழியிலுள்ள மோட்டலுக்குள் எகிற,

அவரை அடித்து துவைத்து பிழிந்து காயப்போட்டு விட்டனர். கேள்வி கேட்டவர் இன்று மாதச் சம்பளத்தை இழந்து கைகால் ஊனமுற்று மருத்துவச் செலவு செய்து கொண்டிருக்கிறார்.

‘‘ஒரு காப்பியைக் கொடுத்துட்டு பத்து ரூபாய் என்கிறீங்க. காப்பியில பால் சுத்தமாவே இல்ல. என்னய்யா காப்பி விக்கிறீங்க?’’ என்று கொதித்துப்போன வழக்கறிஞர் காபியைக் காட்டிலும் சூடாகியிருக்கிறார். கடைசியில் இருதரப்பிலுமே கைகலப்பில் முடிந்திருக்கிறது.

தாறுமாறான விலை. தரங்கெட்ட மினிமம் கியாரண்டி. அவர்கள் வைத்ததே சட்டம் என்பதற்கு மேற்கண்ட சம்பவங்கள் சில சாம்பிள்களே!

‘‘மோட்டல்கள் இருக்கும் நட்ட நடு காட்டுப்பகுதியில் அவர்களை மீறி யாரும் ஒன்றும் செய்யமுடியாது. அந்தளவிற்கு மோட்டலில் வேலை பார்க்கும் ஆட்கள், அடியாட்கள் ரேஞ்சிற்கு அதட்டி மிரட்டி வியாபாரம் செய்வதுதான் அவர்களின் பெரிய பலம்’’ என்கிறார் சமூகநல ஆர்வலர் ஒருவர்.

காவல்துறையில் பணியாற்றும் நேர்மையான உயரதிகாரி ஒருவர், ‘‘அடிக்கடி சென்னை போய்ட்டு வரக்கூடிய ஆளுங்க நான். நானே பல இடங்களில் அவங்களோட செயல்பாட்டை கண்டு கோபப்பட்டிருக்கேன். ஒருமுறை விக்ரவாண்டி மோட்டல்ல சாப்பிட நேர்ந்தது. ரெண்டு தோசையை வச்சாங்க. என்ன கறின்னு தெரியலை? கிண்ணத்துல கறியைக் கொண்டு வந்து வச்சாங்க. நான் கேட்டது தோசை மட்டுந்தான்.

ஆனா, அவங்களா கறின்னு கொண்டு வந்து வச்சுட்டு சட்டை பண்ணாம போய்ட்டாங்க. நான் எதிர்த்துக் கேட்டப்போ, ‘இதுதான் இருக்கு. சாப்பிடறதா இருந்தா சாப்பிடுங்க. இல்லைன்னா அறுபது ரூபா பணத்தைக் கொடு’ங்கன்னு பில்லை வச்சுட்டான். நாம பேச சாய்ஸே தரமாட்டாங்க.

நான் பிரச்னை பண்ணிட்டேன். உடனே அங்கிருந்த கேஷியர் அமைச்சர் ஒருவர் பெயரைச் சொல்லி ‘அண்ணந்தான் இன்சார்ஜ். அங்க பேசுங்கன்’னு காலரைத் தூக்கி விடுறான்!?’’ என்கிறார்.

‘‘பிஸ்கெட், வாட்டர் பாட்டில் எல்லாமே ஐந்து ரூபாயிலிருந்து எட்டு ரூபாய் வரை விலை ஜாஸ்தியாத்தான் இருக்கும். சில இடங்களில் பொம்பளைங்க பாத்ரூம் போறதுக்கு மட்டும் அஞ்சு ரூபாய்க்கு அதிகமா வாங்கிறாங்க. ஏன்னா அவங்களால மோட்டலை சுத்தி வேற எங்கேயும் போகமுடியாது. ஆம்பளைக போனா உருட்டுக்கட்டையால அடிச்சு ஆளைகாலி பண்ற மாதிரி அடாவடி வேலைகளாம் பண்ணி பெட்டுல படுக்க வைச்சுருவானுக. இதெல்லாம் பாக்கிறப்ப வயித்தெரிச்சலாத்தான் இருக்கு’’ என்று குமுறுகிறார் இன்னொரு பயணி.

சென்னைக்கு அடிக்கடி சென்று வரும் தனியார் வங்கி ஊழியரோ,

‘‘அரை கப் பால் பதினைஞ்சு ரூபா. காஞ்சு போன எலணி இருபது ரூபா. ஒரு கப் புளிச்ச மாவுல ஊத்துற ஊத்தப்பம் பதினெட்டு ரூபா. ஒரு இட்லி ஆறு ரூபா. அஞ்சு ரூபாய்க்கு பொறாத கூல்டிரிங்ஸ் பதினைந்து ரூபா. இதெல்லாம் எந்த நாட்டுலங்க? அநியாயத்தை யாருமே தட்டிக் கேட்கிறதில்லை. மீறி கேட்டா, ‘ஒருமையில பேசி அந்தப் பகுதியில இருக்கிற ஆளுங்கட்சி மினிஸ்டரைப் போய் பாரு’ங்கன்னு சொல்றானுக.

மாமண்டூர், விக்ரவாண்டி, தொழுதூர், கொட்டாம்பட்டி, துவரங்குறிச்சி, வையம்பட்டின்னு திருச்சியை சுத்தியே எத்தனையோ மோட்டல் கொள்ளைகள் பகிரங்கமா நடந்துட்டு இருக்கு’ இன்னைக்கு இந்த ‘ஹைடெக் தொழில் கொள்ளை’ தமிழகமெங்கும் மக்களை மிதிச்சு கோரமாக தடம் பதிச்சிருக்கு’’ என்றார் முகம் சிவக்க.

இதுபற்றி திருச்சி டெக்கான் நுகர்வோர் உரிமை பாதுகாப்பு கழகத்தின் மாநில செயலாளர் பாரதராஜாவிடம் விளக்கம் கேட்டோம்.

‘‘மோட்டல் கொள்ளையை விட மோசமாக மக்களுக்கு தீங்கிழைக்கிற விஷயம் இன்னைக்கு வேறெதுவும் இல்லீங்க. எந்தவொரு மோட்டல்லயும் விலைப் பட்டியலே வச்சிருக்கமாட்டாங்க. கிராமத்துல திருவிழாவுல போட்டிருக்கும் கடை மாதிரி வாய்க்கு வந்த விலையைச் சொல்லுவாங்க.

லட்சக்கணக்கான மக்களின் (பேருந்து) வழிப்பறியைத் தடுப்பதாக நினைத்துக்கொண்டு மோட்டல்களில் அரசு மற்றும் தனியார் பேருந்துகளை நிறுத்தவே கூடாது என அரசாங்கமே அரசாணை இடுவதைத் தவிர வேறு வழியில்லை ’’ என்கிறார் பாரதராஜா நெத்தியில் அடிச்ச மாதிரி. கவனிக்குமா நம் அரசு?.
_ இரா.கார்த்திகேயன் KUMUDAM.
மற்ற பதிவுகளை படிக்க:>> வாஞ்ஜுர்

0 comments:

இஸ்லாமிய வரலாற்றில்

இஸ்லாமிய வரலாற்றில் பலஸ்தீன் படத்தின் மேல் சொடுக்கி படிக்கவும்.
பலஸ்தீன் வரலாறு

.

.

About This Blog

***இவ்வளைதளத்தின் பதிவுகளை தங்களுடைய வளைத்தளத்தில் மீள்பதிவு செய்பவர்கள் அன்பு கூர்ந்து இவ்வளைத்தளத்தின் சுட்டியை தங்களுடைய மீள்பதிவுகளில் இணைக்குமாறு அன்புடன் கோரப்படுகின்றார்கள்.

Labels

Lorem Ipsum

ISLAM HISTORY.

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP