**Followers.அன்பர்கள்.** தாங்களும் இணையலாமே!!!

இறைவனுக்குமா இடைத்தரகர்?

>> Saturday, January 13, 2007

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

இறைவனுக்குமா இடைத்தரகர்?

முஸ்லிம்களில் இன்று பலர் தர்ஹாவிற்கு சென்று அங்கு இறந்து போன அவ்லியாக்களிடம் நேரடியாக தங்களுடைய தேவையை கேட்பதும், நேர்ச்சைகள் செய்வதும் அவர்களுக்காக விழா எடுப்பதும் அதற்கு ஆலிம்கள் எனப்படுவோர் இணைவைக்கும் இச்செயலை கண்டிக்காமல் அதனைக் கண்டும் காணாதது போல் இருப்பதும் மிக வேதனையானது.

நபி (ஸல்) கூறினார்கள், 'யஹுதிகளையும், நஸாராக்களையும் அல்லாஹ் சபித்துள்ளான். அவர்கள் தங்களது நபிமார்களுடைய கபுருகளை வணக்கஸ்தலமாக்கி விட்டனர்.' (புகாரி)

நபிமார்களுடைய சமாதிகளையும், வலிமார்களுடைய சமாதிகளையும் கௌரவிக்கும் விஷயத்தில் எல்லை மீறி அவர்களிடம் நம் தேவைகளை துவா செய்தால், அதனால் சமுதாயத்தில் 'ஷிர்க்' என்னும் மாபாதகம் நடந்தேரும். மேலும் அல்லாஹ்வின் கோபத்துக்கும், சாபத்துக்கும் உள்ளாக நேரிடும் என்பதை உணர்த்தவே மேற்கண்ட ஹதீஸ் அறிவுறுத்துகிறது.

மற்றும் ஒரு ஹதீஸ் 'அறிந்து கொள்ளுங்கள் உங்களுக்கு முன்பிருந்தோர் அவர்களது நபிமார்களுடைய அவர்களிடையே வாழ்ந்த நல்லடியார்களுடைய அடக்கஸ்தலங்களை வணக்க ஸ்தலங்களாகக்கினார்கள்.

ஆனால் நீங்கள் சமாதிகளை வணங்குமிடமாக்காதீர்கள். நிச்சயமாக நான் அதை விளக்கியுள்ளேன். இவ்வாறு கபுருள்ள இடங்களில் இறைவனை தொழவும் கூட நபி(ஸல்) அவர்கள் தடை செய்த நிலையில் உன்னத சமுதாயமென திருமறையால் புகழப்பட்ட முஸ்லிம்கள் இன்று தங்களது தேவைகளை தங்களது இறைவனிடம் கேட்க வேண்டுமென்பதை மறந்து தம்மைப் போன்ற சிருஷ்டிகளின் கல்லறைகளில் மண்டியிட்டு முறையீடு செய்வது பற்றி என்னென்று சொல்வது? அது அநாகரிகமில்லையா? அது இறைவனுக்கு இணை வைக்கும் 'ஷிர்க்' ஆகுமா இல்லையா? என்பதை முஸ்லிம்கள் சிந்திக்க வேண்டும்.

என்னுடைய அடக்கஸ்தலத்தை நீங்கள் உற்சவ ஸ்தலமாக்கி விடாதீர்கள். (நஸயீ) என்று இவ்வாறு கூறியிருக்கிறார்கள் என்றால், இன்று நமது சமுதாயத்தினரிடையே உள்ள பலர் அவுலியாக்களின் சமாதிகளிலும், தர்காக்களிலும் நடத்துகின்ற பேய் கூத்துகளுக்கு ஏதாகிலும் அர்த்தமுண்டா?

திருமறையில் 'முஷ்ரிக்குகள்' எனக் கூறப்பட்டவர்கள் ஏகத்துவத்தில் இணை வைப்பவர்களே. சூறே பாத்திஹாவில் இய்யாக நஹ்புது வஇய்யாக நஸ்தஈன் (உன்னையே நாங்கள் வணங்குகிறோம், உன்னிடமே நாங்கள் உதவி தேடுகிறோம். என்று அல்லாஹ் சொல்லித் தருகிறான். நிராகரிப்பதற்குச் சமமாகும் என்று அல்லாஹ் எச்சரிக்கை செய்கிறான்.

பெரும்பாலான முஸ்லிம்கள் இதர சமுதாயத்தினரைப் போலவே தங்கள் தேவைகளை வேண்டுதல்களை அவுலியாக்களின் சமாதிகளை நாடிச் சென்று சிரம் குனிந்து குறைபாடுகளை முறையிடுகின்றனர். இவர்களது முறையீடுகளை அந்த நல்லடியார்கள் செவியுருகிறார்களா? என்றால், அல்லாஹ் கூறுகிறான்,

(நபியே) நிச்சயமாக நீர் மரித்தோரைக் கேட்கும்படிச் செய்ய முடியாது. (27:80) பிரார்த்தனை அல்லது தேவைகளை முறையீடு செய்வது என்பதும் வணக்கமேயாகும்.

சிபாரிசு செய்யத் தகுதி பெற்றவர்கள் எனக் கருதி மறைந்த பெரியார்களின் விக்கிரங்களை அன்றைய அரபியர்கள் வணங்கியும், பிரார்த்தித்தும் வந்தார்கள். நபி(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள் 'பிரார்த்தனை வணக்கத்தின் மூளை' (அனஸ்(ரலி),திர்மிதீ.

'பிரார்த்தனை என்பதே வணக்கம்தான்' (நூமானுபின் பஷீர்(ரலி), அஹ்மத், திர்மிதீ).

மேலும் அல்லாஹ் திருமறையில் கூறுகிறான்,

என்னையே பிரார்த்தியுங்கள் நான் உங்களுக்கு பதிலலிக்கிறேன். (40:60)

'நிச்சயமாக அல்லாஹ்வையன்றி எவர்களை நீங்கள் அழைக்கிறீர்களோ, அவர்களூம் உங்களைப் போன்ற அடிமைகளே. (7:194)

எவர் அவனையன்றி அழைக்கிறார்களோ, அவர்கள் இவர்களுக்கு எவ்வித பதிலும் தரமாட்டார்கள்.(13:14)

அல்லாஹ்விடம் மட்டும் தான் உதவி தேடவேண்டும், அவனிடம் மட்டும் தான் பிரார்த்தனை செய்யவேண்டும் எனவும் அல்லாஹ் திருமறையில் தெளிவுபட கூறுகிறான்.

மேலும் திருமறை கூறுகிறது.


இந்நிராகரிப்போர் நம்மை விட்டு விட்டு நம்முடைய அடியாளர்களை தங்களுக்கு உதவியாளர்களாக எடுத்துக் கொள்ளலாமென்று எண்ணிக் கொண்டிருக்கின்றனரா? (18:102) என்று இறைவன் கேட்கிறான்

சிலர் இந்த வசனம் விக்ரகங்களை வணங்கும் காபிர்களுக்கு இறங்கியது கையால் முஸ்லிம்களுக்கு பொருந்தாது என தங்களது அறியாமையை வெளிப்படுத்துகின்றனர். இறைவன் இவ்வசனத்தில் நம்முடைய அடியார்கள் என்று குறிப்பிடுவதே மறைந்த மகான்களைத்தான் குறிக்கின்றது என்பதை உணரலாம்.

இப்படிப்பட்ட வசனங்கள் மூலமாக குர்ஆனில் அல்லாஹ் இட்ட கட்டளைக்கு நபி (ஸல்) அவர்கள் எப்படி விளக்கம் கொடுத்தார்களோ அப்படி நடக்க வேண்டும். அல்லாஹ்வோ, நம்முடைய நபியோ 'வலிமார்களின் தர்காக்களுக்கு சென்று உங்கள் தேவைகளை கேளுங்கள் அவர்கள் கொடுப்பார்கள்' என்று எங்கேயும் சொல்லவில்லை. ஆனால் வாதத்துக்காக சிலர் குர்ஆனுக்கு தங்கள் இஷ்டம்போல் விளக்கம் கொடுத்து மக்களை வழிகெடுக்கிறார்கள்.

மேற்கூறிய விளக்கங்களிலிருந்து அல்லாஹ் அல்லாத இறந்து போன அவ்லியாக்களிடம் தங்களுடைய தேவைகளுக்காக வேண்டுகோள் வைப்பது இஸ்லாத்திற்கு முற்றிலும் முரண்பட்ட செயல். முஸ்லிம்களை வழிகேட்டின்பால் கொண்டு சென்று மன்னிக்கப்படாத குற்றத்திற்கு ஆளாக நேரிட்டு நரகத்திற்கே இட்டுச் செல்லும் என்பதை நினைவில் கொள்வோமாக!

அவ்லியாக்களின் பெயரால் மக்கள் கண்மூடித்தனமான அனாச்சாரங்களை ஆங்காங்கே அரங்கேற்றி வரும் அவலங்களை நம்மைச்சுற்றிலும் பார்த்து வருகிறோம்.

குருட்டுத்தனமான பக்தியால் விவஸ்தையே இல்லாமல் அவ்லியாக்களின் இலக்கணம் தெரியாமல் யார் யாரையெல்லாம் அவ்லியாக்கள் (இறை நேசர்கள்) என கொண்டாடி வருகிறார்கள் தெரியுமா?

1. வாயில் போட்டு மென்ற வெற்றிலையால் பிள்ளை வரம் கொடுப்பவர் அவ்லியா !

2. எச்சிலைத் தண்ணீரில் துப்பி வேண்டியது நடக்க துப்பிக்கொடுப்பவர் அவ்லியா !

3. பச்சைத் தலைப்பாகை,நீண்ட அங்கி, ஜபமாலை சகிதம் உலா வருவோர் அவ்லியா!

4. மாந்திரீகம்,இஸ்மு,தகடு,தாவீஸ்,இலை,பீங்கான் என ஏமாற்றும் தங்ஙள்கள் அவ்லியா!

5. தர்காக்களின் ஆதீன கர்த்தா, அவ்லியாவின் வாரிசு என வசூலுக்கு வருவோர் அவ்லியா!

6. செய்கு முஹ்யித்தீன், நாகூர் நாயகம் பரம்பரை என தம்பட்டம் அடிப்போர் அவ்லியா!

7. குழி தோண்டி (துணி நெய்யும் குழியில்) கஃபாவை காண்பவர் அவ்லியா (பீரப்பா)

8. காமமோகம் கொண்டு பெண்களை தனிஅறையில் சந்தித்து முரீதுகொடுப்பவர் அவ்லியா!

9. பெண்களையும் ஆண்களையும் தடவிக்கொடுத்து ஓதி ஊதுபவர் அவ்லியா!

10. நிர்வாண கோலமாக அலையும் சன்னியாச பரதேசிகள் அவ்லியாக்கள் !

11. கஞ்சா அபின் போன்ற போதைப் பொருட்களை பயன்படுத்துவோர் அவ்லியாக்கள்!

12. இரவெல்லாம் கேளிக்கைகளிலும், சல்லாபங்களிலும் ஈடுபட்டுப் பகலிலே பத்தினிகளாக நடிப்போர் அவ்லியாக்கள்!

இவர்கள் பெயரை உச்சரித்துக் கொண்டு சில போலிப்பேர்வழிகள் ஆங்காங்கே கடற்கரையில், வாய்க்கால் ஓரங்களில், காடுகளில், மேடுகளில், பாலைப் பெருவெளிகளில் கல்லறைகளைக் கட்டிக் கொண்டு உள்ளே இருப்பவர் ‘அவ்லியா’ எனக் கூறி கட்டுக்கதைகளையும், கனவுக்காட்சிகளையும் அரங்கேற்றி மக்களை நம்ப வைத்து போலிச்சாமியார்களையும் மிஞ்சுமளவுக்கு போடும் ஆட்டங்கள் அப்பப்பா சொல்லவே வாய் கூசுகிறது.

1, புலி மீது வந்து நடமாடும், காப்பாற்றும் அவ்லியா.

நெல்லை மாவட்டம் பொட்டல் புதூருக்கு மேற்கே ஏழு மைல் தொலைவில், 1800 அடி உயரத்தில் கோதரிசா என்ற மலை உள்ளது. இங்கு கோதரிசா என்ற அவ்லியா வாழ்ந்து மறைந்தார். அவர், இப்பொழுதும் புலிமீது அமர்ந்து வருவதைச் சிலர் பர்த்து வருதாகவும், புலி மீது உலா வரும் அவருடன், சிலர் உரையாடியிருப்பதாகவும், சொல்லப்படுகிறதாம்.

2, கயிற்றில் தொங்கும் அவ்லியா
கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கோட்டில் 1950-ம் ஆண்டுகளில் “மக்கட்டி இலப்பை” என்று ஒரு மஹான் இருந்தாராம். அவர், பல வேடிக்கைகளை, வேடிக்கையாக செய்வதுண்டாம். அந்த மகான்..? ஒரு நாள் ஒரு கடைக்குச் சென்று, அந்தக் கடைக்காரரிடம், வாழைப்பழம் கேட்டிருக்கிறார். கடைக்காரர் இல்லையென்று, விரட்டிவிட்டாம். அந்தக் கடைக்காரர் மறுநாள், காலையில் கடையைத் திறந்தபோது, மக்கட்டி இலப்பை என்ற இந்த அவ்லியா பழக்குலை கட்டியிருந்த கயிற்றில் கழுத்தைக்கட்டி தொங்கிக் கிடந்தாராம். திடுக்கிட்ட கடைக்காரர் உடனே காவல் துறைக்குத் தகவல் கொடுத்ததும் அவர்களும் விரைந்து வந்துட்டார்களாம். அவர்கள் மக்கட்டி இலப்பையை பிரேத பரிசோதனை செய்வதற்காகக் கொண்டு செல்ல கயிற்றை அறுத்தபோது, இங்கேயும் நிம்மதியாக தூங்க விடமாட்டீர்களா? இப்படித் தொல்லை தருகிறீர்களே! என்று சலித்துக்கொண்டு அங்கிருந்து மாயமாக மறைந்து விட்டாராம்.

3,வியாபாரியாய் இருந்து, அவ்லியா-வாக மாறிய மாலிக் முஹம்மது ஒலியுல்லாஹ்.

இவர் யார் ? எந்த ஊர் ? எப்போது பிறந்தார்? என்பது தெரியவில்லை. வியாபாராத்திற்காக வந்தவராம் அந்த ஊரிலே இறந்து விட்டார். நல்ல மனிதராகத் தெரிந்ததால் அவரை அடக்கம் செய்து பெரிதாக கப்ரும் கட்டிவிட்டார்கள். பின்னர் அவரை ஒரு மகானாக ஏற்றுக் கொண்டு, “மெய்நிலை கண்ட ஞானி மஹான் மாலிக் முஹம்மது ஒலியுல்லாஹ்” என்று அறிவித்து, அந்த ஊர் மக்கள் ஆண்டு தோறும் விமரிசையாக விழா நடத்தி வருகிறார்கள்.

4,விண்ணுயர அவ்லியாவின் கப்ருஸ்தான்!
கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கோட்டில் உலகிலேயே ஒரு வித்தியாசமான “கப்ரு” உள்ளது. அது மேற்கூரையை முட்டும் வண்ணம் மிகஉயரமாகக் கட்டப்பட்டுள்ளது. ஏன் இந்த கப்ரு மட்டும் இவ்வளவு உயரமாகக் கட்டப்பட்டுள்ளது? என்பதற்கு, “மக்காமு இலப்பை”- இருந்த நாட்களில், இது மறுமை நாளின் அடையாளங்களில் ஒன்று என்றும், இது வளர்ந்து கொண்டே, இருக்கும். வளர்ந்து, வளர்ந்து விண்ணை முட்டும் போது, கியாமத் நாள் வந்துவிடும் என்பார்களாம், அவர் காலமான பிறகு அவரது மகன், தந்தையின் பதவிக்கு வந்தார். அவருடைய நாட்களிலும் மக்கள் அப்படியே பேசிக் கொண்டார்கள். இப்போது, அவரது பேரன் அங்கே இருக்கிறார். இந்நாட்களில், மக்களுடைய மன நிலையில் பெரிமாற்றம் “இதையெல்லாம் அவர்கள் நம்பவில்லை. ஆனாலும் சில பெயர்தாங்கி முஸ்லிம்களால் வணக்கங்களும், விழாக்களும் தொடாந்து கொண்டே இருக்கிறது.”

5,பாறையை தாங்கி நிற்கும் ராட்சஸ திருச்சி நத்ஹர்ஷா வலி அவ்லியா

சிரியாவிலிருந்து படகேறி வந்த இவரும், இவரது சீடர்களும் திருச்சி வந்து, அங்குள்ள மலைமீது தவம் செய்து வந்தார்கள். என்று, இங்குள்ள பெயர் தாங்கி முஸ்லீம்கள் நம்புகிறார்கள். அப்படி அவர்கள் தபசு செய்யும்போது. சில பூதங்கள் ஒன்று திரண்டு இவர்கள் மீது ஒரு பாறையைத் தள்ள, இவர்கள் தம் தவவலிமையால், அது தங்கள் மீது விழாது செய்து விட்டார்களாம். இப்போதும், சாய்ந்த நிலையில் இருக்கிற ஒருப் பாறையைக் காட்டி, இதுதான் அந்தப் பாறை என்கின்றனர். அது மட்டுமல்லாமல் தம்மீது விழாது, இவர்கள் தம் பாதங்களை ஊன்றி நின்றபோது, இவர்களின் பாதங்கள் பதிந்த அடையாளமும், பாறையின் மீது இவர்களின் கை பதிந்த அடையாளமும், இப்பொழுதும் இருக்கின்றன பாருங்கள். என, திருச்சி நத்ஹர்ஷா வலி- யைப்பற்றி சில பெயர்தாங்கி முஸ்லிம்கள் கூறி வருகின்றனர்.

6, ஐந்து வேளையிலும் ஆடுபோல் கத்தும் அவ்லியா

துருக்கி நாட்டைச் சேர்ந்த “கோயுன் பாபா என்ற அவ்லியா” வாய்பேசுவது இல்லை. ஆனாலும், ஐந்து வேளை தொழுகைகளின் போதும் ஆடு கத்துவது போன்று கத்துவாராம். இதன் காரணமாக இவருக்கு இப்பெயர் ஏற்பட்டது என மக்கள் கூறுவரர்களாம், ஆனா…, வாய் பேசாமல் ஆட்டைப் போன்று கத்திய ஊமையரை, அவ்லியாவாக, சில பெயர்தாங்கி முஸ்லிம்கள் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். எப்படி… ?

7, காடு மலைகளில் தாவி தவமிருந்த அவ்லியா
கருவிலேயே ஞானியான மோன குரு மஸ்தான் ஏழு வயதிலேயே வாயை மூடியதால்”ஊமைப்பிள்ளை” என்று அழைக்கப்பட்டார். இளம் வயதிலேயே துறவறத்தை? மேற்கொண்ட இவர், நாற்பது நாட்கள் (தனித்திருந்து தியானத்தில?) ஈடுபட்டிருந்தாராம். பின்னர் சிக்கந்தர் மலையிலும், பீரான் மலையிலும், மலேயாவிலுள்ள கொடிமலையிலும், இலங்கையிலுள்ள ஆதம் மலையிலும், தஃப்தர் ஜெய்லானியிலும் தவமிருந்தாராம். பின்னர் சாமி நாதன் செட்டியாரும், சுப்ரமண்யம் செட்டியாரும் இவருக்கு தொண்டியின் கடற்கரை அருகில், கடடிக் கொடுத்த மடத்தில் அமர்ந்து அருளுரை வழங்கினார். இவர் யாரிடமும் பேசுவதில்லை. எப்போதும் மௌனமாகவே இருப்பாராம். அப்படியாயின்.., எப்படி அருளுரை வழங்கினார்? இந்த “மவுன குரு மஸ்தான் சாகிபு” ?

8, பறக்கும் அவ்லியாக்கள்!

அஹ்மது இப்னு கஸ்ரவிய்யா என்பவர் பல்கு என்ற நாட்டில் பிறந்தவராம். இவர் இறைவனுக்கு மிகவும் நேசமானவர் என போற்றப்படுகிறார். இந்த அவ்லியா அவர்களுக்கு, 1000 க்கு மேற்பட்ட மாணவர்கள் இருப்பர்களாம். இவர்களது வரலாறறில், இவர்கள் அத்தனை பேரும் ஓர் ஊரிலிருந்து மற்றொரு ஊருக்குச் செல்லும் போது விமானங்களையோ, விண்கலங்களையோ, பறக்கும் தட்டுகளையோ பயண்படுத்துவது இல்லையாம். மாறாக, அவர்கள் அப்படியே பறந்தே செல்வார்களாம் ( ரொம்ப சுவராஸ்யமாக இருக்குதா ) இவரும் இவரது சீடர்களும் நடந்து சென்றதில்லையாம். எப்பொழுதும் பறந்தே செல்வார்களாம். அது மட்டுமல்ல…, இந்த மஹான் கஸ்ரவிய்யாவின் மாணவர்கள், தண்ணீரிலே நடந்து செல்வார்களாம். இவ்வாறு, பல அவ்லியாக்கள் தண்ணீரிலே நடந்ததாகவும், மிதந்ததாகவும் சில பெயர்தாங்கி முஸ்லிம்கள் நம்புகின்றனர்.

9, காலடியில் கஃபத்துல்லாஹ்!
நெசவு வேலை செய்து கொண்டிருந்த பீர் முஹம்மது ஒலியுல்லாஹ் அவர்கள், உளளுரிலுள்ள பள்ளிவாசல் வந்து தொழுவதில்லை என மக்கள் ஸதகத்துல்லாஹ் அப்பா என்பவரிடம் புகார் கூறினார்களாம். நேரடியாக அவரிடமே கேட்டு தெரிந்து கொள்ளலாமென்று, இவருடைய வீட்டுக்கு வந்தார்களாம். அப்போது வந்தவர்கள் அவ்லியா பீரப்பாவின் நலன் விசாரித்த பிறகு, பள்ளிவாசல் வந்து தொழுகை செய்ய வில்லையே…! எனக் கேட்டவுடன், பீரப்பா அவர்கள், நான் மக்கள் நடமாடும் பள்ளிவாசல்களில் தொழுவதில்லை. நான் எப்போதும் மக்கா சென்று, கஃபத்துல்லாஹ்வில் தொழுவது தான் வழக்கம் என்று கூறினார்களாம், அது எப்படி முடியும்? அது பல ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அந்த பக்கம் இருக்கிறதே..! அது எப்படி சாத்தியப்படும்? என்று ஆச்சரியத்தோடு கேட்டார்களாம், ஸதகத்துல்லாஹ் அப்பா. அதைக் கேட்ட பீரப்பா அவர்கள் ‘இதில் ஆச்சரியப்படுவதற்கு என்ன இருக்கிறது? என்று கேட்டுவிட்டு ‘இதோ பாருங்கள்! என்று நெசவு நெய்துகொண்டிருந்த குழியிலிருந்து தமது காலை அகற்றினாராம். அங்கே…,! அவருடை கால் பாதம் இருந்த இடத்தில் கஃபத்துல்லாஹ் தெரிந்ததாம். வீட்டிலே கால் அகட்டி உண்மையை காட்டிக் கொண்டிருந்த மகான் பீரப்பா, பக்தியோடு தொழுது கொண்டிருந்தாராம். அங்கிருந்த எல்லாரும் ஆச்சர்யப்பட்டு து-ஆ செய்து திரும்பினார்களாம். அவர்களது வம்சத்தினர் இப்போது அந்த மகானுக்கும், கால் அகற்றி கஃபத்துல்லாஹ்வைக் காட்டிய அந்த மாபெரும் உண்மைகளுக்கும், இன்று மரியாதை செய்து வருகின்றனர். அந்த உண்மையை பற்றிக் கொண்டு, அந்த உண்மைக்கு கந்தூரி விழா எடுத்துக் கொண்டாடுகின்றனராம்

10, கஃபாவுக்குப் பறக்கும் அவ்லியா

காயல்பட்டணத்தில் வாழ்ந்த தைக்கா சாஹிப் வலியுல்லாஹ் என்ற மஹான் அவர்கள். ஒவ்வொரு வக்துக்கும் கஃபத்துல்லாஹ்வுக்குச் சென்று தொழுது வருவார்களாம். மக்கா செல்வதற்கு அவர் பயன்படுத்துவது, ஒரு மரப்பெட்டி…! ஆச்சர்யப்பட வேண்டாம் அந்த மரப்பெட்டியில் ஏறி அமர்ந்ததும், அது கஃபாவுக்குப் பறந்து சென்று, தொழுது திரும்பி வந்து விடுமாம். அந்த மரப்பெட்டி இன்றும் அவர்கள் நினைவாக அங்கே தொங்கிக் கொண்டிருக்கிறது. இவரையும் மறக்காமல், சில இஸ்லாமிய பெயர் தாங்கிகள்!? விழா எடுக்கிறர்களாம். இவர்கள் பக்தி மிகப் பெரியது.., பாராட்டுவோம் இல்லன்னா ஆபத்து..!

11, தனது குடலை தானே வெளில் எடுத்து, தனது குடலை தானேத் துவைத்துக் கழுவும் அவ்லியா..!

ஸதகத்துல்லாஹ் அப்பா அவர்கள் ஒருமுறை காட்டுபாவா சாஹிப் என்ற மலை முகட்டில் நடந்து போய்க் கொண்டிருந்தார்களாம். அங்கே ஒரு நீரோடையில் குளித்துக் கொண்டிருந்த பீரப்பா அவர்கள், திடீரென காறி உமிழ்ந்து தமது குடலை தானே வெளில் எடுத்து, துவைக்க ஆரம்பித்து விட்டாராம். இதைப் பார்த்த ஸதக்கத்துல்லாஹ் அப்பா ஆச்சரியப்பட்டு, என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? என்றுக் கேட்டார்களாம். உடனே துவைத்துக் கொண்டிருந்த தன் குடலை…! தானே விழுங்கிவிட்ட..! பீரப்பா மஹான், அதை துவைத்து சுத்தம் செய்து கொண்டிருக்கிறேன் என்று, பதில் சொன்னாராம். மருத்துவ உலகத்திற்கே அதிர்ச்சியான செய்தி..! ஆனால்.., “இதுதான் உண்மை என்கின்றார்களா இஸ்லாமிய பெயர் தாங்கிகள்!

12, புறா, வண்டு, ஈ, மற்றும் ஓலையிடமெல்லாம் பேசுகின்ற அவ்லியா!

பல்லாக்கு வலியுல்லாஹ் கி.பி 1268-களில் கீழக்கரையில் வாழ்ந்ததாக நம்பப்படுகிறார். இந்த மஹானைப் பற்றியும், ஏராளமான கதைகள் சொல்லப்படுகின்றது. இவர் ஒரு மஜ்துர்ப். அதாவது, தன்னிலை மாறும் போது உணர்வற்று வாயில் வந்த படி உளறக் கூடியவராக இருந்ததாக, இவரை நம்பாதவர்கள் குற்றஞசாட்டுவது உண்டாம். அந்த நாட்களில் இவர்களுக்கு தொழுகை கடமையில்லையாம்….?

புறா,வண்டு, ஈ, ஓலை ஆகியவையிடமெல்லாம், பேசுவதும், அவைகளுடைய பேச்சை அறியும் ஆற்றலை, இறைவன் இவர்களுக்கு வழங்கியிருந்தானாம்.

13. மோதீனார் அவ்லியா
இவர் தான் மஹான் நூருத்தீன் ஒலியுல்லாஹ்! திருவிதாங்கோடு அஞ்சு வன்னம் ஜும்மா பள்ளியில் அடக்கமாயிருக்கும் இவர் அந்தப்பள்ளி வாசலில் மோதீனாராக பணியாற்றி வந்தவர். அங்கே அவ்லியா இல்லாத குறையை போக்க வழி தேடிக்கொண்டிருந்த ஊர் மக்களுக்கு,”இது நமக்குக் கிடைத்த மிகப் பெரும் பேறு” எனக் கருதி சாதாரண நூருத்தீன் மோதீனாராக இருந்த இவரை “மஹான் நூருத்தீன் ஒலியுல்லாஹ்” என விளம்பரப்படுத்தி இன்று அவருக்கும் கோலாகலமாக ஆண்டு தோறும் விழா நடைபெற்று வருகிறது.

14. இலங்கையில ஒளிவீசும் அவ்லியா
இலங்கையில் தஃப்தர் ஜெய்லானி என்றொரு இடம் மலை முகட்டில் உள்ளது. அங்கே உள்ள துவாரத்தில் பார்த்தால் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜெய்லானின் ஒளி வீசிக்கொண்டு இருப்பதாக ஆண்களும் பெண்களும் கூட்டம் கூட்டமாகச் சென்று பார்த்து வருகின்றனர். .அந்த இடத்தைநாமும் பார்வையிட்டபோது துவாரம் செல்லும் அடிவாரத்தில் சூரியனின் ஒளிபட்டு அங்கே வெளிச்சம் தெரிகிறது.இதை வைத்து அவ்லியாவின் ஒளி வீசுகிறது என கதை கட்டிவிட்டார்கள். இந்த ஒளி பகலில் மட்டும் தான் தெரியும். இரவில் தெரிவதில்லை.இதிலிருந்தே அவ்லியாவின் ஒளி இல்லை எனடபதை எந்த பாமரனும் புரிந்து கொள்ளலாம். முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி இலங்கைக்கு வந்ததாக வரலாறே கிடையாது. ஏன் இந்தியாவுக்கக் கூட அவர்கள் வந்ததில்லை.

15. 40, 60, 80 அடி நீளத்தில் அவ்லியாக்கள்.
தஞ்சை மாவட்டம் முத்துப்பேட்டையில் அடங்கப்பெற்றிருக்கும் செய்கு தாவூது வலி யார் , எங்கிருந்து எப்பொழுது இங்கு அடக்கமானார் என்று எவருக்கும் தெரியாது. இவரின் அடக்கவிடம் 40 ழுழம் நீளமுள்ளதாக இருக்கிறது.

இவருக்கு போட்டியாக கொடிக்கால் பாளையத்தில் ஜஹான்ஷா அவ்லியாவின் அடக்கவிடம் 60 அடி நீளமுள்ளது என்றும் அங்குள்ள மக்கள் நம்புகின்றனர்.

16.காற்றாடி அவ்லியா
1975 ஆம் ஆண்டுகளில் கன்னியா குமரி மாவட்டம் ஆளுரில் ஒரு அதிசயம் நடைபெற்றது. அங்கிருந்த கப்ரு ஒன்றில் கப்ரைப் போர்த்தியிருக்கும் துணி காற்றில் வேகமாக ஆடிக் கொண்டிருந்தது. இதைக் கண்ட சுற்று வட்டார மக்களும், பள்ளிவாசல் இமாம்களும், ஹஸ்ரத் மார்களும் கப்ரு ஆடிக் கொண்டிருக்கும் அதிசயத்தைக்காண படையெடுத்துச் சென்றனர்.

பின்னர் தான் வேடிக்கை காட்ட அந்த ஊரிலுள்ள விஷமம் நிறைந்த சில இளைஞர்கள் ‘ இதை வியாபாரமாக்க துணிக்குள்ளே சிறிய மின் விசிறி ஒன்றை பொருத்தி மூடிவிட்டனர். சற்றுத் தொலைவில் யாரும் பார்க்காத வண்ணம் மின்விசிறிக்கு மின்சார இணைப்பைக் கொடுத்து இயக்கிக் கொண்டிருப்பது தெரியவந்தது.

மின்விசிறியினால் துணி ஆடிக்கொண்டிருந்ததால் ‘அவ்லியாவே ஆடிக்கொண்டிருப்பதாக’ வதந்திகள் பரவின. காற்றாடி அவ்லியாவைப் பார்க்க பக்தர்களும், பக்தைகளும் திரள ஆரம்பித்தனர். இந்த ஒரு மாத காலத்தில் நேர்ச்சைகளும், உண்டியல் பணங்களும் குவியத்தொடங்கின. திட்டமிட்ட வசூலைப் பெற்றதும் அந்தப் போலிகள் அங்கிருந்து தலை மறைவாகிவிட்டனர். மக்களை ஏமாற்ற எத்தனையோ வழிகள் ! வியாபார வித்தைகள் !! மக்கள் ஏமாற ஏமாற புதுப்புது அவ்லியாக்கள் திடீர் பிள்ளையாரைப் போல் திடீர் திடீரென முளைத்துக் கொண்டிருக்கின்றனர்.

17. ஹயாத் அவ்லியாக்கள்
கன்னியாகுமரி மாவட்டம் கோட்டார், திட்டுவிளையில் இரு கப்றுகளை ‘ஹயாத் அவ்லியா’ என்று கூறுகின்றனர். இவர்களை மண் தோண்டிப் புதைத்தபிறகு மீண்டும் வேறு வழியாக வெளியேறிவிடுவதால் இவர்கள் ‘ஹயாத் அவ்லியா’ உயிருள்ள அவ்லியா என அழைக்கப்படுகின்றனர். இவர்கள் மட்டும் உயிரோடிருந்து மற்றவர்களெல்லாம் செத்த அவ்லியாக்கள் என சொல்ல வருகிறார்களா? இவையெல்லாம் சாத்தியப்படுமா? என்பதைக்கூட சிந்தித்துப்பார்க்க வேண்டாமா?

18. படகிலே மையித்தாக மிதந்து வந்த குளச்சல் அவ்லியா
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் முன்பொரு காலம் ஒரு படகு மிதந்து வந்ததாம். அதை கிறித்தவர்கள் பிடிப்பதற்காக சென்றபோது அது ஓடிவிட்டதாம். பின்னர் இந்துக்கள் பிடிப்பதற்காக ஓடினார்களாம். படகு பிடிதரவில்லை. இறுதியாக முஸ்லிம்கள் பிடிப்பதற்குச் சென்ற போது அது அருகே வந்ததாம். பின்னர் அந்த படகைத் திறந்து பார்த்தபோது அதனுள் ஒரு கடிதம் இருப்பது தெரியவந்தது. அதை படித்த போது ‘ நான் இன்னார்! என்னை குளச்சலில் இந்த கடற்கரை அருகில் அடக்கம் செய்யவேண்டும்’ என எழுதப்பட்டிருந்தது.

19.நெல்லை மாவட்டம் பொட்டல் புதூரில் ‘மைதீன் பிச்சை’ யென்ற யானைக்கு தர்ஹாகட்டிவழி படுகிறார்கள். பாக்கியம் பெற்ற யானை!

20. கன்னியா குமரி மாவட்டம் திருவிதாங்கோட்டில் முஹ்யித்தீன் பள்ளிவாசல் எதிரிலுள்ள கப்ருஸ்தானத்தில் அடக்கம் செய்யப்பட்டிருக்கும் கப்ரடி அவ்லியாவின் பக்கத்து கப்ரு, அவர் பயணம் செய்த குதிரையின் சமாதி! இதற்கும் ஆண்டு தோறும் விழாக்கள் எடுக்கின்றனர். கொடுத்து வைத்த குதிரை!

21.திருநெல்வேலி பேட்டையிலிருந்து சேரன்மாதேவி செல்லும் வழியில் ஓரிடத்தில பெயர் தெரியாத அவ்லியா ஒருவர் கழுதையில் பயணம் செய்து வந்தார். திடீரென்று ஒருநாள் அது இறந்து விடவே அங்கேயே அடக்கம் செய்துவிட்டார்கள். இன்று அதற்கும் வழிபாடு நடக்கிறது. அதிர்ஷ்டக்காரக் கழுதை!

22. தரிசனத்துக்குரிய தர்ஹா!
கேரளாவில் கொல்லம் முல்லக்கல் அருகே ஒருகழிப்பிடம் (டாய்லெட் கட்டிடம்) இருக்கிறது. அது இன்று ஒரு தர்ஹாவாக ஆராதனை செய்யப்பட்டுவருகிறது. அங்கே சென்ற கப்ரு பக்தரான ஆலிம் பேராசிரியர் ஒருவர் மக்கள் கூட்டமாகச் செல்வதைப் பார்த்து தானும் சென்று தமது பங்காக ஸியாரத்தை மிகவும் பயபக்தியோடு முடித்துக்கொண்டு திரும்பினார். பின்னர் அது பற்றி விசாரித்த போது தான் அது அவ்லியாவின் கப்ரல்ல. அது மக்கள் செல்லும் ஒரு பொதுக் கழிப்பறை எனத் தெரிய வந்தது. தரிசனத்துக்குரிய தர்ஹா!

இதில் படித்தவர்களும் பலியாகிறார்களே! புரிதாபமாக இருக்கிறது. பக்திப்போதையில் எதையுமே விசாரிக்காமல் கண்மூடித்தனமாக செய்யும் வழிபாடுகளின் இலட்சணத்தைப் பார்த்தீர்களா?

இவர்கள் பெயரை உச்சரித்துக் கொண்டு சில போலிப்பேர்வழிகள் ஆங்காங்கே கடற்கரையில், வாய்க்கால் ஓரங்களில், காடுகளில், மேடுகளில், பாலைப் பெருவெளிகளில் கல்லறைகளைக் கட்டிக் கொண்டு உள்ளே இருப்பவர் ‘அவ்லியா’ எனக் கூறி கட்டுக்கதைகளையும், கனவுக்காட்சிகளையும் அரங்கேற்றி மக்களை நம்ப வைத்து போலிச்சாமியார்;களையும் மிஞ்சுமளவுக்கு போடும் ஆட்டங்கள் அப்பப்பா சொல்லவே வாய் கூசுகிறது.

மனிதப்புனிதர்கள், மகான்கள், மெய் நிலை கண்ட ஞானிகள் எனச் சித்தரிக்கப்படுவோரின் பெயர்களைப் பார்த்தாலே இவர்கள் யார்? இவர்களின் வண்டவாளங்கள் என்ன என்பது தெரிந்து விடும்.

அப்பப்பா அவ்லியாக்களில் தான் எத்தனை எத்தனை ரகங்கள்! எத்தனை எத்தனை வகைகள்!

இவர்களெல்லாம் எப்படி முளைத்தார்கள்? எங்கிருந்து வந்தார்கள்?
இவர்கள் யார் ? எந்த ஊர் ? எப்போது பிறந்தார்கள் ? எப்போது இறந்தார்கள் ?
இங்கே எதற்கு வந்தார்கள் ? இவர்கள் மக்களுக்காக செய்த சேவைகள் என்னென்ன?

மார்க்கத்திற்காக என்ன தியாகம் செய்தார்கள் ?சமுதாயம் அடைந்த பயன்கள் என்ன ?

இவர்கள் செய்த சாதனைகள் என்ன ?
இவர்கள் குர்ஆன் நபிவழியில் வாழ்ந்தவர்களா?
என மக்களைக் கேட்டால் மக்கள் திருதிரு என்று முழிக்கிறார்கள்.

இவர்கள் யார்? எப்படிப்பட்டவர்கள்? இவர்களின் முகவரி என்ன? என்பதையெல்லாம் தெரியாமல் கூடு,கொடி, உரூஸ், சந்தனக்கூடு என கண்மூடித்தனமாக இந்த போலிகள் பெயரால் ஆண்டுதோறும் விழாக்கள் எடுத்து அமர்க்களப்படுத்துகிறார்கள்.

இந்த விஞ்ஞான யுகத்தில் வாழும் அறிவு ஜீவிகளான நாம் இந்தப் போலி மஸ்தான்கள், அவ்லியாக்களை நம்பலாமா? இநதப்போலிகளுக்கு நாம் பலியாகலாமா? நம்பி மோசம் போகலாமா ? உரூஸ்கள், கந்தூரிகள், யானை ஊர்வலங்கள் என நடத்தலாமா? என நாம் சற்று சிந்தித்தாலே இவையெல்லாம் போலியானவை., மார்க்கத்திற்கு எதிரானவை என நாம் உடனே ஒரு முடிவுக்கு வந்துவிடலாம்.

அப்படியானால் மக்களை ஏமாற்றும் சாய்பாபாக்கள், சந்திர பாபாக்கள், பிரேமானாந்தக்கள், ஜான்கள், ஆனந்த ராஜ்கள் பின்னால் செல்லும் மக்களுக்கும் நமக்கும் என்ன தான் வேற்றுமை?

திருப்பதிக்கும்,திருச்செந்தூருக்கும், வேளாங் கண்ணிக்கும் செல்லும் பக்தர்களுக்கும் நமக்கும் என்னதான் வித்தியாசம்?

இஸ்லாத்தை பின்பற்றும் முஸ்லிம்களே! அறிவுக்கேற்ற மார்க்க்கமாக உலகே ஒப்புக்கொண்டிருக்கும் இஸ்லாத்தில் இப்படிப்பட்ட போலித்தனங்களை, பேதைத்தனங்களை அனுமதிக்கலாமா? பின்பற்றலாமா ? சற்று சிந்தித்துப் பாருங்கள்.

மதத்தின் பெயரால் ஏமாற்றும் கபோதிகளின் களியாட்டங்கள் நாளிதழ், வார இதழ், மாத இதழ், தொலைக்காட்சிகள்,இன்டெர்நெட் போன்றவற்றில் அம்பலப்படுத்தும் போலித்தனங்களை நாள் தோறும் கண்டு வருகிறோமே! இன்னுமா இந்த அறியாமை ? இந்த மாயையிலிருந்து விடுபடவேண்டாமா? என உங்கள் மனதைக் கேட்டுப்பாருங்கள்.

THANKS: http://mudunekade.blogspot.com.


இறைவனின் கடும் எச்சரிக்கைக்கு அஞ்சி தர்கா வழிபாட்டை விட்டொழிப்போம்.


>>> இங்கே <<< சொடுக்கி படிக்கவும்.


மேலும் பதிவுகளுக்கு

VANJOOR

1 comments:

Jafar ali January 19, 2007 at 1:31 AM  

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

ஜஸாகல்லாஹ் ஹைர்! (அல்லாஹ் உங்களுக்கு நற்கூலியை வழங்குவானாக!)

இஸ்லாமிய வரலாற்றில்

இஸ்லாமிய வரலாற்றில் பலஸ்தீன் படத்தின் மேல் சொடுக்கி படிக்கவும்.
பலஸ்தீன் வரலாறு

.

.

About This Blog

***இவ்வளைதளத்தின் பதிவுகளை தங்களுடைய வளைத்தளத்தில் மீள்பதிவு செய்பவர்கள் அன்பு கூர்ந்து இவ்வளைத்தளத்தின் சுட்டியை தங்களுடைய மீள்பதிவுகளில் இணைக்குமாறு அன்புடன் கோரப்படுகின்றார்கள்.

Labels

Lorem Ipsum

ISLAM HISTORY.

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP