**Followers.அன்பர்கள்.** தாங்களும் இணையலாமே!!!

முன்னேறும் சந்தர்ப்பங்கள் தானாக வருதில்லை. அவைகள் உருவாக்கப்படுகின்றன”

>> Wednesday, April 28, 2010

என் பாணி தனி பாணி. உன் தனித்துவம் என்னன்னு மொதல்ல கண்டுபடி. அதைக் காட்டு, அதுவென்ன நமது சுயம்?… நமது தனித்தன்மை?… அப்படியெல்லாம் இருக்கின்றனவா என்ன? யாரும் டாக்டராகவோ… நடிகராகவோ… பேச்சாளராகவோ பிறப்பதில்லை.

என் பாணி தனி பாணி .

அவன் இளைஞன். தன்னுடைய விசித்திரமான, வினோதமான, விந்தையான செயல்பாடுகளின் மூலம் பிறரை முகம் சுளிக்க வைக்கும் மனிதன். ஒருமுறை அவனின் அந்த செய்கைகள் குறித்து அவனிடமே கேள்வி எழுப்பப்பட்ட போது அவன் சொன்ன விளக்கம் உண்மையிலேயே கொஞ்சம் அதிர்ச்சியடையத் தான் வைத்தது.

“ஒரு புத்தகத்தில் படித்தேன் ஒரு பெரியவர் சொல்லியிருந்தார்… அவர் இப்படித்தான் செய்வாராம்… அதைத்தான் நானும் பின்பற்றுகிறேன்!”

“ஒரு மீட்டிங்கில் ஒரு தலைவர் பேசிய போது சொன்னார்… இவ்வாறெல்லாம் அவர் இருப்பாராம்… அதைத்தான் நான் பின்பற்றுகிறேன்!”
“இந்த மாதிரியெல்லாம் இருந்தால் உயரலாம் என்று ஒருத்தர் சொன்னார்… அதை நான் ஏற்றுக் கொண்டு அதன்படி இருக்கிறேன்!”

இவ்வாறு யார் யாரோ… எந்தெந்த சூழ்நிலையிலோ… தங்கள் கருத்தாய், தங்கள் அனுபவமாய்… எழுதிவைத்த, பேசி வைத்த விஷயங்களை கண்மூடித்தனமாய் தன் இருப்பு நிலை உணராமல் பின்பற்றி ஒரு குருட்டுத்தானமான வெற்றிக்கு குறி வைக்கும்

அந்த இளைஞன் தொலைத்திருப்பது தன் தனித் தன்மையென்னும் ஒரு தங்கக்காப்பை. வெற்றி பெற்றவர்களின் பாதச்சுவடுகளை பாடச் சுவடிகளாக்கிக் கொள்வது நல்ல விஷயம்தான். மறுப்பேதுமில்லை. அதே நேரம் நமது சுயத்தை, நமது தனித்தன்மையை காணாமல் போகாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டியதும் அவசியமாகின்றதே!

“அதுவென்ன நமது சுயம்?… நமது தனித்தன்மை?… அப்படியெல்லாம் இருக்கின்றனவா என்ன? என்று கேட்கும் நிலையில் இன்றும் பலர் இருந்து வருவதுதான் வருத்தப்பட வைக்கும் யதார்த்த நிலை.
தனித்தன்மை

நமக்கென ஒரு நம்பகமான துறை, நாகரீகமான கொள்கை, ஒரு நயமான ஒழுங்கு, ஒரு நயமான பேச்சுத் தொனி, ஒரு நளினமான செயல்பாட்டு முறை ஆகியவற்றைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு, எந்த நிலையிலும் அதிலிருந்து விலகாமலும், அது சிதைவடையாமல் வாழ்ந்து காட்டுவதுதான் தனித்தன்மை.

சிலருக்கு தனித்தன்மையென்பது பிறவியிலேயே அமைந்து விடுவதுண்டு ஒவ்வொருவருக்குள்ளும் ஒவ்வொரு விதமான திறமைகள் மறைந்திருக்கும் அதைக் கண்டறிந்து வெளிக் கொணர்தல் வேண்டும்.

யாரும் டாக்டராகவோ… நடிகராகவோ… பேச்சாளராகவோ பிறப்பதில்லை. தன்னிடமுள்ள தனித் தன்மையைக் கண்டுபிடித்து அதையே சிந்தித்து பல வடிவம் கொடுத்து முழுமை பெறும் போது அது மற்றவர்களால் ஏற்கப்பட்டு புகழ் பெறுவதுண்டு. ஆனால் பலருக்குத் தனித்தன்மையானது பழக்கத்தின் மூலமும், வாழும் சூழ்நிலைகளாலும் அமைவதுண்டு.

நாம் விரும்பும் துறை ஒன்றாயிருக்க, பணியாற்றும் துறை வேறாக அமைந்துவிடும் சூழ்நிலையிலும், இந்தத் துறையில் இருந்து கொண்டே நம் தனித்தன்மையை அதாவது நம் மனம் விரும்பும் துறையிலும் ஈடுபடலாம். வெற்றி காணலாம்.

அதற்கு பல எடுத்துக்காட்டுகளும் உண்டு. டெலிகிராப் கண்டு பிடித்த மோர்ஸ் என்ற விஞ்ஞானி ஓவியக் கலைஞராக முதலில் இருந்து தன் மனம் விரும்பிய டெலிகிராப் பற்றிய சிந்தனைகளைத் தொடர்ந்து வளர்த்து இறுதியில் டெலிகிராப்பைக் கண்டுபிடித்து பெரும் புகழ்பெற்றார்.

அதே போல் ஜோசப்-டி-நீப்ஸே என்பவர் படைத் துறையில் லெப்டினன்ட்டாக பணியாற்றி விட்டு, பிறகு ஆளுனராகவும் சிறிது காலம் இருந்து விட்டு, கடைசியில் தன் மனம் இஷ்டப்பட்ட ஆராய்ச்சித் துறையில் ஈடுபட்டு போட்டோ கிராஃப்பைக் கண்டு பிடித்தார்.

காப்பி அடிப்பதல்ல தனித்தன்மை -

முன்னமே சொன்னது போல் தனித்தன்மை என்பது நமக்கான ஒரு பாணி ஒருவரைப் பார்த்து அப்படியே காப்பி அடிப்பதோ… அவர் எப்படியெல்லாம் செய்கிறாரோ, செயல்படுகிறாரோ… அப்படியே நடப்பது தனித்தன்மை ஆகாது.
ஒரு திரைப்படத்தில் ஒரு காட்சி வரும். இளைஞனொருவன் ஓர் இயக்குனரிடம் நடிக்க சந்தர்ப்பம் கேட்டுச் செல்கிறான். “என்ன உன் திறமை? சொல்லு!” என்று அந்த இயக்குனர் கேட்க,

“சார். நான் எம்.ஜி.ஆர் மாதிரி கத்திச் சண்டை போடுவேன்! சிவாஜி மாதிரி வசனம் பேசுவேன்! ரஜனி மாதிரி ஸ்டைல் பண்ணுவேன், கமல் மாதிரி டான்ஸ் ஆடுவேன்!” என்கிறான்.

“தம்பி, நான் கேட்டது உன்னோட திறமையை. நீ சொன்னது மற்றவர்களோட திறமையை. உன் தனித்துவம் என்னன்னு மொதல்ல கண்டுபடி. அதைக் காட்டு. அப்பத்தான் நீ மேலே வருவே!” என்று சொல்லி அவனைத் திருப்பி அனுப்பி விடுகிறார் அந்த இயக்குனர்.உண்மைதானே?

பிறரைப் பார்த்து அப்படியே பின்பற்றுவது நம் சோம்பேறித்தனத்தைக் காட்டுவதோடல்லாது நம்மிடம் தனித்தன்மை என்று ஒன்று இல்லை என்பதை தெளிவாக்கி விடுகின்றதே!

நடிக்கச் சந்தர்ப்பம் கேட்டுச் சென்ற அந்த இளைஞன் பிறரின் பிம்பமாகத் தன்னை அடையாளம் காட்டிக் கொள்ளாமல் தனது தனித்தன்மையைப் பயன்படுத்தி ஒரு புதுமையான வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்திக் காட்டியிருந்தால் சந்தர்ப்பம் அவனை நாடி ஓடி வந்திருக்குமே!

“முன்னேறும் சந்தர்ப்பங்கள் தானாக வருதில்லை. அவைகள் உருவாக்கப்படுகின்றன” என்பதுதானே ஒரிஸன் ஸ்வெட் மார்டெனின் கூற்று.
பன்னாட்டு நிறுவனமொன்றில் உற்பத்திப் பிரிவில் மேலாளராக இருக்கும் நண்பரொருவரை சமீபத்தில் சந்தித்தபோது அவர் முகம் வாட்டமாயிருக்கக் கண்டு மெல்ல விசாரித்தேன். “பொல..பொல”வென்று கொட்ட ஆரம்பித்துவிட்டார்.

“அதையேன்பா கேட்கறே?.. நேத்திக்கு ரீஜனல் மேனேஜர் வந்திருந்தார்.. அவரோட ஒரு மீட்டிங்… அந்த மீட்டிங்ல அவர் கேட்ட கேள்வியில் ஆடிப் போய்விட்டேன்”!

“அப்படி என்ன கேட்டுட்டார்?” இது நான்.
“கிட்டத்தட்ட ரெண்டு வருஷத்துக்கும் மேலே புரடக்ஷன் டிபாரட்மெண்ட்ல இருக்கும் என்கிட்ட என்னுடைய வேலை குறித்து கேட்டார்…. நானும் சொன்னேன்! கடைசியில அவர், “ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி நீங்க வேலைல சேர்ந்தப்ப இங்க எந்த முறையில உற்பத்தி செய்யப்பட்டு வந்ததோ அதையேதான் நீங்களும் மாறாம பின்பற்றி வந்திருக்கீங்க! இதில் உங்க தனித்திறன் எங்கே இருக்கிறது?

யாரோ, எப்பவோ ஏற்படுத்தி வைத்திருந்த அதே முறையைக் கடைப்பிடிப்பதற்கு நீங்கள் எதற்கு? யோசிங்க சார்!… புதுப்புது முறைகள் பற்றி சிந்தியுங்கள் சார்… இருக்கிற உற்பத்தி முறைகளில் என்னென்ன மாற்றங்களை… எப்படியெப்படிக் கொண்டு வரலாம்… அதன் மூலம் உற்பத்திச் செலவு எவ்வளவு குறையும்… தர மேம்பாட்டை எப்படி குறைந்த செலவிலேயே பண்ண முடியும்னு சிந்தனை பண்ணுங்க சார்”ன்னு சொல்லிவிட்டு அவர் பாட்டுக்குப் போயிட்டார்..

நான்தான் இங்க மூட் அவுட்டாகிக் கிடக்கிறேன்!” என்று இந்த நண்பர் சொல்லிவிட்டு, ஏதோ அவர் தவறு செய்யாதது போலவும் அந்த ரீஜனல் மேனேஜர் சொல்லிச் சென்றதுதான் தவறு என்பது போலவும் பேச, எனக்கு அவரை நினைத்து பரிதாபப்படுவதா… அல்லது கோபப்படுவதா என்று புரியவில்லை.

சிந்தனை செய்யும் தனித்திறன் காரணமாகவே மனிதன் உயர்ந்தவனாக கருதப்படுகின்றான். அவ்வாறு சிந்திக்க மறந்த காரணத்தால்தான் நண்பர் நேர்மையாளராயிருந்தும் மேன்மையடைய முடியாது போய்விட்டது. இயங்கியல் முறையில் மனிதன் செயல்பட்டுக் கொண்டே இருக்க வேண்டும். ஒரு தேடல் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டே கடைசி வரை செயல்பட்டுக் கொண்டே இருக்க வேண்டும்.

எதிர்ப்பிலும் வளர வேண்டும் தனித்தன்மை

“ஒரு செயலை இப்படி செய்யலாம் என்று நினைக்கிறேன். ஆனால் வழக்கமாக எல்லோரும் இதை வேறு மாதிரிதான் செய்வார்கள் நான் சற்று மாற்றி புதுமையாகச் செய்தால் ஏற்றுக் கொள்வார்களோ, மாட்டார்களோ பயமாக இருக்கின்றதே!” என்று தயங்க வேண்டியதில்லை… தயங்கினால் அது வெற்றியாவதில்லை.

நம் தனித்தன்மையை வெளிப்படுத்தும் விதமாக நாம் முதலில் ஒரு புதுமையைச் செய்தால் உலகம் அதை நிச்சயம் ஏற்றுக் கொள்ளாது. பலமான எதிர்ப்புகளும் பல்வேறு பேச்சுகளும் கட்டாயம் நமக்குக் கிடைக்கும். அவற்றின் காரணமாக மனம் சோர்ந்து விடாமல் நம்பிக்கையோடு… தனித்தன்மையோடு கவனம் செலுத்தினால் கண்டிப்பாக சாதிக்கலாம்.

நியூட்டன் புவி ஈர்ப்பு விசையைச் சொன்னபோது அவரைப் பைத்தியக்காரன் என்று கூறி ஏளனம் செய்த கூட்டம் பின்னாளில் அதை ஏற்றுக் கொண்டது.

பிரசவ வேதனை தெரியாமல் இருப்பதற்காக குளோரோபார்ம் மயக்க மருந்தை சர்.ஜான் சைமன் கண்டுபிடித்துச் சொன்ன போது, இயற்கையான வலியுடன் பெறவேண்டிய குழந்தைப் பேற்றை மயக்க மருந்து மூலம் பெறுவதால் தாய்ப்பாசம் இருக்காது என எதிர்த்தனர். ஆனால் அந்தக் கண்டுபிடிப்புதான் இன்று வரை நடைமுறையில் இருந்து கொண்டிருக்கின்றது.

உலகப் புகழ் பெற்ற நகைச்சுவை மன்னன் சார்லி சாப்ளினை எடுத்துக் கொள்ளுங்கள். குள்ளமான உருவம், ஒல்லியான தேகம், குழி விழுந்த கண்கள், ஒட்டிய கன்னம். ஆனாலும் எப்படி சாதனை படைத்தார்?… தன் தனித்தன்மை மீதிருந்த நம்பிக்கை.

பேசும் படம் பிரபலமாகி வெற்றி நடை போட்டுக் கொண்டிருந்த காலக் கட்டத்தில் பேசாத ஊமைப் படத்தை எடுத்து உலகையே தன் பக்கம் திருப்பினார். “தொள…தொள” பேண்ட், இறுக்கமான சட்டை, சின்னத் தொப்பி, கைத்தடி, ஹிட்லர் மீசை, கால் மாற்றி போடப்பட்ட ஷு, வாத்து நடை போன்ற சாதாரணங்களைக் கொண்டு சாதித்தார்.

ஆரம்பத்தில் அனைவரும் ஏளனமாகச் சிரித்தார்கள். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக ரசிக்க ஆரம்பித்து மகிழ்ச்சியாக சிரித்தார்கள். கடைசியில் தேடிச்சென்று ரசிக்க போட்டா போட்டி போட்டனர். மக்களைச் சிரிக்க வைத்துப் பார்த்த சார்லி சாப்ளின் பிறர் சொல்ல பயந்த விஷயங்களைத் துணிச்சலாகச் சொல்லி மக்களைச் சிந்திக்கவும் வைத்தார். தன் தனித்தன்மையை மட்டுமே நம்பி வெற்றி பெற்ற மனிதர் என்பதற்கு சாப்ளினை விட வேறு சிறந்த உதாரணமே இல்லை எனலாம்.

தனித்தன்மையின் தளபதிகள்

உலக வரலாற்றில் தனித்தன்மையால் தனிப்புகழ் பெற்ற சாதனையாளர்களை கூர்ந்து நோக்கினால் இந்த நிலையில் இருந்தவர் எப்படி அந்த நிலைக்கு உயர்ந்தார் என வியப்பாக இருக்கும். வறிய குடும்பத்தில் தோன்றியிருப்பார். வானளாவிய புகழைப் பெற்றுத் திகழ்வார்.

மகாகவி ரவீந்திரநாத் தாகூர் தன் குடும்பத்தில் பதினான்காவது பிள்ளையாகப் பிறந்தவர். தன் உயரிய தனித்தன்மை மிளிரும் கவிதை வரிகளால் நோபல் பரிசைப் பெறும் அளவிற்கு உயர்ந்தார்.

செருப்பு தைக்கும் தொழிலாளியின் மகனாகப் பிறந்த ஸ்டாலின் தனது தனித்தன்மை உழைப்பால் பொதுவுடமைக் கொள்கையை நடைமுறைப்படுத்தி உலகப் புகழோடு வாழ்ந்தார்.

ஏழை குடும்பத்தில் பிறந்து வறுமையில் வாடிய சட்ட மேதை அம்பேத்கார் தாழ்த்தப்பட்ட சமுதாயம் தலை நிமிர்ந்து வாழ உழைத்துப் புகழ் பெற்றார்.
இரவு நேரங்களில் குடித்து எறியப்பட்டு சிதறிக் கிடக்கும் பீர் பாட்டில்களை எடுத்து விற்றும், கோவா கடற்கரையில் கேக் விற்றும் பிழைத்துக் கொண்டிருந்த அருந்ததிராய், கரடுமுரடான வாழ்க்கைப் பாதையில் தாம் சந்தித்த பிரச்சினைகளையும், எதிர்கொண்ட பல சிக்கல்களையும் தன் தனித்தன்மையால் வெற்றி கொண்டு தன் முதல் நூலிலேயே முத்திரை பதித்து தனிப்புகழ் பெற்றார்.

“எழுந்திருங்கள் விழித்துக் கொள்ளுங்கள் இனியும் தயங்க வேண்டாம், எல்லாத் தேவைகளையும், துன்பங்களையும் நீங்குவதற்கான தனித்தன்மை பேராற்றல் உங்கள் ஒவ்வொருவரிடத்தும் உறைந்துள்ளது. அதைத் துணிவோடு பயன்படுத்துங்கள். துன்பங்கள் திசைமாறிப் போய்விடும்” என்பது சுவாமி விவேகானந்தரின் வீர முழக்கம். நமக்குள்ள 24 மணி நேரத்தில் நமக்காகவும், நமது வளர்ச்சிக்காகவும் ஒரு மணி நேரத்தை ஒதுக்கி, சிந்தித்து, நம்மையே நாம் ஆராய்ந்து, நமது தனித்தன்மையை புரிந்து கொள்ளுதல் நிச்சயம் மேன்மை தரும்.

எண்ணத்தில் வளமை வேண்டும்,
எடுத்ததெல்லாம் முடிக்க வேண்டும்,
நினைத்தது நடக்க வேண்டும்,
செய்வதில் புதுமை வேண்டும்,
புதுமையிலும் தனித்தன்மை வேண்டும்,
தனித்தன்மையில் சிறக்க வேண்டும்,
உலகமே போற்ற வேண்டும்.
THANKS TO SOURCE:- NAMADHU NAMBIKKAI..
**************

மேலும் படிக்க... Read more...

அப்படி என்ன இருக்கிறது இந்த மஞ்சளிலே?

>> Friday, April 23, 2010

பிணிக்கு மருத்துவமணை எதற்கு? சமயலறை இருக்கவே இருக்கு !!

அப்படி என்ன இருக்கிறது இந்த மஞ்சளிலே?

சிறுநீரகத்தில் கற்கள் இருக்கிறதோ? தொண்டைப் புண்ணுக்கு, நகச்சுற்றுக்கு, மூக்கடைப்பு, இரத்தக் கட்டு, கபத்துக்கும், வாதத்துக்கும், புண், சிரங்கு, வேனில் கட்டிக்கு, குழந்தைகளின் தொடர்ந்த இருமலுக்கு,

குடல் பிணிகள், பூச்சித் தொல்லை, கண் உஷ்ணத்தினால் எரிச்சல், புற்றுநோய் வராமல் தடுக்கும்

அப்படி என்ன இருக்கிறது இந்த மஞ்சளிலே? சொல்லுகிறேன் கேட்டுக்கங்க.

கபத்துக்கும், வாதத்துக்கும் இது ரொம்ப ரொம்ப நல்லதுங்க.
பையன் விளையாடும்போது அடிபட்டுட்டான். இரத்தக் கட்டு வேற. என்ன செய்யலாம்? மஞ்சளை அரைத்துப் போடுங்க. இரண்டு அல்லது மூன்று முறை போட்டதுமே குணம் தெரியுமே?

புண், சிரங்கு, வேனில் கட்டிக்கு, மஞ்சளோட கொஞ்சம் வேப்பிலையும் சேர்த்து, நீர்விட்டு மைபோல் குழைய அரைத்துப் போட்டுவர விரைவில் ஆறிவிடும்.

பழுத்தும் உடையாத வேனில் கட்டியை உடையவைக்க மஞ்சளையும், கார சோப்பையும் (துணிக்குப் போடும் சோப்பு) இழைத்துப் போட்டால் உடைந்து விடும்.

குழந்தைகளின் தொடர்ந்த இருமலுக்கு மஞ்சள் கைகண்ட மருந்து. வெந்நீரில் சிறிது பெருங்காயம், மஞ்சள் தூள் கலந்து பருகக் கொடுத்தால் இருமல் நின்றுவிடும்.

மூக்கடைப்பு ஏற்பட்டால் மஞ்சளைச் சுட்டு அந்தப் புகையை முகர்ந்தால் சரியாகி விடும்.

விரளி மஞ்சள் தூளை நல்ல எண்ணெயில் இட்டுக் காய்ச்சவும். இதைத் தேய்த்துக் குளித்தால், மூக்கில் நீர்வடிவது நின்று விடும்.

வயிற்றில் இருக்கும் கிருமிகளைப் போக்கும் சக்தி மஞ்சளுக்கு உண்டு. பச்சை மஞ்சளை அரைத்து சில நாட்கள் வெறும் வயிற்றில் காலை சாப்பிட்டு வந்தால் குடல் பிணிகள் தீரும். பூச்சித் தொல்லை நீங்கும்.

தொண்டைப் புண்ணுக்கு மஞ்சள் தூளை பாலில் கலந்து சாப்பிட்டு வர, விரைவில் குணமாகும்.

சிறுநீரகத்தில் கற்கள் இருக்கிறதோ?

கவலைப் படாதீங்க, காய்ந்த மஞ்சள், வெல்லம் இரண்டையும் சமமா எடுத்துக்குங்க. அரிசி களைந்த நீர்விட்டு அரைத்து வடிகட்டி சாப்பிட்டு வந்தால், சீறுநீரகக் கற்கள் கரைந்து சிறுநீரில் வெளியேறி விடும்.

நகச்சுற்றுக்கு மஞ்சள் நல்ல மருந்து. சிறிது மஞ்சள்பொடி, சுண்ணாம்பு இரண்டையும் குழைத்துப் போட்டு வந்தால் விரைவில் குணம் தெரியுமே.

கண் உஷ்ணத்தினால் எரிச்சல் உண்டாகி அவதிப்பட்டால் மஞ்சள் கஷாயம் போட்டு, ஆறிய பின் அதனால் கண்களைக் கழுவி வர வேண்டும்.

மஞ்சள் நீரில் நனைத்த துணியால் கண்களை ஒற்றி எடுத்தாலும் நல்லது. உஷ்ணம் மற்றும் கண் சிவப்பும் கூட மாறி குணமாகி விடும்.

மஞ்சள், மிளகு இரண்டையும் சம அளவு எடுத்து விழுதாக அரைக்க வேண்டும். இந்த விழுதை மோரில் கலக்கி இளம் பெண்கள் சாப்பிட்டு வந்தால் மாதவிடாய்க் காலங்களில் வரும் வயிற்று உபாதை, தலைவலி எல்லாம் காணாமற் போய் விடும்.

சமையலில் மஞ்சள் எவ்வளவுக்கு எவ்வளவு சேர்க்கிறோமோ, அவ்வளவுக்கு அவ்வளவு நல்லது.

புற்றுநோய் வராமல் தடுக்கும் சக்தி மஞ்சளுக்கு உண்டென்றால், இதன் மகிமை சொல்லவும் இயலுமோ?

அடிபட்ட இடத்தில் இரத்தக்கட்டுடன், வீக்கமாய் இருப்பின், அரிசிமாவு, மஞ்சள், விளக்கெண்ணெய் கலந்து இரும்புக் கரண்டியிலிட்டுக் கிண்டினால் திரண்டு வரும். சூட்டுடனே, மெல்லிய துணியில் அதனை வைத்து, முடிச்சிட்டு, ஒத்தடம் கொடுத்தால், வீக்கம் குறைந்து, இரத்தக் கட்டும் குறைந்து விடும். வலிக்கு இதமாக இருக்கும்.

இருமல் தொடர்ந்து தொல்லை செய்கிறதா? கவலை வேண்டாம். மஞ்சள் தூளை தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தால் குணம் ஆகிவிடும்.
தோல்நோய்கள் அண்டாது.

இப்போது ஒரு அழகுசாதனக் குறிப்பு சொல்லட்டுமா?
மஞ்சள், வேப்பம்பூ, வெள்ளரிக்காய் மூன் றையும் அரைத்து உட லில் பூசிக் குளித்து வந்தால் நாளடைவில் சருமம் நல்லநிறம் பெறும்.

அதுமட்டுமின்றி இரவு தூங்கப் போவதற்கு முன்னால் காய்ச்சிய பசும்பாலில், தேன், மஞ்சள் பொடி, சிறிது குங்குமப்பூ சேர்த்து சாப்பிட்டு வந்தால், உடம்பும், முகமும் பளபள என்றாகி விடுமே!

அட எங்கே போறீங்க? சமையலறையில் மஞ்சள் இருக்கான்னு பார்க்கக் கிளம்பிட்டீங்களா?

தனியா தனியான்னு ஒரு சாமான். அட அதுதாங்க கொத்துமல்லி விதை. அது இல்லாம சமையலா? சரிதான் சமையலுக்கு மட்டுமா அது பயன்படுது? இதோ இப்ப பார்க்கலாமா அது இன்னும் எதுக்கெல்லாம் பயன்படுதுங்கிறத?

காலைல படுக்கைய விட்டு எழுந்ததும் இலேசாய்த் தலை சுத்துது. நெற்றிப்பொட்டு இரண்டும் விண் விண்ணுனு தெறிக்குது. பித்தமா இருக்குமோ? வாந்தி வேற வரமாதிரி இருக்கா?

கவலையே படாதீங்க! ஒரு டேபிள் ஸ்பூன் தனியா, சிறு இஞ்சித் துண்டு, கிஸ்மிஸ் (அதுதாங்க உலர்ந்த திராட்சை) பழம் ஐந்து எல்லாத்தையும் அம்மியில வெந்நீர் விட்டு அரைக்கணும். பிறகு வடிகட்டி, தேன் கலந்து அரை டம்ளர் குடிங்க. புத்துணர்ச்சியோட வேலைகளைப் பார்க்கத் துவங்குவீங்களே. இதை `மல்லி சொரஸம்' அப்படீன்னு சொல்வாங்க. இது அந்தக் காலத்துல பெரியவங்க கையாண்ட முறை.

உஷ்ணத்தால் சில பேருக்கு பேதியாகும். கடுப்பா இருக்கும். ஏன் எரிச்சல் கூட ஏற்படும். இதுக்கு மருந்து இதோ. தனியாவைச் சிறிது எடுத்து வாணலியில் வறுத்து தூள் செய்துக்கணும். அதோட சமஅளவு சர்க்கரை கலந்து 1 ஸ்பூன் எடுத்து வாயில் போட்டு, கொஞ்சம் நீர் சேர்த்து சாப்பிடவும்.

இப்படி 3 வேளை சாப்பிட்டா பேதியும் குணமாகும். வயிற்றுவலி, எரிச்சல் எல்லாம் நீங்கி விடும்.

சுக்கு மல்லி காபி. இப்பவெல்லாம் இது ரொம்பப் பேசப்படற ஒரு பானம். சுக்கைப் பொடி செய்துக்கவேணும்.

தனியாவை லேசா வறுத்துப் பொடி செய்து சமஅளவு இரண்டையும் கலந்து, இரண்டு அல்லது மூன்று ஸ்பூன் பொடியோட ஒரு டம்ளர் நீர் விட்டுக் கொதிக்க வைங்க. பிறகு இறக்கி வடிகட்டி பால் சேர்த்து, வெல்லம் அல்லது கருப்பட்டி சேர்த்துக் குடிச்சா, ஆஹா என்ன சுவை! உடம்பிற்கும் ரொம்ப நல்லது. தாகம், நாவறட்சி தீரும். உடம்பு சூட்டுக்கு, அதாவது உஷ்ண உடல்வாகு கொண்டவங்க, வெறும் தனியா கஷாயம், பால், சிறிது சீனி சேர்த்து அருந்தலாம்.

மேலும் படிக்க... Read more...

இப்படித்தான் சாப்பிடணும் பழங்களை...!!!.

>> Thursday, April 22, 2010

காலையில் படுக்கையில் இருந்து எழுந்ததும் வெறும் வயிற்றில் பழங்கள் சாப்பிட்டால் உடலில் சேர்ந்திருக்கும் நச்சுப்பொருள்களை மலமாக வெளியேற்றும்.

இதனால், உடலுக்கு புத்துணர்ச்சியும், தெம்பும் கிடைக்கும்.

சாப்பிட்ட பின்பு பழம் சாப்பிட்டால் முதலில் பழம் தான் ஜீரணமாகும். உணவுகள் செரிக்க கூடுதல் நேரமாகும்.

உட்கொண்ட உணவுகள் செரிக்காத நிலையில், உடனே பழங்கள் சாப்பிடுவதால் வயிற்றுக்குள்ளே செரிமானமாகிக் கொண்டிருக்கும் உணவு கெட்டுப் போகும்.

அதனால், சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவோ அல்லது பின்னரோ பழங்கள் சாப்பிடுவதுதான் உடலுக்கு ஆரோக்கியம் தரும்.

பழங்களை தனியாக சாப்பிடாமல், அதனுடன் இனிப்பு சேர்த்து மிக்சியில் போட்டு அரைத்து சாறெடுத்து சாப்பிடும் வழக்கம் பலரிடம் உள்ளது. இது தவறு.

பழங்களை சாறு பிழிந்து சாப்பிடுவதைவிட பழமாக அப்படியே சாப்பிடுவதுதான் நல்லது.

அவ்வாறு சாப்பிடுவதால் நார்ச்சத்து நிறைய கிடைக்கும். சத்தும் முழுமையாக கிடைக்கும்.

மேலும் படிக்க... Read more...

ஸ்ட்ராங் டீ !! ஸ்லோ பாய்ஸன் ? தேநீர்ப் பிரியர்களே உஷார் !!

>> Wednesday, April 21, 2010

ஸ்ட்ராங் டீ ஸ்லோ பாய்ஸன் - கதற வைக்கும் கலப்படம்! தேநீர்ப் பிரியர்களே உஷார்

சோர்வைப் போக்குவதற்கு நாம் நம்பிக் குடிக்கிற டீயே நம் ஆரோக்கியத்திற்கு ஆப்பு வைக்கிற அநியாயம், அவ்வளவு சீக்கிரம் முடிவுக்கு வராது போலிருக்கிறது.

தமிழகம் முழுவதும் அடுத்தடுத்து ஆயிரக்கணக்கான கிலோ அளவில் சிக்கும் கலப்பட டீத்தூள் ரகங்கள் விடுக்கிற எச்சரிக்கை இதுதான்.

மரத்தூள், புளியங்கொட்டை, குதிரைச்சாணம், இலவம்பஞ்சு விதை என காலத்துக்கும் தொழில் நுட்ப வசதிக்கும் தகுந்தபடி கை வைக்கிற கலப்படக்காரர்களின் தற்போதைய முதலீடு முந்திரக்கொட்டையின் மேற்புறத்தோல்.

"பழுப்புநிறத்தில் உள்ள அந்தத் தோலை வறுத்து, பொடியாக்கி, டீயில் கலந்துட்டா குறைந்த அளவு விற்பனையில் அதிக லாபம் பார்க்கலாம்.

குடிக்கிறப்போ டீ அடர்த்தியாகவும் இருக்கும். பச்சையாக இருக்கும்போது சாப்பிட்டால், நம் வாயை புண்ணாக்கிடுற முந்திரிக்கொட்டைத் தோல் நல்லா காய்ஞ்ச பிறகும் உடலுக்கு பாதிப்பைத்தானே ஏற்படுத்தும்?'' என்று கேட்கிறார், "கன்ஸ்யூமர் அசோசியேஷன் ஆஃப் இந்தியா'வின் நிறுவனர் தேசிகன்.

தேயிலையில் உள்ள இரண்டு இலை, ஒரு மொட்டு மட்டும்தான் டீத்தூளாக பயன்படுத்தப்பட முடியும். ஆனால் இதுவரை கழிவாக ஒதுக்கப்பட்ட காம்பு, தழை போன்ற ஃபைபர் சமாச்சாரங்களையும் டீயில் தற்போது கலக்கிறார்களாம். டீத்தூளின் எடையைக் கூட்டத்தான் இந்த டெக்னிக்.

இன்னொரு பக்கம் டார் டாராசைன், அட்ராசைன், கார்மோசைன், சன்செட் யெல்லோ என நீள்கிறது.

டீயின் கலருக்காக கலக்கப்படுகிற கெமிக்கல்களின் பட்டியல். ""இந்த மோசடிக்கு ஒரு வகையில் நுகர்வோர்தான் காரணம். டீன்னாலே செம்மண் கலர்ல, "ஸ்ட்ராங்' ஆக இருக்கும்கிற மக்களின் தவறான நம்பிக்கையத்தான் கலப்படக்காரர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கிறாங்க'' என்று எச்சரிக்கிறார், உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையர் ராஜராமன்.

I.S.O தரச் சான்றிதழ் பெற்ற நிறுவனங்கள் முதல் லோக்கல் பார்ட்டிகள் வரை இந்த கலப்படத்தை, அவரவர் தங்கள் சக்திக்கு ஏற்ப செய்து வருகின்றனர். சரி, இந்தக் கலப்பட டீத்தூள் என்ன செய்யும்? இதற்கு உணவுப் பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப வல்லுனர் சுந்தர் தருகிற பதில், ""டீயில் கலக்கப்படுகிற கலர்கள் முதலில் கிட்னியைப் பாதிக்கும்.

பிறகு வயிற்றுப் பகுதிகளில் பாதிப்பை ஏற்படுத்தும். கலப்பட டீயை அளவுக்கு மீறி குடிச்சா, கேன்சர் வர்றதுக்கும் வாய்ப்பு இருக்கு. துணிக்குப் போடற சாயம் கலந்த டீ என்றால் இன்னும் அபாயம்!'' டீக்கடைகளைப் பார்த்தாலே நுழைந்து விடுகிற தேநீர்ப் பிரியர்களே உஷார்

மேலும் படிக்க... Read more...

வெற்றியை விதைதிடுவோம்.வீழ்ச்சியை வென்றிடு! எழுச்சியாய் நின்றிடு!! வலையைக் கிழித்து வெளியேறுங்கள்.

>> Tuesday, April 20, 2010

வெற்றி அடைய வேண்டுமா? அனைவரும் அவசியம் படிக்க வேண்டியது
1.வெற்றியை விதைதிடுவோம்.

2.வெற்றிக்கு வழிகாட்டும் விழிப்பணர்ச்சி

3.வீட்டுக்குள் வெற்றி.

4.வீழ்ச்சியை வென்றிடு! எழுச்சியாய் நின்றிடு!!

5.வலையைக் கிழித்து வெளியேறுங்கள்.

1.வெற்றியை விதைதிடுவோம்

படியேற பயந்தேன். ஏறிய பின் வியந்தேன். வெற்றியின் தூரம் வெகு தூரம் இல்லை என்று.

நம்மிடம் உள்ள திறமைகளை வெளிப்படுத்த கிடைக்கும் சந்தர்ப்பங்களை சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நாம் என்ன நினைக்கிறோமோ அதை அடைவதற்கான முயற்சியின் முதல் படிதான் நமக்கு கிடைக்கின்ற வாய்ப்புகளை பயன்படுத்துவது. விதையை விதைக்கும்போது அந்த விதை விதைப்பதற்கு ஏற்றதா என்பதை எப்படி பரிசீலிக்கும் அனுபவம் முக்கியமோ அதுபோல கிடைக்கின்ற வாய்ப்புகளை சரிதானா என்பதை பரிசீலித்து விட்டு விதையை சரியாக உழவு செய்யப்பட்ட நிலத்தில் பயிரிடுவது போல நமது உள்ளத்தில் விதைத்துவிடவேண்டும்.

நிலத்திற்குள் உள்ள விதைக்கு எப்படி நல்ல தண்ணீரும், அதை பராமரிக்கும் ஒரு தோட்டக்காரனும் முக்கியமோ, அதேபோல் நமது உள்ளத்தை நல்ல அனுபவமிக்கவர்களின் புத்தகத்தின் மூலமாகவும், நல்ல நண்பர்கள் மூலமாகவும், மனதில் உள்ள விதைக்கு உரமூட்ட வேண்டும். வளர்ந்து வருகிற மரம் நிச்சயம் காய் கொடுக்கும் என்ற நம்பிக்கை எப்படி வெற்றி பெறுகிறதோ, அதே போல் நமக்குள் இருக்கும் இந்த தாக்கத்திற்கு வெற்றி கிடைத்தே தீரும்.

ஏழ்மையாக உள்ளவர்கள்கூட எளிதாக வெற்றி பெறவேண்டும் என்றால் ஒவ்வொருவரும் தனக்கு ஏற்படுகிற தடைகளை கண்டு தயங்காமல் தனது பயணத்தை துவங்க வேண்டும். அந்த பயணத்தில் வரக்கூடிய இடையூறுகள், எதிர்ப்பு, ஏளனம், எதிர்பார்ப்பு ஆகிய மூன்றும்தான். ஒவ்வொரு மனிதனும் இந்த மூன்றையும் கடந்துதான் வெற்றி பெறமுடியும்.

இதை வெல்வது சுலபமா, சிரமமா?

நிலத்தில் விதைத்த விதை காய்க்குமா? காய்க்காதா? என்ற சந்தேகம் இல்லாமல் நிச்சயம் காய்க்கும் என்ற நம்பிக்கை எப்படி சாத்தியமோ அதே போல் நமது இலக்கை நோக்கி செல்லக்கூடிய இடத்திற்கு இதுபோன்ற தடங்கல்களை தகர்ப்பது என்பது மிக சாதாரணமாகிவிடும்.

பிரச்சினைகளை கண்டு நாம் ஓடத் துவங்கினால் அது நம்மை துரத்த ஆரம்பிக்கும். அதே பிரச்சினையை எதிர்நோக்கி இருந்தால் எந்த பிரச்சினையாக இருந்தாலும் சுலபமாக தீர்வு காண முடியும்.

ஏழ்மையாக இருந்த ஒரு இளைஞன் ஒரு ஓட்டப் பந்தயத்தில் பங்கு பெற நினைத்து தன்னை தயார்படுத்துவதற்காக தினமும் அதற்கு தேவையான பயிற்சியை மிக நேர்த்தியாக செய்து வருகிறான். தனக்குள் வெற்றி பெறமுடியும் என்ற நம்பிக்கை ஆழமாக பதிய வைத்துக்கொண்டு பயிற்சியை தொடர்கிறான்.

போட்டியின் தேதி அறிவிக்கப்படுகிறது. அந்த போட்டியில் கலந்து கொள்ள தனது பெயரை பதிவு செய்யும்போது அனைவரும் அவரின் தோற்றத்தைப் பார்த்து உனக்கெல்லாம் இந்த போட்டி தேவைதானா, வேண்டாம் என்று எதிர்த்தவர்கள் பலர்.

அதையும் மீறி பெயர் பதிவு செய்தாகிவிட்ட பிறகு “இவனுக்கு எல்லாம் ஆசையை பார், எவ்வளவு நாள் விளையாட்டில் இருப்பவர்கள் எல்லாம் ஓடும்போது இவன் போய் அவர்களோடு சேர்ந்து ஓட நினைக்கிறான் பாரு” என்று ஏளனமாக பேசுபவர்களையும் தாண்டி, போட்டியின் நாளை எதிர்நோக்கி இருந்தவனுக்கு போட்டியில் ஓட வாய்ப்பு கிடைத்தது.

அப்பொழுதுகூட இவனுக்கு ஆறுதல் சொல்லக்கூட ஆள் இல்லை. அதையும் மீறி வெற்றி பெறுவது மட்டுமே தனது இலக்கு என்பதைத் தவிர வேறு எந்த எதிர்பார்ப்பும் இல்லாத அவனுக்கு அருகில் இருந்தவர்கள் அனைவரின் எதிர்பார்ப்பும் இவன் ஓடுகிறான் வெற்றி பெறுவானா என்றே இருந்தது. ஆனால் போட்டி ஆரம்பித்தவுடன் “மடை திறந்த வெள்ளம்” போல் ஓடுகிறான். மிகப்பெரிய வெற்றியை அடைகிறான்.

வெற்றிக்குப் பிறகு ஏராளமானோர் பாராட்டுகிறார்கள், மாலை போடுகிறார்கள், வெற்றி பெறுவாய் என்பது எங்களுக்குத் தெரியும் என்று வாய் கூசாமல் பொய் சொல்லும் கூட்டம். இவைகள் எப்படி சாத்தியம் ஆகியதோ, அதே போல்தான் ஒவ்வொரு முறையும் வெற்றி பெற வேண்டும்.

நமது இலக்கு எதை நோக்கி இருக்கிறது என்பதுதான் முக்கியமே தவிர நம்மை நோக்கி வீசப்படுகிற எதிர்ப்பு, ஏளனம், எதிர்பார்ப்புகள் முக்கியம் அல்ல.

விதையை விதைத்திடுவோம்

விழிப்புடனே இருந்திடுவோம்!

மரமாய் வளரும் வரை

மகிழ்ச்சியாய் இருந்திடுவோம்!

பூக்கள் பூக்கும் வரை

பூரிப்பாய் இருந்திடுவோம்!

காய்களாய் மாறும் வரை

கவனமாய் இருந்திடுவோம்!

காத்திருந்த காலமெல்லாம்

கனவாக போகாமல்

கனிகளை நாம் பெறுவோம்

நலமாய் நாம் வாழ்வோம்!

2.வெற்றிக்கு வழிகாட்டும் விழிப்பணர்ச்சி

உங்கள் வாயிலிருந்து வருகிற ஒவ்வொரு வார்த்தையும், உடலின் ஒவ்வோர் அசைவும் உங்கள் வாழ்வை தீர்மானிக்கிறது.

ஒரு துளி விழிப்புணர்வை நம் வாழ்வில் சேர்க்கிறபோது அத்தனை பரிமாணங்களும் மாறிவிடும்.

ஓர் இளைஞன் இருந்தான். சுமாரான தோற்றம் உள்ளவன். எந்தப் பெண்ணும் காதலிக்கவில்லையென்ற வருத்தம் அவனுக்கு, அவன் முகம் வாடியிருப்பதைப் பார்த்து, அந்தப் பகுதியின் அழகான பெண்ணொருத்தி அழைத்து ஆறுதல் படுத்த ஒரு காபி க்ளப்பிற்கு சென்றாள். காபி ஆர்டர் கொடுக்கும்போது காபியில் எனக்கு உப்பு அதிகம் இடுங்கள் என்றான். சர்வர் திரும்பக் கேட்டான். ஆம், உப்பு நிறைய போடுங்கள் என்று திரும்பவும் சொன்னான்.

சர்வர் சென்றபின், அந்தப் பெண் கேட்டாள், “நீங்கள் ஏன் காபியில் உப்பு இடச் சொன்னீர்கள்” என்று. அதற்கு அவன், “நான் ஒரு கடற்கரை கிராமத்தில் பிறந்தேன், என் தந்தை ஒருநாள் மீன் பிடிக்கச் சென்றவர் அலையடித்துக் கொண்டு போய்விட்டது. பிறகு, என் தாய் நகரத்திற்கு அழைத்து வந்துவிட்டாள். நான் சிரமப்பட்டு படித்தேன். இன்னும் அந்த கடற்கரை நினைவுகள் அப்படியே இருக்கின்றன. ஒரு துளி உப்பு என் நாவில் படும்போதெல்லாம் நான் வாழ்ந்த அந்த சமுத்திரத்தின் காற்று என்னைத் தொட்டுவிட்டுப் போவது போல் உணர்கிறேன்! அதனால்தான் நான் காபியில் கூட உப்பு போட்டு சாப்பிடுகிறேன்” என்றான்.

இது அந்தப் பெண்ணின் மனதைத் தொட்டது. தன்னுடைய பழைய வாழ்க்கையை இவ்வளவு தூரம் நினைக்கக்கூடிய இவனோடுதான் வாழ்க்கையைப் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று நினைத்தாள். ஒரு கோடீஸ்வர வீட்டுப் பெண்ணாக இருந்தாலும், அவனை திருமணம் செய்து கொள்வது என்று முடிவு செய்கிறாள். பார்க்க சராசரி, வசதியில்லாத போதும் திருமணம் நடக்கிறது.

திருமணத்திற்குப் பிறகு இளைஞனின் வாழ்க்கையே மாறுகிறது. ஐம்பது வருடம் சேர்ந்து வாழ்கிறார்கள். திருமணப் பொன்விழா விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. அன்று இரவு தன் மனைவியிடத்தில் அவன், “நீ என்னை மன்னித்துவிடு”. எதற்கு? “ஐம்பது வருஷம் முன்னால் ஒரு பொய் சொன்னேன். கடற்கரையில் பிறந்தேன் என்பது பொய். உப்புக்காற்று படுகிறபோதெல்லாம் என் மனம் பழைய நினைவுக்குப் போகிறது என்பது பொய். எல்லாமே பொய்”. பிறகு ஏன் உப்பு போட்ட காப்பி கேட்டீர்கள் என்றாள் மனைவி.

“நான் காபியில், சர்க்கரை கொஞ்சம் அதிகமாக போடுங்கள் என்றுதான் கேட்க நினைத்தேன். உன்னோடு அமர்ந்திருந்த பதற்றத்தில் உப்பு என்று வந்துவிட்டது. எல்லோரும் கேலி செய்தார்கள். அதைக் கட்டமைப்பதற்கு ஒரு கதையைச் சொன்னேன். அதை நம்பி விட்டீர்கள்”.

ஒரு சின்ன சறுக்கல். உதட்டில் சொன்ன வார்த்தையிலிருந்து வந்ததை இவனுக்குள் படைப்பு மனம் திறந்து அதற்கென்று ஒரு காரணத்தை உருவாக்குகிறபோது அவன் வாழ்க்கையே மாறுகிறது. பதட்டத்தில் ஒரு சின்ன சறுக்கலில் இருந்து எழுகிறபோதுகூட விழிப்புணர்வோடு எழுந்தால் எவ்வளவு பெரிய வெற்றியைப் பெறலாம் என்பதைத் தான் இந்தக்கதை நமக்குக் கற்றுக் கொடுக்கிறது.

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இந்த அம்சம், படைப்பு மனம் இருக்கிறது.

ஒவ்வொரு மனிதனுக்கும் விடப்பட்டிருக்கிற சவால், அவன் செய்யக் கூடியதற்கும்., செய்து கொண்டிருப்பதற்கும் இருக்கிற இடை வெளி.

பெரிய பெரிய லட்சியங்களை எட்டினால்தான் உங்கள் வாழ்க்கை முழுமையடையும் என்றில்லை. மனதிற்குள் நீங்கள் பொத்தி வைத்த சின்ன விருப்பங்கள், சின்ன சின்ன லட்சியங்கள், குறிப்பிட்ட இளமையில் நிறைவேறாவிட்டாலும், எல்லா வயதிலும் முயற்சி செய்துகொண்டே இருங்கள். அப்போதுதான் நாம் தேங்கிப் போகமாட்டோம். இன்றைக்கும் நமக்கு உத்வேகம், உற்சாகம் இருக்கிறது. புதியதை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறோம். வாழ்க்கை வாழ்கிறபோதுதான் முழுமையான வாழ்க்கையாக அது மாறுகிறது.

ஒரு மனிதரைப் பற்றி எதிர்மறையாக சிந்திக்க சிந்திக்க உங்கள் முழு சக்தியையும் நீங்கள் அவருக்கு கொடுக்கிறீர்கள். எதிரியை பலசாலியாக்குவதற்கு ஒரே வழி சதா சர்வகாலமும் அவனை நினைத்துக் கொண்டேயிருப்பது. ஒரு மனிதர் மேல் கோபம் இருந்தால், ஒரு காகிதத்தில் அவர் மேல் என்ன கோபம் என்று எழுதுங்கள் சாபம் இடாதீர்கள். இவ்வளவு சிரமங்களை ஏற்படுத்திய மனிதனை மன்னித்துவிட்டேன். அவனை கடந்து போகிறேன் என்று எழுதுங்கள்.

ஒரு மனிதனை உங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றால் அவரைத் தாண்டிச் செல்லுங்கள். நீங்கள் அவர் மேல் கோபம் கொள்வதின்மூலம் அவரை நீங்கள் தாண்டிச் செல்லவில்லை. உங்கள் தோளிலே சுமந்து கொண்டு செல்கிறீர்கள்.

இதனால் உங்கள் நடை தாமதமாகும், சக்தி வீணாகும்.

உணர்ச்சி களுக்கு அவ்வளவு பலமிருக்கிறது. உணர்ச்சியை எதற்குப் பயன்படுத்த வேண்டுமென்பதில் கொஞ்சம் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும். பார்க்கிற ஒவ்வொரு மனிதர்களிடமிருந்தும் நாம் கற்றுக் கொள்வதற்கு ஏதாவது ஒரு விஷயம் இருக்கிறது. இதனால் நம் சக்தி கூடுகிறது.

ஒரு மனிதரை திட்டுகிறபோது சக்தி செலவாகிறது. அது மட்டுமல்ல. அந்தக் கோபத்தோடு இருக்கிறோம்.

உணர்ச்சிகளை சிலபோது தடை செய்து வைத்திருக்கிறோம். இது பெரிய ஆபத்தில் கொண்டு போய்விடும். கோபமோ, அன்போ எதையும் அடக்கி வைத்தால் அது நம் சக்தி வட்டத்தில் அடைப்பாய் நிற்கிறது. அது நமக்குத் தெரியாமல் வேண்டாத இடத்தில் வெளிப்படுகிறது.

கோபத்தைக்கூட வெளிக்காட்டுகிறோம். ஆனால் அன்பை வெளிக்காட்ட வாய்ப்பே தரப்படுவதில்லை.

வெறுப்பைக்கூட வெளிக்காட்டிவிட்டு மன்னிப்பு கேட்டுவிடலாம். ஆனால், வெளிக்காட்டாத அன்புக்கு மறுபடியும் வாய்ப்பே இருக்காது. தயவு செய்து இதை மறந்து விடாதீர்கள்.

சக மனிதர்களோடான உறவு வட்டம் விரிய விரிய உங்களுக்கு நிறைய பலம் கிடைக்கிறது. உங்கள் தனித்தன்மையை எந்த நேரத்திலும் இழக்காதீர்கள். நம்மை காப்பாற்றப் போவது தனித்தன்மைதான். அதை நாம் அடகு வைத்தால், சமரசம் செய்தால் சராசரி மனிதனாக்கிவிடும்.

ஒரு புலவர் இருந்தார். இன்றைக்கு நிறைய வசதிகள் இருக்கின்றன. இந்தப் புலவருக்கு பெரிய வசதி இல்லை. ஊர் சுற்றிக் கொண்டிருந்தார். கந்தல் உடை. சிலர் ஒரு ராஜாவைப் பார்த்து பாட்டுப் பாடினால் பரிசு கொடுப்பார் என்றார்கள். ராஜாவிற்கு அன்றைக்குப் பிறந்த நாள். நிறையக் கூட்டம். கூட்ட நெரிசலில் பிச்சைக்காரர்கள் பக்கம் போய் சேர்ந்துவிட்டார் புலவர். பிச்சைக்காரர்கள் நெருக்கியதில் முன்னால் போய் விழுந்துவிட்டார்.

இவ்வளவு கூட்டத்தைப் பார்த்த எரிச்சலிலிருந்து ராஜா, “டேய், பறக்காதே! இரு” என்றான்.

விழுந்த இந்தப் புலவர் எழுந்தார்.

“கொக்குப் பறக்கும்; புறா பறக்கும்; குருவி பறக்கும்

குயில் பறக்கும்; நக்குப் பொறுக்கிகளும் பறப்பர் - நான் ஏன் பறப்பேன் நராதிபனே”

என்றதும் ராஜா மிரண்டு போய் ஒரு புலவரை இப்படி அவமதித்துவிட்டோமே என்று வருத்தப்பட்டு புலவரின் கையைப் பிடித்தான். மீண்டும் புலவர் பாடலைத் தொடர்ந்தார்.

“திக்கு விஜயம் செலுத்தி உயர் ஆட்சிசெலுத்தும் அரங்கா - உன்

பக்கம் இருக்க ஒரு நாளும் பறவேன் - பறவேன் - பறவேனே”

வசைக் கவியையே வாழ்த்துக் கவியாக மாற்றினார். உங்கள் அடையாளம் அற்றுப் போகிற இடத்திலேகூட தன்னுடைய தனித்தன்மையை அந்தப் புலவர் இழக்கவில்லை.

எத்தனை பேரிடம் வியாபாரத்திற்கோ, ஏதேனும் உதவி கேட்டோ செல்கிறபோது நம்மை முதலில் அறிமுகப்படுத்திக் கொள்ள முடிகிறதா. தட்டுத்தடுமாறுகிறோம்.

என்னுடைய தனித்தன்மையை எப்படி வெளிப்படுத்திக் கொள்வது. நான் யார்? என்னை எப்படி வெளிப்படுத்திக் கொள்வது என்றால் நம்மை நாம் தயார்படுத்திக் கொள்ள வேண்டும். நமக்குள்ளே பார்க்க வேண்டும். எது என் தனித்தன்மை? எப்படி நான் ஜெயிக்கிறேன். இதை நாம் பார்க்க வேண்டும்.

நாம் குறுகிய வட்டத்திற்குள் வாழப் பிறந்தவர்கள் அல்ல. நம்முடைய சக்தி வட்டம் என்ன என்பதை உணர்கிறோம். அதன் மூலம் நம் அன்பு வட்டத்தை பெருக்கிக் கொண்டே போகிறோம். அதன் மூலம் புதுமைமிக்க செழுமை மிக்க ஒரு சமுதாயத்தை நாம் படைக்கிறோம்.

3.வீட்டுக்குள் வெற்றி

குழந்தை வளர்ப்பு என்பதே குழந்தைகளை படிக்க வைத்து நல்ல மதிப்பெண் பெறவைப்பது என்றாகிவிட்டது. குழந்தைகளை படிக்க வைப்பதற்கு பெற்றோர்கள் படாதபாடுபடுகிறார்கள் என்பதுதான் உண்மை.

என்னதான் பிரம்ம பிரயத்தனம் எடுத்தாலும் படிக்க வைப்பது என்பது அவ்வளவு சுலபமாக இருப்பதில்லை.

உங்கள் குழந்தைகள் தானாகப் படிக்காததற்கு அல்லது மதிப்பெண் எடுக்காததற்கு படிக்கப் பிடிக்காதது மட்டும் காரணமில்லை.

‘ஏன் மாணவர்கள் படிக்க மறுக்கிறார்கள்?’ ‘எதனால் எல்லாம் படிக்கப் பிடிக்கவில்லை?’ இதையெல்லாம் முதலில் புரிந்து கொண்டால்தான் படிப்பின் மேல் அவர்களுக்கு உள்ள வெறுப்பை அகற்றி விருப்பை ஏற்படுத்த முடியும்..

மாணவர்கள் படிப்பை தவிர்க்க காரணங்கள்:

1. தேர்வு பயம்

2. பாடங்கள் புரியவில்லை என்றால் படிப்பு வராது என்று எண்ணி குற்ற உணர்ச்சி அடைவது.

3. எவ்வளவு படித்தாலும் மனதில் பதிவதில்லை என்பதால் நினைவாற்றல் இல்லை என்று எண்ணுவது.

4. பாடங்கள் அதிகம் என்றும் அதிக வேலைப்பளு என்றும் எண்ணுவது.

5. போரடிப்பதாக நினைப்பது.

6. ஆசிரியர்கள் பாடம் நடத்தும் விதம் பிடிக்கவில்லை. அல்லது தன்னை நடத்தும் விதம் பிடிக்கவில்லை.

7. பெற்றோர்கள் நடத்தும் விதம் அதாவது எப்போது பார்த்தாலும் படி படி என்று சொல்வது.

8. தள்ளிப்போடும் மனப்பான்மை.

9. அலட்சியம்…. என பல காரணங்கள் இருக்கலாம். இது தவிரவும் கூட ஒவ்வொரு குழந்தைக்கும் தனிப்பட்ட காரணங்கள் இருக்கலாம்.

சரி காரணங்களை தெரிந்து கொண்டாகிவிட்டது. இனி அவர்களிடம் படிப்பில் ஆர்வத்தை கொண்டு வருவது எப்படி என்று பார்ப்போம். முதலில் தேர்வு பயத்தை அகற்றுவது எப்படி என்பதை விரிவாகப் பார்ப்போம்.

தேர்வு பயம்:

புத்தகத்தின் முதல் பக்கத்தில் உள்ள ‘தீண்டாமை ஒரு பாவச் செயல்; தீண்டாமை ஒரு மனிதத் தன்மையற்ற செயல்; தீண்டாமை ஒரு பெருங்குற்றம்;’ என்பதை ஒரு மாணவன் தீண்டாமை என்பதை அடித்து அதற்குப் பதில் இப்படி மாற்றியிருந்தான். ‘காலாண்டு என்பது ஒரு பாவச்செயல். அரையாண்டு என்பது மனிதத் தன்மையற்ற செயல். முழு ஆண்டு என்பது ஒரு பெருங்குற்றம்.’

இதிலிருந்தே உங்களுக்கு புரிந்திருக்கும். பெரும்பாலான மாணவர்கள் கற்பதை வெறுக்கவில்லை. தேர்வுகளைத்தான் வெறுக்கிறார்கள்.

நம் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும் என்கிறபோது எந்த விதமான போட்டியும் சரி, தேர்வும் சரி நமக்கு கலந்து கொள்ளும் ஆர்வத்தையே தரும். ஆனால் பள்ளியில் நடத்தும் தேர்வுகள் மட்டும் நன்றாகப் படிக்கும் நம் குழந்தைகளுக்குக் கூட பயத்தை ஏற்படுத்துவது ஏன்?

தேர்வு பயம் என்பது நம்மால் மதிப்பெண் பெறமுடியாது என்ற எண்ணத்தால் வருகிறது. அதாவது பாடங்களை முழுமையாகப் படிக்காதபோதுதான் நம்மால் சிறப்பாக எழுத முடியுமா? என்ற சந்தேகம் வருகிறது.

பாடங்களை முழுமையாகப் படிக்காததற்கான காரணங்களுள் ஒன்று தள்ளிப்போடும் மனப்பான்மை. அன்றைய பாடங்களை அன்றே படித்திருந்தால் தேர்வு நேரத்தில் படிப்பதற்கு ஒன்றும் இருக்காது.

தேர்வுக்கான தேதி அறிவித்ததும் செய்ய வேண்டியது பாடங்களை திருப்புதல் அதாவது ரிவிஷன் மட்டுமே. ஆனால் பல மாணவர்கள் தேர்வு தேதி அறிவித்தால்தான் படிக்கவே தொடங்குகிறார்கள். அதனால் குறுகிய காலத்திற்குள் படிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. அதனால்தான் பதட்டம், பயம் போன்றவை ஏற்பட்டு படிப்பது பிடிக்காத விஷயமாகி விடுகிறது.

பாடங்களை முழுமையாகப் படிக்காததற்கு மற்றொரு காரணம் மாணவர்கள் பலரும் இன்று அறிவை வளர்த்துக்கொள்வதற்காக அல்ல… மதிப்பெண் பெறுவதற்காக மட்டுமே படிக்கிறார்கள்.

இதனால் பாடங்களை தேர்வுக்கு வருவது, தேர்வுக்கு வராதது என இரண்டாகப் பகுத்து தேர்வுக்கு வருவதை மட்டும் படிக்கிறார்கள். இதனால் நன்றாக படித்திருக்கிறோம் என்ற நிறைவே வராது. இப்படி அரைகுறையாக தேர்வுக்கு செல்வதால்தான் மாணவர்களுக்கு தேர்வை எதிர்கொள்ளும் தன்னம்பிக்கை வருவதில்லை.

ஒன்றாவது படிக்கும் சிறுவனுக்கு அவன் வளர்க்கும் செல்ல நாயே உலகமாக இருந்தது. ஒரு நாள் பள்ளிவிட்டு வந்தபோது அது அசைவில்லாமல் கிடக்க அதிர்ச்சியானான். அது இறந்து விட்டதாக எல்லோரும் சொல்ல, அவன் அழுத அழுகைக்கு அளவேயில்லை. அவனை சமாதானப்படுத்த அந்த நாய்க்கு இறுதி ஊர்வலம் நடத்த ஏற்பாடாயிற்று.

பக்கத்து வீடுகளில் இருந்த நண்பர்கள் எல்லோரும் ஒன்று கூடினர். மெல்ல மெல்ல அழுகை குறைந்து இறுதி ஊர்வலம் பற்றிய உற்சாகம் அவனிடம் அதிகமாகியது. குட்டி பல்லக்கு ஒன்று வரவழைத்து நாய் ஏற்றப் பட்டபோது இறந்ததாக கருதப்பட்ட அது லேசாக அசைந்தது. உடனே சிறுவன் குரல் கொடுத்தான், “அந்த நாயைக் கொல்லுங்கள்” என்று.

மாணவர்களின் இம்மனநிலையை விளக்க ஒரு குட்டிக்கதை.

பல நோக்கங்கள் இப்படித்தான் திசை மாறிவிடுகின்றது. தேர்வு என்பது ஒரு மாணவன் எந்த அளவிற்கு பாடங்களை புரிந்து வைத்திருக்கிறான் என்பதை சோதிப்பதற்கான ஒரு முறை. ஆனால் பாடங்களை புரிந்து கொள்வதற்கான முக்கியத்துவம் குறைந்து வெறும் மதிப்பெண் எடுத்தால் மட்டும் போதும் என்றாகிவிட்டது, மேலே சொன்ன கதையைவிட சோகமான விஷயம்.

ஒரு மாணவன் வாங்கும் மதிப்பெண்ணுக்கும் அவன் உண்மையான கல்வியறிவிற்கும் எந்த சம்மந்தமுமில்லை என்பதுதான் வருத்தப்பட வேண்டிய விஷயம். சரி. இதையெல்லாம் எப்படி மாற்றுவது… தேர்வு பயத்தை எப்படி போக்குவது? என்று பார்ப்போம்.

மாணவர்களுக்கு தேர்வு பயமே நல்ல மதிப்பெண் வாங்கி பெற்றோரை திருப்திப்படுத்த முடியவில்லை என்பதால்தான் வருகிறது. மதிப்பெண்ணைவிட அறிவிற்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள் என்பதை பெற்றோர்கள் உணர்த்திப் பாருங்கள். தேர்வு பயம் தன்னால் நீங்கிவிடும்.

அறிவுக்கே முதலிடம்:

மதிப்பெண்ணுக்கு பதில் அறிவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுங்கள். மதிப்பெண்ணுக்கு முக்கியத்துவம் தருவதால்தான் காப்பியடித்தல் பிட் அடித்தல் போன்ற தேர்வறைத் தவறுகள் அதிகமாகின்றன.

அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இருந்தால் யாருக்கும் இப்படிப்பட்ட தவறுகள் செய்ய வேண்டும் என்று தோன்றவே தோன்றாது. தகுதியடைய ஆசைப் படாமல் தகுதி இருப்பதாக காட்டிக்கொள்ள மட்டும் ஆசைப்படும் இந்த அசிங்கத்தை பெற்றோர்கள்தான் மாற்றவேண்டும்.

மதிப்பெண் பட்டியலுக்கு பதில் ஒவ்வொரு நாளும் என்ன கற்றுக்கொண்டார்கள் என்பதற்கு முக்கியத்துவம் கொடுங்கள்.

பதில் எழுத அல்ல கேள்வி கேட்க பழகுங்கள்:

பதில் எழுதுவதல்ல, கேள்வி கேட்பதே கல்வி. தவளை நீரிலும் நிலத்திலும் வாழும் என்ற பாடத்தை படிக்கும்போது அந்த பதிலை மனப்பாடம் செய்வதல்ல கல்வி. ஏன் தவளை நீர் நிலம் இரண்டிலும் வாழ்கிறது? என்று கேள்வி கேட்பதுதான் கல்வி.

நம் குழந்தைகளுக்கு, கேள்வி கேட்கிற பழக்கம்தான் அறிவை வளர்க்கிற பழக்கமாக மாறும். எனவே படித்த பாடத்தில் பதிலை தேடாமல் புதிய கேள்விகளை கேட்டு அதற்கான பதிலை பாடம் தாண்டிய புத்தகங்களிலும் தேடி பதிலை கண்டறியச் சொல்லுங்கள்.

பயத்தைப் போக்க உற்சாகப்படுத்துங்கள்:

ஒருவன் எப்படி இருக்கிறானோ அப்படி நடத்தினால் அவன் அப்படியேதான் இருப்பான். ஒருவன் எவ்வாறு இருக்க வேண்டுமோ அவனை அவ்வாறு நடத்தினால் அவன் அவ்வாறு உயர்கிறான். என்ன தலைசுற்றுகிறதா? இதைப் புரிந்து கொள்ள எளிய ஓர் உதாரணம் பார்ப்போம்.

35 மதிப்பெண் வாங்கும் மாணவனை 35 மதிப்பெண் எடுத்தவனைப் போல நடத்தினால் அவன் 35 மதிப்பெண் எடுப்பவனாக மட்டுமே இருப்பான். 35 மதிப்பெண் வாங்கும் உங்கள் குழந்தை 50 மதிப்பெண் வாங்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் 50 மதிப்பெண் எடுத்தவனைப்போல அவர்களை நடத்துங்கள். அப்போது அவர்கள் உற்சாகம் பெற்று 50 மதிப்பெண் பெறுவார்கள். 50 மதிப்பெண் எடுப்பவர்கள் 75 மதிப்பெண் வாங்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் 75 மதிப்பெண் எடுத்தவனைப்போல் அவர்களை பாராட்டுங்கள். நிச்சயம் 75 மதிப்பெண் பெறுவார்கள்.

ஆனால் உண்மையில் நாம் அவர்களை எப்படி நடத்துகிறோம். யோசித்துப் பாருங்கள். 50 மார்க் எடுத்திருந்தால்கூட அவர்களை ஃபெயிலான மாணவர்கள் போலத்தான் நடத்துகிறோம். 50ஐ விடுங்கள் 80 எடுத்தால் கூட ஃபெயிலானவர்கள் போல நடத்தும் பெற்றோர்கள் இருக்கிறார்கள். இதனால் ‘என்ன படித்து என்ன, நிச்சயம் இவர்கள் பாராட்டப் போவதில்லை’ என்ற எண்ணம் ஏற்பட்டுவிடுகிறது.

எனவே, எதற்கும் திட்டாதீர்கள். திட்டும்போது மனம் சோர்வடைகிறது. செயலற்ற நிலைக்கு சென்றுவிடுகிறது. இதுவே பாராட்டும்போது மனம் உற்சாகமடைகிறது. சுறுசுறுப்புடன் செயலாற்ற தயாராகிறது.

உங்கள் குழந்தை தேர்விலேயே தோல்வியடைந்திருந்தால்கூட நீங்கள் அவர்களுக்கு புரியவைக்க வேண்டும். நீ ஒன்றும் முட்டாள் அல்ல… உன் மதிப்பெண்கள் உன் முயற்சியைத்தான் குறிக்கிறதே தவிர. உன் அறிவை அல்ல… உன் முயற்சிகூடக் கூட உன் மதிப்பெண்ணும் கூடும் என்று பேசுங்கள்.

நாம் செய்த முயற்சி தான் மதிப்பெண்ணாக வருகிறது. எனவே மதிப்பெண் குறைந்தால் முயற்சியை கூட்ட வேண்டும் என்பதை உங்கள் குழந்தைக்கு உணர்த்த வேண்டும்.

40% உழைப்பு ‘ 40% மதிப்பெண்

60% உழைப்பு ‘ 60% மதிப்பெண்

80% உழைப்பு ‘ 80% மதிப்பெண்

90% உழைப்பு ‘ 90% மதிப்பெண்

100% உழைப்பு ‘ 100% மதிப்பெண்

இதையே ஒரு பேப்பரில் எழுதி குழந்தைகள் அறையில் அவர்கள் கண்ணில் படுகிறமாதிரி ஒட்டச் செய்யுங்கள்.

இந்த வகை முயற்சி உழைப்பை அதிகரிக்கச் செய்வதோடு ஏன் செய்யவேண்டும் என்கிற அறிவை ஏற்படுத்தி அவர்களை கண்டிப்பாக மாற்றமடையச் செய்யும்.

தள்ளிப்போடும் மனப்பான்மையை மாற்ற:

நன்றாக படிக்கும் மாணவர்களுக்கே கூட உள்ள பிரச்னை இது. நாளைக்கு செய்துகொள்ளலாம் என்று தள்ளிப்போட்டு தள்ளிப்போட்டு பிறகு தள்ளிப்போடுவது என்பதே பழக்கமாகிவிடுகிறது.

பிறகு நாய் போர்வை வாங்கிய கதை போலத்தான் ஆகிவிடும். நாய் ஒன்று இரவில் குளிரும்போது முடிவெடுக்கும். நாளை காலை, முதல் வேலையாக போர்வை வாங்கிவிட வேண்டும் என்று.

மறுநாள் காலை வெயிலில், இரவில் குளிரடித்ததோ போர்வை வாங்கிவிட வேண்டும் என்று முடிவெடுத்ததோகூட ஞாபகம் இருக்காது. அன்று இரவு மறுபடி குளிரடிக்கும்போது மறுபடியும் நாளை கண்டிப்பாக போர்வை வாங்கிவிட வேண்டும் என்று முடிவெடுக்கும். ஆனால் மறுநாள் மறுபடி வெயிலில் எல்லாவற்றையும் மறந்துவிடும்.

நம் மாணவர்கள் கதையும்கூட இதுதான். ஒவ்வொரு முறை ஆண்டுத் தேர்வின் போதும் அளவுக்கதிகமான டென்ஷனால் அடுத்த வருடத்திலிருந்து வருட ஆரம்பத்திலிருந்தே படிக்க வேண்டும் என்று முடிவெடுப்பார்கள். ஆனால் பள்ளி துவங்கியதும் ‘இப்பத்தானே லீவு முடிஞ்சிருக்கு…. இப்பத்தானே ஸ்கூல் ஆரம்பிச்சிருக்கு’ என்று ஒவ்வொரு நாளும் படிப்பதை தள்ளிப்போட்டுக்கொண்டே போவார்கள்.

இதை மாற்றிக்கொள்ள வேண்டுமென்றால் எழுந்திருக்கும் பழக்கம் தொடங்கி எந்த ஒரு வேலையையும் தள்ளிப்போடக்கூடாது என்று அறிவுறுத்துங்கள். உதாரணத்திற்கு காலையில் எழுவதை ஐந்து நிமிடம் தள்ளிப்போடுவதிலிருந்து அன்றைய தோல்விகள் ஆரம்பமாகின்றன என்ற வரிகளை அவர்கள் எழும் அறையில் ஒட்டிவைத்து உற்சாகப்படுத்தலாம்.

பெற்றோர்கள் செய்ய வேண்டியது.

வேலைகளை தள்ளிப்போட்டு தள்ளிப்போட்டு கடைசி நேர வேலைக்கு எல்லோரும் பழக்கப்பட்டு விட்டோம்.

தேர்வு பயத்தைப் பற்றி எழுதுவதைக்கூட, ‘இப்போது என்ன அவசரம் இன்னும்தான் தேர்வுகள் வரவில்லையே’ என்று நீங்கள் நினைத்தால் உங்களுக்கும் எல்லாவற்றையும் கடைசி நேரத்தில் செய்து பழக்கமாகிவிட்டது என்று அர்த்தம்.

ஒரு செயலை செய்வதற்கு தேவைப்படும் நேரம் செயலை செய்வதற்கு கையிலிருக்கும் நேரம் ஆகும் என்பது போல ஒரு பாடத்தை படிப்பதற்கான நேரம் தேர்வுக்கான தேதி அறிவிக்கும் வரை என்ற எண்ணத்தை முதலில் உங்கள் குழந்தைகளிடமிருந்து எடுக்க வேண்டும்.

ஒவ்வொரு மாத தேர்வையும் ஆண்டுத்தேர்வு போல நினைத்து அக்கறையாக எழுதச் சொல்லி உற்சாகப்படுத்துங்கள்.

தேர்வை நினைத்து மட்டுமல்ல… தேர்வு நாளாகவே இருந்தால்கூட நீங்கள் முதலில் பதட்டமடையாமல் இருங்கள். ஏனெனில் உங்கள் பதட்டம் உங்கள் குழந்தைகளையும் அதிகம் பதட்டமடையச்செய்யும்.

தேர்வுக்கு முதல் நாள்கூட தாராளமாக விளையாட அனுமதியுங்கள். குறைந்த பட்சம் அரை மணி நேரமாவது. விளையாடும்போது மூளைக்கு செல்லும் ஆக்ஸிஜன் அளவு அதிகமாகிறது. இதன் மூலம் உற்சாகமாகவும் பதட்டமின்றியும் அவர்களால் இருக்க முடியும்.

நம்பிக்கையான வார்த்தைகளை மட்டும் சொல்லுங்கள். நிச்சயம் நீ நன்றாக தேர்வெழுதுவாய்… உன்னைத் தவிர வேறு யாரால் நன்றாக செய்ய முடியும் என்ற நம்பிக்கையை ஊட்டுங்கள்.

பிறகு பாருங்கள், உங்கள் குழந்தைகள் ஜாலியாக படிப்பார்கள். ஈஸியாக ஜெயிப்பார்கள்.

4.வீழ்ச்சியை வென்றிடு! எழுச்சியாய் நின்றிடு!!

அலைகள் உள்ள இடம் தாண்டி அமைதியான இடம் நோக்கி படகை விடுவதால் மீனவர்கள் தொழிலும் நடக்கிறது. தொல்லைகளும் தீர்கிறது.

அலைகள் ஓயும்வரை கடலுக்குள் செல்வதில்லை என்று கரையிலேயே நின்றுவிட்டால், கடமையையும் செய்திருக்க முடியாது, காலத்தையும் வென்றிருக்க முடியாது.

அனைவரின் வாழ்க்கையும் ஏதாவது ஒரு அலையில் சிக்கிக் கொண்டுதான் இருக்கிறது. அலைகளிலிருந்து மீண்டு வர வேண்டுமா? அலைகளை கடந்து வர வேண்டுமா? அலைகளே இல்லாத கடல் இருக்க வேண்டுமா?

கடல் ஒன்று இருந்தால் அதில் அலை என்பது இருந்தே தீரும். அது போலத்தான், நன்மைகள், தீமைகள் அனைத்தும் கலந்ததுதான் வாழ்க்கை. தீமைகள் வரும்போது அதில் மாண்டு போகாமல் மீண்டு வாழ்வது எப்படி?

எப்படி கடலில் பல செல்வங்கள் இருப்பினும் அவரவர் தேடலுக்கு தகுந்தாற்போல் செல்வங்கள் கிடைப்பது போல, நமக்கு தேவையானவை இவ்வுலகில் எங்கே கிடைக்கின்றன என்பதை தேடிக் கண்டடைய வேண்டும்.

தேடல் எதை நோக்கி என்பதை தீர்மானிக்க வேண்டும். இன்று உலகின் வளர்ச்சி மிக வேகமாக போய்க்கொண்டிருக்கிறது. எதையும் மிக எளிதாக அறிந்து கொள்ளக்கூடிய வாய்ப்பு மிக அருகிலும், மிக அதிகமாகவும் இருக்கிறது. ஆனால் அதை எப்படி பயன்படுத்துகிறோம் என்பதைப் பொறுத்தே வெற்றி. அதற்கான படிப்பு. பயிற்சி, உழைப்பு, உண்மை, ஒழுக்கம், உயர்வான சிந்தனை, உயர்வேன் என்ற நம்பிக்கை இவைகளோடு புறப்படும்போது பயணமும் பாதையும் தெளிவாகின்றன.

சோர்வு இல்லாத ஒருவன் தேர்வு அடைவது எளிதா இல்லையா?

எனது அலுவலகத்திற்கு நல்ல விற்பனைத்திறன் உள்ள நண்பர் வந்திருந்தார். எங்களால் எந்தப் பொருளையும் உற்பத்தி செய்வது எளிதாகிறது. ஆனால் அதை விற்பனை செய்வது என்பது கடினமாக உள்ளது. அதற்கான வழிகளை கூறுங்கள் என்று அவரிடம் கேட்ட போது மிக எளிதாக ஓர் உத்தியை கூறினார்.

ஒரு அலுவலகத்திற்கு உள்ளே சென்றால் மூடியுள்ள கதவை தட்டினால் எப்படி உள்ளே வருமாறு அழைப்பு வருகிறதோ, அதுபோல ஒவ்வொரு இடமாக போய் நாம் தட்டுவதற்கு தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும். அவ்வாறு பயணத்தை துவங்கினால் வெற்றி பெறுவது எளிது என்றார். இதைக் கேட்டவுடன் எனக்குள் மிகப்பெரிய ஆற்றல் வந்ததுபோல் உணர்ந்தேன்.

ஊதியத்திற்காகத்தான் அனைவரும் உழைக்கின்றோம். ஆனால் ஊதியத்துக்குத் தகுந்தாற்போல் தான் உழைப்பேன் என்று மனதுக்குள் ஒரு வேகத்தடை போட்டு வைத்துக் கொண்டால், உனக்குள்ளே போடப்பட்ட தடை உயரவிடாமல் செய்துவிடும். ஆகவே தடையில்லாமல் சென்றால் அடைய வேண்டிய தூரம் எளிதாகி அதனால் மகிழ்ச்சி கிடைக்கிறதோ அதுபோல் சிந்துகின்ற வேர்வையின் அளவைவிட கிடைக்கின்ற வெற்றியின் அளவு அதிகமாக இருக்க வேண்டும். வெற்றியின் வேகக் காற்று வேர்வைத் துளிகள் மீது பட்டு சோர்வை நீக்கிவிடும்.

கட்டாயக் கல்வி - காமராஜர்
கனவு காணுங்கள் - அப்துல்கலாம்

இத்தகைய கருத்துக்களை வேறு யார் கூறியிருந்தாலும் இவ்வளவு வலிமை இருந்திருக்காது. அது போலத்தான் இன்றைய தலைமுறையினரை வழிநடத்திச் செல்ல வந்த பெருந்தலைவர்களும், இளம் மந்திரிகளும், இன்றைய இளைஞர்களுக்கு நல்ல பல வாய்ப்புகளை உருவாக்கித் தரவேண்டும். அவர்கள் வாய்ப்புகளைத் தருவார்கள் என்று நம்புவதோடு மட்டுமல்லாமல் வாய்ப்பை வசப்படுத்திக் கொள்ளவும் தயாராக இருக்க வேண்டும்.

“உலக வீழ்ச்சியினை வென்றிடுவோம்
உவமையாய் நாமும் நின்றிடுவோம்.”

5.வலையைக் கிழித்து வெளியேறுங்கள்.

அத்தனை வெற்றிகளுக்கும் ஆரம்பப்புள்ளி, அதிருப்திதான் என்றார் ஒருவர். உண்மைதான்!

நாம் ஒவ்வொருவரும் தன்னிடம் இருக்கும் அடிப்படைத் திறமையே அபாரம் என்று நம்புகிறோம். ஆனால், அந்த அடிப்படைத் திறமை மீது நமக்கே அதிருப்தி தோன்றும் போதுதான், அந்த அடிப்படைத் திறமையை மேலும் வளர்க்கிறோம். அது அசாத்தியமான திறமையாக - அசைக்க முடியாத திறமையாக - வளர்ச்சி பெறுகிறது.

” என்ன செய்ய வந்தோம்? என்ன செய்து கொண்டிருக்கிறோம்” என்ற கேள்வியை எப்போதும் எழுப்பிக் கொண்டே இருப்பது நல்லது. ஒரு தனி மனிதனிடம் இருக்கிற ஆற்றலின் குணம் விசித்திரமானது. வேகமும் வெறியும் இல்லையென்றால், இது வேண்டிய அளவு வெளிப்படுவதில்லை. வெற்றிகரமான கிரிக்கெட் ஆட்டக்காரர்களின் வாழ்க்கை இதைத்தான் சொல்கிறது.

முதல் வாய்ப்பில் அவர்கள் முத்திரை பதித்துக் காட்டியதும், ரசிகர்கள் அவர்கள் மீது கவனம் செலுத்துகிறார்கள். உடனே எதிரணிக்கு அவர்களை தோற்கடிக்க வேண்டும் என்கிற வேகம் வந்துவிடுகிறது. ஆடுகளத்தில் மட்டையுடன் இறங்கும்போது ரசிகர்கள் எழுப்பும் ஆரவாரம், விளையாட்டு வீரர்களை உசுப்புகிறது. அவர்களை வீழ்த்த வேண்டுமென்பதில் எதிரணி காட்டும் தீவிரமோ அவர்களை வெளியேற்றி விடுகிறது. கடுமையான பயிற்சியும், தன்மேல் குவியும் கவனமும், அவர்களை இதுவரை அளித்திராத அளவுக்கு, திறமையை வெளிக் கொணர்கிறது.

எட்டிவிட்ட வெற்றிகள் அவர்களுக்கு ஒருபோதும் நிறைவைத் தருவதில்லை. “இன்னும், இன்னும்’!” என்கிற வேகத்தில்தான் அவர்கள் வீறுகொண்டு எழுகிறார்கள். “இதுபோதாது” என்ற எண்ணத்தில்தான் தங்கள் இலக்குகளை நீடித்துக் கொண்டே போகிறார்கள். கழுதையின் முன்பு நீட்டப்படும் காரட் மாதிரி, நீட்டப்படும் இலக்குகளை நோக்கி நகர்ந்து கொண்டே இருக்கிறார்கள்.

நாம் குழந்தைகளாக இருந்தபோது, நம் சக்திக்கு உட்பட்டதை செய்யத் தொடங்கிறோம். சுற்றியிருப்பவர்கள் நமக்கு உற்சாகம் தருவதற்காகப் பாராட்டுகிறார்கள். ஒரு குழந்தையை, குறிப்பிட்ட செயலுக்காகப் பாராட்டினால், குதூகலத்துடன் திரும்பத் திரும்ப அதையே செய்யும்.

இந்த குணம், வளர்ந்த பிறகும் வருவது தவறு. எது நமக்கு எளிதோ, அதையே திரும்பத் திரும்பச் செய்வது, பாதுகாப்பானதாக இருக்குமே தவிர, நம் செயல் திறனைப் பெருக்குவதாக இருக்காது. அப்படியானால், செயல்திறனின் உச்சத்தை பெருவதற்கு சிறந்தவழி, நம் பலவீனங்களிலிருந்து தொடங்குவதுதான்.

தேர்தல் நேரத்தில் தலைவர்கள் தங்களுக்கு சாதகமான தொகுதியில் போட்டியிடுவதை விரும்புவார்கள். ஆனால் மற்ற நேரங்களில், கட்சி எங்கெல்லாம் பலவீனமாக இருக்கிறதோ, அங்கெல்லாம் அதை பலப்படுத்தவே விரும்புவார்கள். அதற்கான முயற்சிகளில், முனைப்புடன் இறங்குவார்கள்.

இது, தலைவர்களுக்கு மட்டுமல்ல, தலைவர் பண்புள்ள ஒவ்வொரு மனிதனுக்கும் தேவையான இயல்பு.

இதற்கு அடுத்தபடி நிலை, ஏற்கனவே இருக்கிற திறமையை இன்னும் மேம்படுத்துவது. அன்றாட அலுவலகப் பணிகளில் இருந்து, ஆர்வமுடன் நீங்கள் வளர்த்துக் கொள்ளும் தனித்திறமைகள் வரை எல்லாவற்றிக்கும் இது பொருந்தும். வலிமையான விலங்குகளுக்கும் வலை விரிப்பார்கள். காட்டுக்குள், எங்கிருந்தோ பாய்ந்து வருகிற பலம்பொருந்திய விலங்குகள் அந்த வலையில் வீழ்ந்துவிடும்.

சாதனையாளர்களுக்கும் அப்படியொரு வலை, வழியெங்கும் விரிக்கப்படுகிறது. அது சதிவலையல்ல, சந்தோஷ வலை. நம்மில் பலருக்கு மிகவும் பிரியமான வலை. அதுதான் பாராட்டு என்னும் பெரிய வலை. குழந்தைப் பருவத்தில், எதற்காக நாம் பாராட்டப்படுகிறோமோ அதையே திரும்பத்திரும்ப செய்வது என்கிற குணம், வளர்ந்த பிறகும் நம்மில் படிந்து விடுகிறது. இதைத் தாண்டி வரவேண்டும்.

உங்கள் வெற்றிக்கான கரவொலி அடங்கும் முன்னே அடுத்த வெற்றிக்கான ஆயத்தங்களில் இறங்கி விட வேண்டும். அடுத்ததாய் என்ன செய்வார்கள் என்று அறிந்து கொள்ள முடியாமல் இருப்பதுதான், சாதனையாளர்களின் பொது இலக்கணம். அப்படி உங்களை மேம்படுத்திக் கொள்ள ஒவ்வொரு நாளும் படிப்புக்கும் - பயிற்சிக்கும் போதிய நேரம் ஒதுக்குவதை உறுதி செய்து கொள்ளுங்கள். மிக உறுதியாய், ஒவ்வொரு நாளும் உங்கள் திசையில் முன்னேறிக் கொண்டே இருங்கள்.

SOURCE: NAMADHU NAMBIKKAI.

மேலும் படிக்க... Read more...

3 ஆயிரம் பேரை இஸ்லாத்தில் இணைத்த பாபர் மசூதியை இடித்த முன்னால் கரசேவகர்.

>> Tuesday, April 13, 2010

1992 டிசம்பர் 6 : எடுங்கள் கடப்பாரையை உடையுங்கள் மஸ்ஜிதை என்று ஆவேச கோசத்துடன் சீறிய பல்பீர் சிங்

1993 ஜூன் 25 ல் முஹம்மது ஆமீர் ஆகி, ஏக் ஹை!! அல்லாஹ் ஏக் ஹை!! அல்லாஹ் ஏக் ஹை!! (அல்லாஹ் ஒருவனாக இருக்கிறான் !! அல்லாஹ் ஒருவனாக இருக்கிறான் !! ) என முழங்குவதுடன்

இறை அழைப்பு பணியை மேற்கொண்டு அவரது முயற்சியால் 3000 பேரை இஸ்லாத்தில் இணைத்திருக்கிறார்.



படத்தின் மேல் க்ளிக், தோன்றும் படத்தில் மீண்டும் க்ளிக் செய்து பெரிதாக்கி படிக்கவும்..

நன்றி : விடுதலை. 10.4. 2010

மேலும் படிக்க... Read more...

இஸ்லாமிய வரலாற்றில்

இஸ்லாமிய வரலாற்றில் பலஸ்தீன் படத்தின் மேல் சொடுக்கி படிக்கவும்.
பலஸ்தீன் வரலாறு

.

.

About This Blog

***இவ்வளைதளத்தின் பதிவுகளை தங்களுடைய வளைத்தளத்தில் மீள்பதிவு செய்பவர்கள் அன்பு கூர்ந்து இவ்வளைத்தளத்தின் சுட்டியை தங்களுடைய மீள்பதிவுகளில் இணைக்குமாறு அன்புடன் கோரப்படுகின்றார்கள்.

Labels

Lorem Ipsum

ISLAM HISTORY.

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP