**Followers.அன்பர்கள்.** தாங்களும் இணையலாமே!!!

வந்தேமாதரம் பாடலை முஸ்லிம்கள் ஏன் எதிர்க்கிறார்கள்.?

>> Wednesday, May 15, 2013

வந்தேமாதரம் பாடலை பாட மறுப்பது தேசதுரோகமா?

முஸ்லிம்கள் ஏன் வந்தேமாதரம் சொல்லவில்லை?
வந்தே மாதரம் பாடலை பாட மறுக்கும் முஸ்லீம்களை தேசத்துரோகியைப் போல சித்தரித்து காட்டுக்கூச்சல் போடும் சங்பரிவாரக் கும்பல்களுக்கும், அவர்களுக்கு ஜால்ரா தட்டும் மீடியாக்களுக்கும், அரைவேக்காடுகளுக்கும் ஓர் அறிவுரை!

வந்தேமாதரத்தை முஸ்லிம்கள் ஏன் எதிர்க்கிறார்கள் என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.

நாடு சுதந்திரமடைவதற்கு முன்னாள் வங்காள மொழியில் ஆனந்த மடம் என்ற நாவல் வெளியானது. இந்த நாவல் கல்கத்தாவில் இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே நடந்த கலவரத்தைப் பின்னனியாகக் கொண்டதாகும்.

கலவரம் நடந்தால் ஒருவரை ஒருவர் சரியாக இனம் கண்டு தாக்கவேண்டும் என்பதற்காக இந்துக்கள் வந்தே மாதரம் என்பதை தங்கள் அடையாளமாக ஏற்படுத்திக் கொண்டார்கள்.

வந்தே மாதரம் சொன்னால் அவன் இந்து என்று தாக்காமல் விட்டுவிடுவதற்காகவும், அதைச் சொல்ல மறுப்பவர்கள் முஸ்லிம் என்று அறிந்து கொன்று போடவும் வந்தே மாதரம் என்பது உருவாக்க்கப்பட்டதாக அந்தக் கதையில் இருந்து அறிந்து கொள்ள முடியும்.

இந்த நாவலுக்கு முன் வந்தே மாதரம் என்பது தேசப்பற்றின் அடையாளமாகக் கருதப்பட்டதில்லை.

கலவரத்தின்போது இந்துக்கள் வந்தே மாதரம் சொல்வதுபோல் முஸ்லிம்களும் சொல்லிவிட மாட்டார்களா என்றால் வந்தே மாதரம் என்பதை உயிர் போனாலும் சொல்ல மாட்டார்கள் என்பதை அந்தக் கதையில் வரும் இந்துக்கள் விளங்கி வைத்திருந்தனர்.

ஏனெனில் வந்தே மாதரத்தின் பொருள் இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைக்கு எதிரானது என்பதால், முஸ்லிம்கள் இதைச் சொல்லவே மாட்டார்கள் என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரிந்தது. வந்தே மா தரம் என்பதில் மூன்று சொற்கள் உள்ளன.

வந்தே என்றால் வந்தனம் செய்கிறோம் – வணங்குகிறோம் – வழிபடுகிறோம் என்பது பொருள்.

மா என்றால் தாய் என்று பொருள்.

தரம் என்றால் மண் என்பது பொருள்.

அதாவது தாய்மண்ணாக இருக்கிற இந்த நிலத்தைக் கடவுளாகக் கருதி வணங்குகிறோம் என்பது மொத்த வார்த்தையின் பொருளாகும்.

வங்காள மொழிச் சொல்லான இந்த வார்த்தையின் பொருளை நாம் தெரிந்துகொள்ள அகராதியைத் தேடிச் செல்ல வேண்டியதில்லை.

பாரதியார் தனது பாட்டில் இதன் அர்த்தத்தைத் சொல்லித் தந்துவிடுகிறார். வந்தே மாதரம் என்போம் எங்கள் மாநிலத் தாயை வணங்குதுமென்போம்.

இது பாரதியார் பாட்டின் முதல் வரிகள். எங்கள் மாநிலத் தாயை வணங்குகிறோம் என்பதுதான் வந்தே மாதரத்தின் பொருள் என்று பாரதியார் பொருள் சொல்லிவிட்டார்.

பராசக்தியையும், கற்சிலைகளையும் கடவுளாகக் கருதிய பாரதியார் மண்ணை வணங்கினால் நமக்கு ஒன்றும் பிரச்சனை இல்லை. அவரைப்போல் நாமும் மண்ணைக் கடவுளாக்குமாறு சொன்னால் இதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?

பாரதியார் பாட்டை மக்கள் என்றைக்கோ மறந்துவிட்டார்கள் என்பதற்காக இஸ்லாத்தின் பெயரால் சமாதியை அதாவது கல்லை வழிபடும் ஏ.ஆர்.ரஹ்மான் என்ற சினிமாக்காரர் “தாய் மண்ணே வணக்கம்” என்று காட்டுக்கூச்சல் போட்டு ஆல்பம் வெளியிட்டு புதிய தலைமுறைக்கும் இதன் பொருளைப் புரிய வைத்துவிட்டார். பாரதியார் போலவே மண்ணை வணங்கும் சினிமாக்காரர் வந்தேமாதரம் பாடிவிட்டுத் தொலையட்டும்.

அல்லாஹ்வைத் தவிர யாரையும் வணங்க மாட்டோம் என்று உறுதி மொழி கூறி இஸ்லாத்தைத் தங்கள் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்ட முஸ்லிம்கள் எப்படி இதைப் பாடமுடியும்?

ஆனந்த மடம் நாவல் பிரபலமடைந்த பின்னர், சங்பரிவாரத்தினர் (இந்து மகாசபை) தங்களது நிகழ்ச்சிகளில் வந்தேமாதரம் பாட ஆரம்பித்தனர்.

முஸ்லிம்கள் எதை ஏற்க மாட்டார்களோ அதை தேசியகீதமாக்கினால் முஸ்லிம்கள் பாட மறுப்பார்கள். அதை வைத்து அவர்களை தேசவிரோதிகளாகச் சித்தரிக்கலாம் என்ற திட்டத்துடன் அந்தக் கருத்தை படிப்படியாக உருவாக்கி பாரதியார் வரைக்கும் கொண்டு சேர்த்தனர்.

வெள்ளையர் ஆட்சியில் சங்பரிவாரத்தினர் இதை தேசியகீதம் போல் சித்தரித்ததால், காங்கிரஸுக்கும் இந்த நோய் பரவியது.

காங்கிரஸ் மாநாடுகளிலும் வந்தே மாதரம் பாடும் வழக்கத்தை ஏற்படுத்தினார்கள். 1923ல் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் வந்தே மாதரம் பாடியபோது அப்போது காங்கிரஸ் தலைவர்களில் ஒருவராக இருந்த முகம்மது அலி அவர்கள் மேடையிலேயே இதைக் கண்டித்து வெளிநடப்புச் செய்தார்.

வெள்ளையர் ஆட்சியில் நடந்த மாகாணத் தேர்தலில் ஏழு மாகாணங்களில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தது. ஏழு மாகாணங்களிலும் வந்தே மாதரம் என்பதை தேசியகீதமாக அறிவித்தார்கள்.

ஆனால் முகம்மது அலி அவர்களின் எதிர்ப்புக்குப் பின்னர் விழிப்புணர்வு பெற்ற முஸ்லிம்கள் வந்தே மாதரத்திற்குக் கடுமையான எதிர்ப்பை பரவலாகத் தெரிவிக்க ஆரம்பித்தனர்.

முஸ்லிம்களுக்கும் இஸ்லாத்திற்கும் வந்தே மாதரம் எதிராக உள்ளதைக் காலம் கடந்து உணர்ந்து கொண்ட காங்கிரஸ் கட்சி முஸ்லிம்கள் வாழும் பகுதிகளில் வந்தே மாதரம் பாடத் தேவையில்லை – அவர்கள் ஸாரே ஜஹான்சே அச்சா, ஹிந்துஸ்தான் ஹமாரா ஹமாரா என்ற கவிஞர் இக்பாலின் பாடலைப் பாடிக் கொள்ளலாம் என்று இரட்டை தேசிய கீதத்தைக் கொண்டுவந்தது.

இக்பாலின் பாடலின் பொருள் “அகில உலகிலும் சிறந்த நாடு எங்கள் இந்தியா” என்பதாகும்.முஸ்லிம் கவிஞன் பாடிய பாடலில் தேசத்தின் சிறப்பை மட்டுமே பார்க்கிறான். இஸ்லாத்தின் கொள்கை எதையுமே திணிக்கவில்லை.

ஆனால் முஸ்லிம் அல்லாதவர்கள் உருவாக்கிய தேசிய கீதத்தில் இந்துமத நம்பிக்கை முஸ்லிம்கள் மீதும், கிறித்தவர்கள் மீதும் மத நம்பிக்கை அற்றவர்கள் மீதும் திணிக்கப்பட்டது கவனத்தில் கொள்ளத்தக்கது.

நாடு சுதந்திரமடைந்த போது சில பகுதிகளில் ஸாரே ஜஹான்சே அச்சா பாடலும் சில பகுதிகளில் வந்தே மாதரமும் பாடப்பட்டு வந்தன. நாடு சுதந்திரமடைந்த பின்னர் எதை தேசிய கீதமாக ஆக்கலாம் என்ற விவாதத்தின்போது மேற்கண்ட இரு பாடல்களுக்கும் ஆதரவாகவும் எதிராகவும் கருத்துக்கள் முன் வைக்கப்பட்டன. இரண்டும் வேண்டாம். ரவீந்திரநாத் தாகூர் எழுதிய ஜனகனமன என்பதே தேசிய கீதமாக இருக்கட்டும் என்று 1950ஆம் ஆண்டு ஏகமனதாக முடிவு செய்யப்பட்டது.

அதிலும் சிறிய அளவிலான மறுப்பு முஸ்லிம்களுக்கு இருந்தபோதும், வந்தேமாதரம்போல் அப்பட்டமான மதத் திணிப்பாக இல்லாத காரணத்தால், முஸ்லிம்களும் இதை ஏற்றுக் கொண்டனர்.

வந்தேமாதரம் தேசியகீதம் போட்டியில் தோற்றுப் போனதையும், ஜனகனமன என்பதுதான் தேசிய கீதம் என்பதையும் அறியாதவர் நாட்டின் குடிமகன்களில் ஒருவராக இருப்பதற்கே தகுதியற்றவராவார்.

2009ஆம் ஆண்டு நாட்டின் தலைநகரமாகிய டெல்லியில் ஜம்மியத்துல் உலமா சபையின் மாநாடு நடந்தது. இரண்டு நாட்கள் நடந்த அந்த மாநாட்டில் முதல் நாளில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

வந்தேமாதரம் என்பது இஸ்லாமியக் கொள்கைக்கு எதிரானது. முஸ்லிம்கள் அதைப் பாடக்கூடாது என்பதும் தீர்மானங்களில் ஒன்றாகும்.

அந்தத் தீர்மானம் நிறைவேற்றிய பின் உலமா சபை தேசிய கீதத்தை அவமதித்துவிட்டதாக சங்பரிவாரத்தினர் கொந்தளித்தனர். ஜம்மியதுல் உலமா சபைக்கு எதிராக தேசதுரோக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாட்டையே ரணகளப்படுத்தினார்கள். தமிழகத்திலும் பரவலாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. மத்திய அரசும் இதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க இயலுமா என்று சட்ட வல்லுனர்களைக் கலந்து பல ஆலோசனைகளை நடத்தியது.

வந்தேமாதரம் தேசிய கீதமே இல்லை எனும்போது இதற்கு எதிராக ஒன்றும் செய்ய முடியாது என்று கூறப்பட்டதால் மத்திய அரசு அடங்கியது.

ஊடகங்களும், சினிமாக்காரர்களும், சங்பரிவாரக்கும்பலும் வந்தே மாதரத்தை தேசிய கீதம் போல் சித்தரித்து தவறான கருத்தை மக்கள் மனதில் பதித்து வைத்து விட்டன. ஆனால் சட்டப்புத்தகத்தில் வந்தே மாதரத்திற்கு எந்த முக்கியத்துவமும் இல்லை.

அது இந்துக்களின் நம்பிக்கையைப் பிரதிபலிக்கும் ஒரு பாடல் என்பதைத் தவிர வேறு ஒன்றும் இல்லை.

நடுநிலை இந்துக்களும் இதைச் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளனர். சிறுபான்மை மக்களின் மத நம்பிக்கைக்கு எதிரான ஒரு பாடலை அவர்களும் பாடவேண்டும் என்று வற்புறுத்துவது நேர்மையானதாக இருக்குமா என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

அனைத்து மதத்தினரும், மதத்திற்கு அப்பாற்பட்டவரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய கருத்துக்கள்தானே எல்லோருக்கும் பொதுவாக இருக்க முடியும்?

இதை உணர்ந்து இந்துக்களும் அந்தக் கருத்து வன்முறைக்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டும்.

அந்தப் பாடலில் சரஸ்வதி, லட்சுமி போன்றவர்களை கடவுளாகச் சித்தரிக்கும் வரிகள் உள்ளன. இதை எப்படி ஏற்க முடியும் என்று இடதுசாரிகளும், பகுத்தறிவாளர்களும் கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்ய வேண்டும்.

சட்டப்பூர்வமான தேசிய கீதமான ஜனகனமனவை சங்பரிவாரத்தினர் இன்றுவரை தங்களது நிகழ்ச்சிகளில் பாடாமல் வந்தேமாதரம் பாடுகின்றனர். இவர்களின் இந்த அடாவடித்தனம் தான் தேசத் துரோகம் என்பதை அனைவரும் புரிந்து கொள்ளவேண்டும்.

SOURCE: http://www.onlinepj.com/unarvuweekly/

==========================================

வந்தே மாதரம் தேசபக்தியை ஊட்ட எழுதப்பட்ட பாடலா?


`சுதந்திரப் போராட்ட காலத்தில் தேச பக்தர்களுக்கும், தூக்குக் கயிற்றில் தொங்கிய வர்களுக்கும் உயிர் கொடுத்த மந்திரச் சொல் வந்தே மாதரம்.

தன்னிகரில்லா பாரதத் தாயின் மீது பக்தியையும், அன்பையும் தூண்டி எழுச்சியைத் தோற்று விக்கும் வந்தே மாதர தேசிய கீதத்தை முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் பாட மறுக்கிறார்களே ஏன்?’ என்பது இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ். சங் பரிவாரங்களின் நீண்ட நாள் குற்றச்சாட்டுகளுள் ஒன்றாக இருந்து வருகிறது.

பொதுத் துறை நிறுவனமான பி.ஹெச். இ.எல்.லில் தனக்கும் ஆர்.எஸ். எஸ்ஸுக்கும் தொடர்பில்லை என்று பொய் சொல்லி தொழிற்சங்கம் நடத்திவரும் பி.எம்.எஸ்., என்கின்ற சங்கம் அந்த வந்தேமாதர பாடல் எழுதப்பட்டதன் 125-ஆவது ஆண்டு விழாவை பெல்லில் கொண்டாடியது.

இந்த வந்தே மாதரத்தைப்பற்றி முஸ்லிம்கள் மீது வெறுப்பைக் கக்கும் நாவலான பங்கிம் சந்திர சட்டர்ஜி எழுதிய ஆனந்தமடம் நாவலில் உள்ள ஒரு பாடல் என்ற அளவில் மட்டுமே தெரிந்திருந்தேன். தொழிற்சங்க இயக்கமான பி.எம்.எஸ். இங்கு அதனைக் கொண்டாடியதால் அதன் வண்டவாளங்களைத் தொழிலாளர் மத்தியில் தோலுரிக்க வேண்டும் என்ற ஆவலில் அந்த நாவலைப் படிக்க ஆரம்பித்தேன். படிக்கப் படிக்கப் பல திடுக்கிடும் தக வல்கள் கிடைக்க ஆரம்பித்தன.

1882-ஆம் ஆண்டு வங்க மொழியில் எழுதப்பட்ட அந்த நாவலை 1908-ஆம் ஆண்டு மஹேசகுமாரசர்மா என்பவர் தமிழில் மொழி பெயர்த்துள்ளார். அதற்கு முன்னுரை எழுதியவர் சுதேசமித்திரன் ஆசிரியர் ஜி. சுப்பிரமணிய அய்யர். வந்தே மாதரப் பாடலை தமிழில் முதன் முதலில் மொழிபெயர்த்தவர் பாரதியார். மறுபதிப்பாக 2000-த்தில் வெளியிட்டவர் நல்லி குப்புசாமி(செட்டியார்)

அந்த நாவல் 1770 கால கட்டங்களில் வங்கத்தில் ஏற் பட்ட நிகழ்வைக் கொண்டு எழுதப்பட்டதாக பங்கிம் சந்திரர் குறிப்பிடுகிறார். 1771-இல் வங்கத்தில் கடுமையாக பஞ்சம் ஏற்படுகிறது. பஞ்சத்தினால் பலர் மாண்டு போகிறார்கள். 1772,1773-இலும் பஞ்சம் தீரவில்லை. 1774-இல் நல்ல மழை பெய்கிறது. மகேந்திரன் என்பவன் நல்ல பணக்காரன். காயஸ்தா ஜாதியைச் சேர்ந்தவன்.. அவனிடம் ஏராளம் செல்வம் இருக்கிறது. அவனது கிராமத்திலுள்ளோர் பஞ்சத்தால் பலர் மாண்டு போனார்கள். இவர்களுக்கு வேலை செய்ய ஆளில்லை. அதனால் இவன் பட்டணம் வருகிறான்.

வழியில் தனது மனைவி மகளைப் பிரிகிறான். அவனிடம் இருக்கும் பணத் தையும் செல்வத்தையும் வைஷ் ணவப் படைக்கு ஆயுதம் தயாரிக்கப் பயன்படுத்த எண்ணி அவனைப் படையில் சேர்க்கிறார்கள். அவன் அவர்களிடம் பல கேள்விகளைக் கேட் கிறான். அதன் மூலம் நமக்குப் பல உண்மைகள் புலப்படுகிறது.

அவனைப் பல இடங்களில் மூளைச்சலவை செய்கிறார்கள். `முஸ்லிம் ராஜா நிருவாகத் திறமை இல்லாமல் இருப்பதாகவும் அதனால்தான் நாட்டில் மக்கள் பஞ்சத்தாலும் பசியாலும் துன்பப்படுகிறார்கள் என்றும் கூறி நமது மதம் போயிற்று. ஜாதி போயிற்று. மானம் போயிற்று. குலம் போயிற்று என்று வெறுப்பேற்றி அந்தக் குடிகேடர்களான முஸ்லிம்களை ஒழிக்க வேண்டும்’ என்று வெறி உண்டாக்குகிறார்கள்.

வந்தேமாதரம் என்ற பாடல் பாரதமாதாவைக் குறித்துப் பாடப்படுவதாகவும், தேசபக்தி உள்ளவர்கள் அனைவரும் அதனைப் பாட வேண்டும் என்றும், அவ்வாறு பாட மறுப்பவர்கள் தேசபக்திஅற்றவர்கள் என்றும் ஆர்.எஸ்.எஸ். சங்பரிவார் கும்பல் இன்னமும் சொல்லி வருகிறது.

பாரத மாதா யார், அவள் வடிவம் என்ன என்பதைப்பற்றி ஆனந்த மடத்தில் மிகவும் தெளிவாகவே எந்தவித அய்யத்திற்கும் இடமின்றிக் கூறப்படுகிறது.

ஒரு மண்டபத்தில் திருமாலின் இடது தோளில் திருமகள் கூந்தல் அவிழ்ந்துதொங்க நூறிதழ்த் தாமரைப்பூமாலை யணிந்து அச்சத்தால் நடுங்கினவள் போல் நின்றாள். வலது தோளில் கலைமகள் வீணா புஸ்தக வடிவெடுத்து ராக தாளங்கள் சூழ நின்றாள். திருமாலின் மடியிலே சர்வாங்க சுந்தரமான ஒரு மோகன வடிவம் திருமகளையும் கலை மகளையும் பழிக்கும் எழிலும் செல்வமும் வாய்ந்து வீற்றிருந்தது.

அது யார்? என்று மகேந் திரன் கேட்கிறான். அதுதான் மாதா என்கிறார்கள். அத்துடன் இன்னொரு மண்டபத்திற்கு மகேந்திரனை அழைத்துச் சென்று நல்ல அழகான ஆடை ஆபரணங்கள் அணிந்த ஒரு வடிவத்தைக் காட்டுகிறார்கள். இது முன்பிருந்த மாதா என்கிறார்கள். இதுதான் நமது தாய்நாட்டின் வடிவம் என்கின்றனர்.

பின்னர் இருண்ட சுரங்கத்திற்கு அழைத்துச் சென்று மங்கலான வெளிச் சத்தில் கருமை வடிவமாய் செல்வத்தையெல்லாம் பறி கொடுத்துவிட்டு கட்டத் துணியுமின்றி நிர்வாணமாய் மண்டையோட்டை மாலையாய் அணிந்திருக்கும் ஒரு உருவத்தைக் காட்டுகிறார்கள்.

அதைப்பார்த்து பயந்துபோய் மகேந்திரன் `அய்யோ, காளீ’ என்று அலறுகிறான். ஆம், காளிதான் இப்படி ஆய்விட்டாள். அவள்தான் மாதா. அவளைக் காப்பாற்றத்தான் போராடுகிறோம். அவளை வணங்கி வந்தே மாதரம் சொல் என்கிறார்கள். அவனும் வந்தே மாதரம் என்கிறான்.

அதுதான் வந்தே மாதரத்தின் கதை. திருமாலின் மடியில் அமர்ந்திருக்கும் காளி பராசக்திதான் பாரதமாதா வடிவம் என்பது மிகத் தெளிவாகவே அதில் சொல்லப்பட்டுள்ளது.

அந்த மாதாவை வணங்கினால் தான் முஸ்லிம்களுக்குத் தேசப் பற்று இருப்பதாகவும் இல்லையேல் அவர்கள் தேசத் துரோகிகள் என்பதாகவும் இன்றும் ஆர்.எஸ்.எஸ். சங்பரிவார் கூறுவது எவ்வளவு கடைந்தெடுத்த மோசடி என்பது தெளிவாக விளங்குகிறது.

உருவ வழிபாட்டையே ஏற்றுக் கொள்ளாத முஸ்லிம்கள் காளிதேவியின் உருவத்தை பாரதமாதாவாக ஏற்றுக் கொண்டு வந்தே மாதரம் பாட வேண்டும் என்று கட்டாயப் படுத்தினால் அதனை எப்படி ஏற்றுக் கொள்வர்?

தேசப்பற்றினை ஊட்டுவதைவிட முஸ்லிம்கள் தேசத் துரோகிகள் என்று பழிதூற்ற வேண்டும் என்பதே சங்பரி வார்க்கும்பலின் முக்கிய நோக்கம்.

இவர்கள் சொல்லுகிற பாரதமாதா வடிவம் பராசக்தி தானென்பதை இந்நூலுக்கு 1908-இல் முன்னுரை எழுதிய சுதேசமித்திரன் ஆசிரியர் ஜி. சுப்பிரமணிய அய்யரும் தனது முன்னுரையில் குறிப்பிடுகிறார். அவர் தனது அந்த முன்னுரையில் `இந்நாவலில் மகமதியரின் கொடுங்கோன்மையினாலேயே நாட்டில் பஞ்சம் உண்டாயிற்றென்றும் ஆகவே மகமதிய ராஜாங்கத்தின்மீது ஹிந்து ஜனங்களுக்கு இயல்பாகவே வெறுப்பு உண்டாயிற்று என்றும் இந்த வெறுப்பு பங்கிம் சந்திரசட்டர்ஜியின் கதைப் புத்தகத்தின் பிரதான கதாநாயகன் வார்த்தைகளில் வெளிப்படுகிறது என்றும் மகமதியர் பெயரில் வெறுப்பிருந்தாலும் ஆங்கிலேயர் பெயரில் வெறுப்பில்லை யென்பதும் மகமதிய ராஜாங்கத்தில் வெறுப்பு காட்டுவதோடு ஆரிய தேசம் ஜென்மதேசமாக அது பராசக்தியின் உருவம் என்ற உணர்ச்சியும் விளக்கப்படுகிறது’’ என்று கூறும் அவர் அடுத்த வரியிலேயே `பங்கிம் சந்திர சட்டர்ஜியின் முக்கிய நோக்கம் வங்காளிகளின் மனதில் தேசாபிமானம் உண்டாக்குதேயன்றி, மகமதியரின் பேரில் துவேகத்தை உண்டாக்குவாகத் தோன்றவில்லை’’ என்று தலைகீழாகப் புரட்டிச் சொல்கிறார்.

பார்ப்பனர்கள் அந்த நூலை ஏன் தமிழில் மொழி பெயர்த்தார்கள் என்பதையும் ஜி. சுப்பிரமணிய அய்யர் மிகத் தெளிவாகக் கூறுகிறார். ``ஆநந்த மடத்திற் காட்டியிருப்பது போல் தேசாபிமானமானது நமது பூர்வீக ஆரியதருமக் கொள்கைகளுக்கு உற்றதாக வேறு எந்த நூலிலும் உயர்த்திக் காட்டப்படவில்லை’’ என்று வெளிப்படையாகவே ஆரிய தர்மம், ஆரியதேசம் என்று ஆர்.எஸ்.எஸ் ஸ்தாபகர் ஹெட்கேவரின் கூற்றை அப்பொழுதே முன்மொழிகிறார்.

ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடும் உணர்ச்சியை இந்த நாவல் ஊட்டுவதாகவும் வெள்ளையரின் ஆட்சியை எதிர்க்க இளைஞர்களுக்கு ஒரு வழி காண்பிக்கப்பட்டது என்று முன்னுரையிலும், பதிப்புரையிலும் திரும்பத் திரும்பக் கூறப்பட்டாலும் கதையில் எந்த இடத்திலும் வெள்ளையரை எதிர்க்க வேண்டும் என்ற உணர்ச்சி வெளிப்படவில்லை.

நாவல் எழுதிய பங்கிம் சந்திரரே கூட அவ்வாறு எந்த இடத்திலும் கூறவில்லை.

மாறாக, வெள்ளையர்கள் அரசின்மையினின்றும் காப்பாற்றினார்கள் என்றும், கதை நடந்த காலமான 1771 -1774 கால கட்டத்தை அரசின்மை மேலிட்டிருந்த காலமென்றும், அப்பொழுது இங்கிலீஸ்காரரின் அதிகாரம் ஏற்படவில்லை என்றும் இங்கிலீஸ்காரர் ஆட்சி ஏற்பட்ட பிறகுதான் சட்டம் - ஒழுங்கு சரியாய் நடப்பதாகவும் முஸ்லிம் - வெள்ளையர் ஆட்சியை ஒழிப்பிடும்போது நீதி நியாய மற்ற காலத்தையும் - நியாயம் நிறைந்த காலத்தையும் எப்படி ஓப்பிட்டுப் பேச முடியும்? என்றும் பங்கிம் சந்திரர் கேட்கிறார்.

அத்துடன் அந்தக் கதாசிரியர் கதையெழுதிய 1882 கால கட்டத்தில் வெள்ளையரை எதிர்க்க வேண்டும் என்ற உணர்ச்சி நாடு முழுவதும் உருவாகி இருக்கிறது. முதல் சுதந்திரப்போர் என்று சொல்லப்படும் சிப்பாய்க் கலகம் நடந்தபோது பங்கிம் சந்திரர் 20 வயது இளைஞராக இருக்கிறார். அந்த வயதில் வரவேண்டிய அந்த தேசிய உணர்வு அவருக்கு வந்ததாகத் தெரியவில்லை.

வெள்ளையரை எதிர்த்து நாடு முழுவதும் நடந்த கிளர்ச்சிகள் தவறு என்பதைச் சுட்டிக்காட்டவே இந்த நாவல் எழுதப்பட்டதாகத் தெரிகிறது. அதனை பங்கிம் சந்திரர் முன்னுரையிலும் தெரிவிக்கிறார். கதையிலும் பல இடங்களில் அதனை வெளிப்படுத்துகிறார்.

வெள்ளைக்கார கேப்டன் ஒருவன் முஸ்லீம்களுக்கு ஆதரவாக வந்தபொழுது அவனைப் பிடித்து வைத்துக் கொண்டு பவாநந்தன் என்பவன் சொல்கிறான் ``காப்டன் துரை! உம்மை நாம் கொல்லோம்! ஆங்கிலேயர் எங்களுக்கு எதிரிகளல்லர்! நீங்கள் ஏன் துருக்கருக்கு ஆதரவாக வந்தீர்? நாங்கள் உங்களுடைய நண்பர்கள். ஆங்கிலேயருக்கு வெற்றி உண்டாவதாகுக! என்று சொல்கிறான்.

இன்னொரு இடத்தில் ஈஸ்வர கிருபையால் வாரன்ஹேஸ்டிங்ஸ்கவர்னர் ஜெனரலாய் வந்தார் என்று சொல்லப்படுகிறது. ஆங்கிலேயர்கள் இந்தியாவை இரட்சிக்கும் பொருட்டே வந்திருக்கிறார்களென்றும் ஓர் இடத்தில் பங்கிம்சந்திரர் வெளிப்படுத்துகிறார்.

அதே நேரத்தில் முஸ்லிம் களை வெறுக்கக்கூடிய செய்திகள் ஏராளம் இருக்கிறது. அந்தப் படைவீரர்களின் குருவான ஸத்யானந்தரும் மகேந்திரனும் கைது செய்யப்படுகிறார்கள். அவர்களை மீட்க படைத் தளபதிகளுள் ஒருவன் பேசுகிறான் ``நாம் இந்த முஸ்லிம் அரசாட்சியாகிய பறவைக் குரம்பையைக் கலைத்து இந்தப் பதிதர்களாகிய யவனர்களின் நகரத்தைத் தகர்த்து ஆற்றில் வீழ்த்திவிட வேண்டும் என்றும் இந்தப் பன்றிக் கூட்டத்தைத் தீவைத்தெரித்து மாதாவாகிய பூமியை புனிதமாக்க வேண்டும் என்று சங்கல்பித்திருக்கிறோமல்லவா? அந்த நாளும் வந்துவிட்டது. அந்த யவனபுரத்தைத் தூளாக்குவோம்! அந்தப் பன்றிக் கிடையை எரித்து நீறாக்கி ஆற்றுநீரில் கரைத்து விடுவோம்! அந்தக் குருவிக் குரம்பையைக் கலைத்துக் காற்றில் சிதறடிப்போம், என்று வெறி உண்டாக்குகிறான். அவர்களது குருவையும் மகேந்திரனையும் விடுதலை செய்த பிறகு படை வீரர்கள் துருக்கரது வீடுகளுக்குத் தீ வைத்தனர் என்ற செய்தியும் இடம் பெற்றிருக்கிறது.

இடையில் கொஞ்ச நாள் அவர்களது குரு காணாமல் போய் விடுகிறார். அவர் திரும்பி வந்துவிட்டார் என்ற செய்தி கிடைத்தவுடன் பல வதந்திகள் பரவுகின்றன. அவர் இமயமலைச் சாரலுக்குச் சென்று தவமிருந்து திரும்பி வந்ததாகவும், ராஜ்யம் கிடைக்கப் போகிறதென்றும் பேசிக் கொண்டார்கள். அப்பொழுது பெருத்த ஆரவாரம் உண்டாயிற்று. சிலர் `கொல்லுங்கள். மொட்டைத் தலையலரைக் கொல்லுங்கள்’ என்று கூச்சலிட்டனர். ஒருவன், அண்ணே! மசூதிகளை இடித்துத் தள்ளி ராதா மாதவ மந்திரத்தைக் கட்டும்படியான காலமும் வருமோ? என்பான். சிலர் வருணாச்சிரம தருமங்கள் நிலைதடுமாறி நிற்பது ஒழிந்து மீண்டும் வருணச்சிரமம் நிலைக்கும் காலமும் வருமோ என்றும் பேசிக் கொண்டனர்.

இறுதியில் போரில் வெற்றி பெறுகிறார்கள். .அப்பொழுது படைவீரர்கள் எங்கே என ஒருவன் வினவ மற்றொருவர் எல்லோரும் கொள்ளையடிக்கப் போயிருக்கிறார்கள். முசல்மான்களின் கிராமங்களையும் பட்டுத் தொழிற் சாலைகளையும் கொள்ளையடித்துக் கொண்டு வீட்டுக்குப் போய்ச் சேர்வார்கள் என்கிறான். அப்படிப் போகும் வழியில் வழிப்போக்கர்களையும் வீட்டிலுள்ளவர்களையும் பிடித்துக் கொண்டு வந்தே மாதரம் சொல்லுங்கள், இல்லையேல் உங்களை அடித்துக் கொல்லுவோம் என்று மிரட்டுகிறார்கள். எதிரிலகப்பட்ட முகமதியர்களைத் துரத்தி அடித்தனர். சிலர் கூட்டங் கூட்டமாகச் சேர்ந்து துருக்கத் தெருக்களுக்குத் தீ வைத்தனர். சொத்துக்களைக் கொள்ளை யடித்தனர்.

இவையெல்லாம் அந்த நாவலில் வரும் முஸ்லிம் வெறுப்புக்கு உதாரணங்கள்.

வங்காளத்தில் முஸ்லிம் ராஜ்யம் ஒழிந்தபிறகு அந்தப் படையின் குருவான சத்யானந்தர் இந்துராஜ்யத்தை அமைக்க வேண்டும் என்று திட்டமிட்டுக் கொண்டிருக்கிறார். அப்பொழுது திருமாலே வைத்தியர் உருவில் வந்து உன்னுடைய வேலை முடிந்து விட்டது. இனி பறப்படு என்று சொல்கிறார். மகாபிரபு! இன்னும் நான் இந்துராஜ்யத்தை அமைக்கவில்லையே! இப்பொழுது எப்படி வருவது? என்று கேட்கிறார். இப்பொழுது இந்து ராஜ்யம் அமையாது. இந்துராஜ்யம் அமையும் வரை ஆங்கிலேயரே நமக்கு அரசராயிருப்பர். ஆங்கிலேயர் அரசராகாவிடில் ஆரிய சனாதன தருமத்தின் புணருத்தாரணம் நிறைவேறாது என்று அந்த மகாபுருஷர் சொல்கிறார்.

அத்துடன் நமது மக்களுக்கு விஷயஞானம் குறைவாக இருக்கிறது. ஆங்கிலேயர் ஞானத்தில் சிறந்தவராக விளங்குகிறார்கள். கற்பிப்பதிலும் வல்லவராக இருக்கிறார்கள். நமது தேசத்தார் ஆங்கிலேயரிடம் தத்துவங்களை அய்யந்திரிபறக் கற்பாராயின் சனாதனதர்மம் பரவுவதற்கு யாதோர் தடையும் இருக்காது. இந்துக்கள் அறிவிலும் திறனிலும் பெருமையடைகிறவரையில் ஆங்கிலேய அரசாட்சியே இங்கு நடக்கும். அந்த ஆங்கிலேயர்களை அரசாட்சியில் அமர்த்துவதற்காகவே இந்தக் கிளர்ச்சி நடந்தது என்று அந்த மகாபுருஷர் சொல்கிறார்.

ஆங்கிலேயரை அரசாட்சியில் அமர்த்துவதற்காகவே இந்தக் கிளர்ச்சி நடந்ததாக அந்தக் கதையில் மிகத் தெளிவாகவே கூறப்பட்டிருந்தாலும் பார்ப்பனர்கள் திட்டமிட்டு வெள்ளையரை எதிர்க்க வேண்டும் என்ற உணர்ச்சியை இந்த நாவல் உருவாக்குவதாகக் கூறுவது கடைந்தெடுத்த பித்தலாட்டமாகும்.

முஸ்லிம்கள் வந்ததால் நிலை தடுமாறிப்போன வருணாசிரமத்தையும் சாதியையும் மீண்டும் நிலைபெறச் செய்ய வேண்டுமென்பதற்காகவே பார்ப்பனர்கள் பல காலம் முயன்றிருக்கிறார்கள்.

வருணாசிரமம் எப்பொழுதெல்லாம் தகர்க்கப்பட்டதோ அப்பொழுதெல்லாம் பார்ப்பனர்கள் ஏதாவதொரு வகையில் சூழ்ச்சிகள் செய்து வருணதர்மத்தை மீண்டும் புதுப்பித்திருக்கிறார்கள்.

பவுத்தமும் சமணமும் வருணதர்மத்தை ஒழித்தபோது அப்படித்தான் அவர்கள் அதனை மீட்டிருக்கிறார்கள் காரணம் பவுத்தர்களும் சமணர்களும் அஹிம்சாவாதிகளாக ஆயுதம் எதுவும் இல்லாதவர்களாக இருந்ததனால் அவர்களை மிகச் சுலபமாக வென்று அவர்களது சனாதன தருமத்தை ஆரியர்கள் நிலைநாட்டியிருக்கிறார்கள்.

ஆனால் முஸ்லிம்களிடம் அவர்களது வித்தை எதுவும் பயன்படவில்லை.

காரணம் முஸ்லிம்கள் படைபலமும் ஆயுதபலமும் நிறைந்தவர்களாக இருந்திருக்கின்றனர். அதனால் அவர்களை சுலபத்தில் வெற்றி காண இயலவில்லை.

ஆங்கிலேயர் வருகை அவர்களுக்கு மிகப் பெரிய பலத்தைக் கொடுத்திருக்கிறது. அவர்களை வைத்து பார்ப்பனர்கள் பல காரியங்களைச் சாதித்திருக்கிறார்கள் என்பதை வரலாற்றில் நாம் பார்க்கிறோம்.

வருணாசிரம தர்மத்திலும் சாதியிலும் கை வைக்காமல் இருந்தால் உங்களுக்கு முழு ஒத்துழைப்பு தருகிறோம் என்று ஆங்கிலேயரிடம் ஒப்பந்தம் செய்து கொண்டு ஆங்கிலேய அரசாங்கம் இங்கு வலுப் பெறுவதற்கு பார்ப்பனர்களே உறுதுணையாக இருந்திருக்கிறார்கள். அதனால்தான் வெள்ளை அரசாங்கம் 1833-இல் உருவாக்கப்பட்ட நாடாளுமன்றச்சட்டம் விதி 464-இல்:

``உயர்சாதியான் ஒருவன் கொடூரமான குற்றத்திற்காக சிறைத் தண்டனை அனுபவித்தாலும், தன் மலம், மூத்திரம் ஆகியவற்றைத் தானே எடுக்க வேண்டியதில்லை. பட்டினியால் ஒரு பிடி அரிசியைத் திருடியிருந்தாலும் ஒரு பறையன் அந்த மேல்சாதியானின் மலம், மூத்திரம் ஆகியவற்றை எடுக்க வேண்டும்’’ என்று திட்டவட்டமாகக் கூறப்பட்டுள்ளது. (ஆதாரம்: தமிழன் அயோத்திதாசப் பண்டிதர் வரலாறு (பக்கம் - 68)

மனுதர்ம காலத்தில்கூட எழுதப்படாத சட்டத்தை வெள்ளையரை வைத்து எழுதிக் கொண்டார்களென்றால் அந்த வாய்ப்பை பார்ப்பனர்கள் நழுவ விடுவார்களா?

அதனால்தான் வெள்ளையர் ஆட்சி பாதுகாக்கப்பட வேண்டும் என்று நினைத்தார்கள். அங்கொன்றும் இஙகொன்றுமாக வெள்ளையருக்கெதிராகக் கிளர்ச்சிகள் நடந்தபோது அது தவறு என்று சுட்டிக்காட்டி வெள்ளையர் ஆட்சியைப் பாதுகாக்க வேண்டும் என்பதற்காக எழுதப்பட்ட கதையை எப்படியெல்லாம் தமக்கு சாதகமாக வளைத்திருக்கிறார்கள்?

அந்தக் கதையிலுள்ள வந்தே மாதரப் பாடல் தேசபக்தியை ஊட்டுகிறது என்று இன்னமும் கதைவிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இவர்கள் கையில் ஆட்சி வந்துவிட்டால் இந்தக் கதையில் வருவதைப்போல் வந்தேமாதரம் பாட மறுத்தால் குத்துவோம் கொல்லுவோம் என்று சொன்னாலும் சொல்வார்கள்.

அது தந்தை பெரியார் பிறந்த மண்ணில் எடுபடாது என்பதை மாத்திரம் இந்த நேரத்தில் சொல்லிக் கொள்கிறோம்.

- ம. ஆறுமுகம் (பெல்) துணைப் பொதுச் செயலாளர் திராவிடர் தொழிலாளர் கழகப் பேரவை ====================================================

வந்தே(றிகளின்) 'மா'தரம்.
உணவகங்களின் எச்சில் இலை போடும் பகுதியிலோ அல்லது சில திருமண மண்டபங்களின் எச்சில் போடும் பகுதிகளிலோ முன்னங்காலை நட்டு வைத்து பின்னங்கால்களில் தனது பிட்டத்தை வைத்துக் கொண்டு ஏதாவது எச்சில் இலை வந்து விழாதா என ஆவலோடு வாயிலிருந்து நீர் சொட்டச் சொட்ட நாக்கைத் தொங்கப் போட்டு அமர்ந்திருக்கும் நாயை பார்த்திருப்பீர்கள்(இதுவரை இப்படி ஒரு காட்சியை காணாதவர்கள் மேற்கொண்டு படிக்கும் முன் ஏதாவது உணவகத்திற்கோ அல்லது திருமண மண்டபத்திற்கோ சென்று உணவருந்தி கண்டு வரவும்).

ஏதாவது எச்சில் இலை வந்து விழும் நேரம் அதுவரை இருக்கும் இடம் வெளியில் தெரியாமல் இருக்கும் இந்த நாய் அரக்க பரக்க விழுந்தடித்துக் கொண்டு ஓடி அந்த இலைப்பக்கம் வரும். அதில் ஒன்றும் இல்லை எனினும் அவ்விலையை அது விடாது. பறந்தடித்து ஓடி வந்ததற்காக ஒன்றுமில்லை எனினும் கொஞ்ச நேரம் அவ்விலையை போட்டு அங்குமிங்கும் இழுத்துப்போட்டு தனது வெறியை தீர்த்துக் கொண்டு போகும்.

சரி இனி விஷயத்திற்கு வருவோம்.

செப்டம்பர் 7 ஆன இன்று இந்திய மக்கள் தங்களின் தேசப்பற்றை மற்றவர்களுக்கு வெளிப்படுத்தும் நாள். எப்படி? இந்திய எல்லையில் ஊடுருவும் அந்நிய சக்திகளுக்கு எதிராக இந்திய இராணுவத்துடன் சேர்ந்து களமிறங்கியா?

இந்தியாவை அடக்கியாண்ட ஆங்கில அரசின் உற்பத்திகளை புறக்கணித்தா?

இந்திய உயர்பதவிகளில் அமர்ந்து கொண்டு அந்நிய நாட்டுக்கு உளவு வேலைப்பார்க்கும் பிச்சைக்காசுக்கு விலைப்போன தூத்தேறிகளை அரசாங்கத்துக்கு பிடித்துக் கொடுப்பதன் மூலமாகவா?

சுதந்திரப்போரில் உயிர்தியாகம் செய்த போராளிகளின் ஏழைக் குடும்ப அங்கங்களை தத்தெடுப்பதன் மூலமாகவா?

இந்திய நாட்டின் இறையாண்மைக்கு களங்கம் கற்பித்துக் கொண்டிருக்கும் ஜாதி/மத வெறியர்களையும், மத/மொழி/இனத்தின் பெயரால் பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விடும் தீவிரவாதிகளுக்கு எதிராக களமிறங்குவதன் மூலமாகவா? என்பது போன்று ஏதாவது கிறுக்குத்தனமாக மட்டும் கேட்டு விடாதீர்கள்.

தேசப்பற்றாளன் என நிரூபிக்க இவ்வளவு சிரமப்பட வேண்டிய அவசியம் ஒன்றும் இல்லை.

வந்தேறிகள் கொண்டு வந்த துர்கா மாதாவை வணங்கும் இரு வரிகள் மட்டும் பாடினால் போதும். காட்டிக் கொடுத்த/கொடுக்கும் ஹிந்துத்துவ தேசப்பற்றாளார்களுக்கு இது ஒன்றும் பெரிய காரியமில்லை தான்.

இரு வரிகளைப் பாடி துர்கையை ஆலாபித்து விட்டு அவர்களுக்கு தேசப்பற்றாளன் என்ற பெயரில் என்ன வேண்டுமானாலும் செய்யவும் செய்யலாம்.

யாருக்கு கணக்கு கொடுக்க வேண்டும்?.

ஆனால் படைத்த ஒரே இறைவனையே வணங்குவோம்; அவனைத் தவிர வேறு எவருக்கும் சிரம் பணியவோ, துதிக்கவோ மாட்டோம் என உள்ளத்தால் உறுதி பூண்டு முஸ்லிமாக வாழும் இந்திய சுதந்திரப்போராட்டத்தில் வீர காவியம் படைத்த இஸ்லாமியர்களைப் பொறுத்தவரை இது ஒருபோதும் கனவிலும் நினைக்க முடியாத காரியமாகும்.

எனினும் இவ்விஷயத்தை வைத்து அரசியல் இலாபம் தேட துடிக்கும் வந்தேறிகளின் அமைப்புகளுக்கு அதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்காதிருக்கவும், பக்கிம் சந்திர சட்டர்ஜியின் இந்தியாவை அடிமைப்படுத்திய ஆங்கிலேயர்களுக்காக துர்கா தேவியிடம் பிரார்த்தனை புரியும் பாடல் வரிகள் இஸ்லாமிய அடிப்படைக் கோட்பாட்டுக்கு எதிரான கருத்துக்களைக் கொண்டிருப்பதால், அதனைத் தவிர்க்கும் பொருட்டும், செப்டம்பர்-7 ஆன, இன்று இந்திய முஸ்லிம் குழந்தைகளை பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டாம் என்று அகில இந்திய முஸ்லிம் அரசியல் இயக்கங்களின் தலைவர்களும் மற்றும் மார்க்க அறிஞர்களும் கேட்டுக் கொண்டுள்ளார்கள்.

செப்டம்பர்-7, அன்று வந்தேறிகளின் பாடலை கட்டாயமாக்கலாமா என்று பரிசீலிப்பதாகச் சொன்ன மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம்,பாடல்வரிகள் முஸ்லிம்களின் மத உணர்வுகளுக்கு எதிரானது என்பதால் அதனைப் பாடியே ஆகவேண்டும் என்பது கட்டாயமில்லை என்று அறிவித்தது. அவ்வளவுதான்!

முஸ்லிம்களை தேச விரோதிகளாக்க ஏதாவது கிடைக்காதா? என நாக்கைத் தொங்கப்போட்டு காத்திருந்த சங்பரிவாரங்களின் எச்சில்வடியும் வாய்க்குக் கிடைத்த அவலாக, இப்பிரச்சினையை கையிலெடுத்துக் கொண்டு இந்திய முஸ்லிம்களின் தேசப்பற்றை, மத நம்பிக்கையுடன் மோதவிட்டு குளிர்காய முனைகின்றனர்.

இந்தியாவை 'காளி'யாகவும் துர்க்கையாகவும் உருவகப்படுத்தி ஆங்கிலேயர்களுக்காக பிரார்த்தனை புரிவதாக வரும் மதத்துவேச வரிகளைக் கொண்ட வந்தேறிகளின் பாடலை 'வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை' என்ற கொள்கையுடைய முஸ்லிம்கள் கட்டாயம் பாடியே ஆக வேண்டுமாம்!

அப்படிப் பாட விரும்பாதவர்கள் பாகிஸ்தானுக்குப் போக வேண்டுமாம்! அல்லது ஓட்டுரிமை பறிக்கப்பட வேண்டுமாம்! ஆனால் இந்தியாவைக் காட்டிக் கொடுத்த ஹிந்துத்துவ ஆசாமிகளையும் தேசவிடுதலைக்கு தன் வாழ்க்கையை அர்ப்பணித்த மஹாத்மா காந்தியை வதித்த ஆர் எஸ் எஸ் பரிவாரங்களும் தேசப்பற்றாளார்களாம்.

சுதந்திர இந்தியாவின் அரசியல் சாசனம் இந்திய மக்கள் எல்லோருக்கும் மதச் சுதந்திரத்தை வழங்கியுள்ளது. இந்திய அரசியல் சாசனத்தை என்றுமே மதிக்காத சங்க்பரிவாரங்கள் மற்றும் இந்தியாவின் தேசியக் கொடிக்கு மரியாதை செய்ய அரை நூற்றாண்டுகள் எடுத்துக் கொண்ட RSS கும்பலுக்கும் அதன் அரசியல் முகம் பிஜேபிக்கும் இதைச் சொல்ல என்ன தகுதி இருக்கிறது.

கடவுள் நம்பிக்கையற்ற கம்யூனிஸ்டுகளும் கூட 'காளியை' வணங்குவதாகப் பாடப்பட்ட வந்தேறிகளின் பாடலின் முதல் இரண்டு அந்தாதிகளை (Stanzas) பாடச்சொல்வது வியப்பாக இருக்கிறது! பாபர் மசூதியைத் தகர்த்தவர்கள் சங்பரிவாரக் கும்பல் என்றால் அதற்கு வழி ஏற்படுத்திக் கொடுத்ததோடு, தற்போது கட்டப்பட்டுள்ள கோவில் பீடத்திற்கு எஃகுச் சுவர் பாதுகாப்பு கொடுத்துக் கொண்டிருப்பது காங்கிரஸ்.

ஆக, இந்திய முஸ்லிம்களின் நலனை யார் அதிகம் சிதைப்பது என்ற விஷயத்தில் தான் இந்திய அரசியல் கட்சிகள் முனைப்புடன் செயல்படுகின்றன.

சமஸ்தானங்களாகப் பிரிந்து கிடந்த இந்தியாவிற்கு ஒரு பூவரைபடத்தை ஏற்படுத்தி ஓர் அகண்ட பாரதத்தை உருவாக்கிக் கொடுத்தவர்கள் முகலாய மன்னர்கள் - முஸ்லிம்கள் என்பதைச் சகிக்க முடியாமல் எழுதப் பட்டதுதான், 'ஆனந்த மடம்' என்ற நாவலில் வரும் "வந்தே(றிகளின்) மாதரம்" பாடல். இது தேசியப் பாடலுக்கு துளியும் தகுதியானது இல்லை என்பதற்கு, அப்பாடலில் வரும் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை வரிகளே சான்று.

முகலாயர்களை விரட்டிய ஆங்கிலேயரைக் கடவுள் ஆசீர்வதிக்க வேண்டும். இப்படிப்பட்ட வரிகள் அடங்கிய இப்பாடலை தேசப்பற்றுள்ள எவரும் நாட்டுப் பண்ணாக ஏற்க முடியாது.

அது முழுப்பாடலாக இருந்தாலும் அல்லது இரண்டு அந்தாதிகளாக இருந்தாலும் சரியே. ஒருவேளை இதனைப் பாடுவது தேசப்பற்றின் அடையாளம் எனபது அந்த ஆங்கிலேயர்களை விரட்டியடிக்க தன் வாழ்நாளை செலவழித்த காந்தியை சுட்டுக் கொன்ற சங்க்பரிவார ஆர் எஸ் எஸ் வன்முறை கும்பலுக்கு வேண்டுமானால் சரியாக இருக்கலாம்.

முகலாயர் ஆட்சியில் ஒரே வங்காளமாக இருந்ததை, இந்தியா-பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகு கிழக்கு மேற்கு எனத் துண்டாடியது ஆங்கிலேயர்கள் என்றால்,

அதனை பங்களாதேஷ் என்ற தனிநாடாக்கிப் பாகிஸ்தானை இந்தியாவின் நிரந்தரப் பகைவர்களாக்கும் அவர்களின் கனவை நனவாக்கியது காங்கிரஸ் கட்சி.

ஆக, வந்தேறிகளின் பாடலை அவமதித்தவர்கள் காங்கிரஸ்காரர்களே! இன்னொரு பக்கம் மோகன்தாஸ் காந்தியை தேசப்பிதா என்றால் நாக்கைப் பிடுங்கி கொள்ளும் சங்க்பரிவாரங்கள், காளியை 'தேசமாதா' என்பது உள்நோக்கம் கொண்டதாகும்.

ஆங்கிலேயருக்கு ஆதரவாக சாமரம் வீசியதோடு, சுதந்திரப்போராட்ட வீரர்களைக் காட்டிக் கொடுத்து உயர் பதவிகளை ஆக்கிரமித்ததோடு இன்றும் அதன் பலனை அறுவடை செய்து வரும் வந்தேறி கூட்ட சங்பரிவாரங்கள், நாட்டுச் சுதந்திரத்திற்காக கல்வி வாய்ப்புகளை இழந்து தியாகம் செய்த இந்திய முஸ்லிம்களின் தேசப்பற்றைக் குறைகூற கொஞ்சமும் தகுதியற்றவர்கள்.

SOURCE:http://123secure.blogspot.com/2006/09/blog-post_07.html

====================================

கண்ணை மறைக்கும் காவிப் புழுதி
சிறுபான்மையினர்க்கு எதிரான ஆர்.எஸ்.எஸ்இன் பொய்யும் புரட்டும் – 6

”சுதந்திரப் போராட்டக் காலத்தில் தேசபக்தர்களுக்கும், தூக்குக் கயிற்றில் தொங்கிய தியாகிகளுக்கும் உயிர் கொடுத்த மந்திரச் சொல் ‘வந்தே மாதரம்‘. தன்னிகரில்லா பாரதத் தாயின் மீது பக்தியையும், அன்பையும் தூண்டி எழுச்சியைத் தோற்றுவிக்கும் ‘வந்தே மாதர‘ தேசிய கீதத்தை கிறித்தவர்களும், முசுலீம்களும் பாட மறுக்கிறார்களே ஏன்?”

- ஆர்.எஸ்.எஸ்.இன் நீண்டகால அவதூறுகளில் இதுவும் ஒன்று.

கடந்த பத்தாண்டுகளாக பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் உள்ள பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்களில் வந்தே மாதரத்தைக் கட்டாயமாகப் பாடும் நடைமுறையை அவர்கள் ஏற்கெனவே ஆரம்பித்து விட்டார்கள். வந்தே மாதரத்தைப் பாட மறுக்கும் சிறுபான்மையினரைத் தேசத்துரோகிகள் என்று பெரும்பான்மை மக்கள் எளிதில் ஏற்கும் வண்ணம் பிரச்சாரமும் செய்து வருகிறார்கள். ஆகையால் வந்தே மாதரத்தையும் நாட்டுப் பற்றையும் இணைத்து இந்து மதவெறியாளர்கள் போட்டிருக்கும் இந்தப் பொய் முடிச்சை நாம் அவிழ்க்க வேண்டும்.

நாட்டுப் பற்று ஜெபத்திலா, சிறையிலா?

ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போராடியவர்களின் பெருமை, அவர்கள் ஒவ்வொரு நாளும் வந்தே மாதரத்தை உச்சசாடனம் செய்தார்களா என்பதில் இல்லை; தடியடி, சிறை, தூக்கு இன்னபிற கொடுமைகளை ஏற்றுக்கொண்டு தளராமல் போராடியதில்தான் இருக்கின்றது அவர்களது பெருமை. அதைத்தான் நாட்டுப்பற்று எனக்கூற முடியும்.

அதேசமயம் வெள்ளையர்கள் இருக்கும்வரை ‘ஷாகா’ சென்று கபடி விளையாடிய ஸ்வயம் சேவகக் குஞ்சுகள், ஒவ்வொரு நாளும் ‘வந்தே மாதரம்’ ‘பாரத் மாதாகி ஜெய்’ இரண்டையும் ஜெபம் செய்தார்களே ஒழிய, சுதந்திரப் போராட்டத்திற்காகத் தமது சுட்டு விரலைக்கூட அசைக்கவில்லை.

சிறைக் கம்பிகளைக் கூடக் கண்டிராத கோழைகளும், துரோகிகளுமான இந்துமத வெறியர்கள், வந்தே மாதரத்தின் ஊடாக நாட்டுப்பற்றை பற்றிப் பேசுவதற்கு என்ன அருகதை இருக்கிறது?

பாரதமாதா கிடக்கட்டும், பாரதம் என்று இன்று அறியப்படும் இந்தியாவே உருவாயிராத காலம்தான் 19ஆம் நூற்றாண்டு. பல்வேறு வழிமுறைகளில் ஆட்சியதிகாரத்தை வெள்ளையர்கள் கைப்பற்றிக் கொண்டிருந்த காலம் அது. அதனால் அதிகாரமிழந்தவர்கள் அவர்களை எதிர்ப்பதும், அதிகாரம் பெற்றவர்கள் ஆதரிப்பதும் இடத்திற்கிடம் மாறுபட்டது. உதாரணத்திற்கு மராத்திய சிவாஜிக்குப் பின், பேஷ்வாக்களின் ஆட்சியில் தக்காணம் முழுவதையும் பார்ப்பன ‘மேல்’சாதி நிலப்பிரபுக்களும், வியாபாரிகளும் ஆண்டு அனுபவித்தனர். ஆங்கிலேயரின் வரவு பேஷ்வா ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்தது. தமது சமூக மேலாண்மை பறி போனதைக் கண்ட மராத்திய சித்பவனப் பார்ப்பனர்கள், வெள்ளையர்களை எதிர்க்கத் துவங்கிய சூழ்நிலை இதுதான். திலகர், கோகலே, சாவர்க்கர் போன்ற சித்பவனப் பார்ப்பனர்கள் பிரிட்டிஷ் எதிர்ப்பாளர்களாக உருவான விதமும் அப்படித்தான்.

ஆங்கிலப் பிதாவிடம் ‘வங்கமாதா‘ காதல்!

மராத்திய நிலைமை இப்படியிருக்க வங்கத்தின் நிலைமை நேரெதிராக இருந்தது. மொகலாயர் ஆட்சிக்குப் பின்னால் வங்கத்தை ஆண்ட முசுலீம் நவாப்புகள், ஜமீன்தார்கள் ஆட்சியில் – பார்ப்பன ‘மேல்’சாதியினர் தமது அதிகாரத்தை இழந்து தவித்தனர். எனவே, நவாப்புகளை முறியடித்த ஆங்கிலேயர்களை அவர்கள் நெஞ்சார வாழ்த்தி வரவேற்றனர். இந்தச் சூழ்நிலையை வைத்து 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் பங்கிம் சந்திர சட்டர்ஜி என்ற பார்ப்பனர் ‘ஆனந்தமடம்’ என்ற நாவலை எழுதினர். முசுலீம் அரசர்களை எதிர்த்து இந்துச் சாமியார்கள் போராடுவதைக் கூறும் இக்கதையில்தான் ‘வந்தே மாதரம்’ (தாய்க்கு வணக்கம்) என்ற பாடல் வருகிறது. காளி, துர்க்கை, சரஸ்வதி, லட்சுமி என்ற தாயை விளிக்கும் ‘வந்தே மாதரம்’ இப்படித்தான் தோன்றியது.

”நம்முடைய நவாபின் ராஜ்ய பரிபாலனத்தைப் பாரும். மதம் போய்விட்டது; சமூகம் போய்விட்டது; மானம் போய்விட்டது; குலம் போய்விட்டது; இப்போது பிராணனும் போய்க் கொண்டிருக்கிறது…” இது ‘ஆனந்த மடம்’ நாவலில் வரும் ஒரு உரையாடல். இதில் யாருடைய மதம் – சமூகம் – மானம் – குலம் – பிராணன் போய்விட்டது என்பதை வாசகர்கள் புரிந்து கொள்ளலாம். அதனால்தான் முசுலீம் அரசர்களிடமிருந்து வங்கத்து மாதாவை விடுதலை செய்த ‘ஆங்கிலப் பிதாவை’ அன்றைய வங்கத்துப் பார்ப்பன ‘மேல்’ சாதியினர் மனதார வாழ்த்தினர். வந்தே மாதரத்தின் தோற்றத்திலேயே நாட்டுப்பற்றுக்கு இடமில்லை!

காலப்போக்கில் வங்கத்து வந்தே மாதரம் ஆங்கிலப் பிதாவை எதிர்க்கும் பாரத மாதாவாக மறுபிறவி எடுத்தது. இந்த பாரத மாதா பஜனையை விடுதலைப் போராட்டத்தில் திணித்தது காங்கிரசு கும்பலின் கைங்கரியமாகும். இந்திய அளவில் இந்து மதமும், பாரத மாதாவும் உருவாக்கப்பட்டு வந்த நிகழ்ச்சிப் போக்கும், காங்கிரசின் பார்ப்பன ‘மேல்’சாதித் தலைவர்களும் அவர்களின் பார்ப்பனிய இந்துத்துவக் கருத்தும் ‘வந்தே மாதரத்தை’ப் பயன்படுத்திக்கொள்ள ஏதுவாக இருந்தன.

பஜனை நாட்டுப்பற்று எங்கேயுமில்லை!

இந்த இடத்தில் வாசகர்கள் கொஞ்சம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். பிரிட்டன், போர்ச்சுக்கல், ஸ்பெயின், இத்தாலி, ஜெர்மனி, ஜப்பான் போன்ற ஏகாதிபதியங்களின் ஆதிக்கத்தின் கீழ் பல ஆசிய, ஆப்பிரிக்க, லத்தீன் அமெரிக்க நாடுகள் இருந்திருக்கின்றன. ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டங்களின் மூலம் விடுதலையும் அடைந்திருக்கின்றன. அந்நாட்டைச் சேர்ந்த மக்கள் கிறித்தவம், இசுலாம், பவுத்தம் என்ற பலவிதமான மதநம்பிக்கை கொண்டவர்களாகவே இருந்திருக்கின்றனர். லிபியாவின் ஓமர் முக்தா தனிப்பட்ட முறையில் ஆழ்ந்த இசுலாமிய மதப்பற்று கொண்டவர்; துருக்கியின் கமால் பாட்சாவோ மதச்சார்பற்றவர்.

சீனாவை ஆக்கிரமித்த ஜப்பானும், அடிமைப்பட்ட சீனாவும் பவுத்தமத நம்பிக்கை கொண்ட நாடுகள்தான். அமெரிக்க ஐரோப்பிய ஏகாதிபத்திய நாடுகளின் மதமும், அடிமைப்படுத்தப்பட்ட லத்தீன் அமெரிக்க நாடுகளின் மதமும் கிறித்தவம்தான்.

அடிமைப்படுத்தப்பட்ட நாடுகளின் மக்கள் தம்நாட்டைத் தாய்நாடென்றோ தந்தையர் நாடென்றோதான் அழைத்தார்கள். ஆனால், யாரும் கன்னி மேரியைப் போலவோ, ஏசுவைப் போலவோ, புத்தரைப் போலவோ ஒரு படம் வரைந்து வைத்து குடம், சாம்பிராணி காட்டி, இந்தப் படத்துக்கு பஜனை பாடுபவன்தான் உண்மையான நாட்டுப்பற்று கொண்டவன் என்று கூறவில்லை.

ஒரு மதத்தினர் மட்டுமே வாழும் நாடுகளில் கூட நடக்காத இந்தப் பித்தலாட்டம், பல மதத்தினர் வாழும் இந்தியாவில் நடந்தது.

ரவிவர்மாவின் லட்சுமி காங்கிரசின் பாரத மாதா

கோயில்களின் அம்மணமாக நிற்கும் பெண் கடவுள்களை மாதிரியாகக் கொண்டு, அந்தப் பெண் உருவங்களுக்கு பார்ப்பன, உயர்சாதி மாமிகளின் பாணியில் சேலை கட்டி, ”இதுதான் லட்சுமி, சரஸ்வதி, பார்வதி” என்று வரைந்து தள்ளினார் திருவதாங்கூர் மன்னர் பரம்பரையைச் சேர்ந்த ஓவியர் ரவிவர்மா. இப்படி ‘மாதா’க்களை உருவாக்கிய மன்னர் பரம்பரைதான் கடைசிவரை வெள்ளையனின் விசுவாச அடிமையாக இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. முதுகில் நாலு கை முளைத்த லட்சுமிதான் பாரத மாதா; இந்தப் பெண் தெய்வத்தை வருணிக்கும் பாடல்தான் ‘விடுதலைக் கீதம்’ என்று சொன்னால் அது பிற மதத்தினரை வெறுப்படையத் செய்யாதா?

இப்படித்தான் விடுதலைப் போராட்டத்திலிருந்து மதத்தின் பெயரால் முசுலீம் மக்களைத் தனிமைப்படுத்தும் போக்கை காங்கிரசுக் கும்பல் ஆரம்பித்து வைத்தது. உருவ வழிபாடில்லாத, ஓரிறைக் கோட்பாட்டில் நம்பிக்கை கொண்ட கிறித்தவ, இசுலாமிய மதங்களைச் சேர்ந்த மக்கள் வந்தே மாதரம் பாடுவதன் மூலம் இந்துத் தெய்வங்களை வணங்க வேண்டும் என்பது இந்துமத வெறியர்களின் குரூரமான விருப்பம். பாட மறுக்கும்போது தேசவிரோதிகள் என்று பிரச்சாரம் செய்வது அவர்களது பாசிச நோக்கம் நிறைவேற்றுவதற்கான வாய்ப்பு.

பாரத மாதாவை விற்பவர்கள் யார்?

ஒரு நாடு என்பது அங்கு வாழும் மக்களை மட்டும்தான் குறிக்கும். நாட்டுப்பற்று என்பது அம்மக்களின் நலனில் அக்கறை கொண்டிருப்பதை மட்டும் குறிக்கும். மக்களையும், அவர்கள் நலனையும் பற்றிக் கவலைப்படாத இந்து மதவெறியர்கள்தான் நாட்டை தெய்வம், படம், பூசை என்று சடங்கு முறையாக்கும் ”தேசபக்தி”க்குச் சொந்தக்காரர்களாக இருக்கிறார்கள். ஆகையால் நாட்டை தெய்வமாக்குவதை அதுவும் பார்ப்பனத் தெய்வமாக மாற்றுவதை அனைவரும் எதிர்க்க வேண்டும்.

ஆகாசவாணியின் விடிகாலை ஒலிபரப்பில் கீறல் விழுந்த ரிக்கார்டாக ஒலித்துவந்த வந்தே மாதரத்தை, பிரேக் டான்சின் வலிப்புக்கேற்ப பாப்பிசை ‘வண்ட்டே மாட்றம்’ ஆக சோனி நிறுவனம் உலகெங்கும் வெளியிட்டிருக்கிறது. இன்னொருபுறம் மேல்நிலை வல்லரசுகளுக்காக நாட்டையே காட்டிக் கொடுத்து விற்கும் தரகனாக பா.ஜ.க. அரசு செயல்பட்டு வருகிறது.

இப்படி அரசியலிலும் பண்பாட்டிலும் பொருளாதாரத்திலும் ”பாரத மாதா”வை விற்பவர்கள் முசுலீம்களோ, கிறித்தவர்களோ அல்ல!

SOURCE: http://www.vinavu.com/2011/07/11/conversion-6/

0 comments:

இஸ்லாமிய வரலாற்றில்

இஸ்லாமிய வரலாற்றில் பலஸ்தீன் படத்தின் மேல் சொடுக்கி படிக்கவும்.
பலஸ்தீன் வரலாறு

.

.

About This Blog

***இவ்வளைதளத்தின் பதிவுகளை தங்களுடைய வளைத்தளத்தில் மீள்பதிவு செய்பவர்கள் அன்பு கூர்ந்து இவ்வளைத்தளத்தின் சுட்டியை தங்களுடைய மீள்பதிவுகளில் இணைக்குமாறு அன்புடன் கோரப்படுகின்றார்கள்.

Labels

Lorem Ipsum

ISLAM HISTORY.

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP