**Followers.அன்பர்கள்.** தாங்களும் இணையலாமே!!!

இந்து மதவெறி அமைப்புகள் இஸ்லாத்தை குறிவைப்பதேன்? அ.மார்க்ஸ். பாகம் 2

>> Friday, October 18, 2013

ஆர்.எஸ்.எஸ்., விசுவ இந்து பரிஷத், பாரதீய ஜனதா போன்ற இந்து மதவெறி அமைப்புகள் மற்ற மதங்களைக் காட்டிலும் இஸ்லாத்தை குறிவைப்பதேன்?இந்து மதத்தின் அடிப்படைகளான வருணாசிரமம் சாதிக் கொடுமை, தீண்டாமை ஆகியவற்றுக்கு ஒரு சரியான சவாலாக விளங்குவது இஸ்லாம்தான்.

கிறிஸ்தவம் உட்படப் பிற மதங்கள் சாதிக்குப் பலியானபோது இஸ்லாம் மட்டுமே சாதியை ஒப்பீட்டு அளவில் வென்று நின்றது. இதனால்தான் ஆர்.எஸ்.எஸ். நிறுவனர் குரு கோல்வால்கர், “நான்கு வருணம் என்கிற நமது சமூக அமைப்பில் முதலில் தலையிட்ட மதம் இஸ்லாம்தான். இந்தியாவில் நுழைந்த இஸ்லாம் நமது சாதி வர்க்கச் சமூக அமைப்பிற்குச் சவாலாய் இருந்தது” என வயிறெரிந்தார்.

ஆர்.எஸ்.எஸ்., பாரதீய ஜனதா போன்றவை வருணாசிரமத்தைப் பேணுபவை.

இஸ்லாமியருக்கு எதிரான கட்டுக்கதைகள் - அ.மார்க்ஸ். பாகம் 2.


இரண்டு : இசுலாமியப் பண்பாடு இழிவானதா?

1. யாராவது ஒன்றுவிட்ட சகோதர உறவுமுறை உள்ளவர்களைத் திருமணம் செய்து கொள்வார்களா? முஸ்லிம்கள் செய்து கொள்கிறார்களே?

நெருங்கிய இரத்த உறவுடையோர் திருமணம் செய்து கொள்வது நல்லதல்ல என்பது அறிவியல் முடிவு. இதன் பொருள் ஒன்றுவிட்ட சகோதரர்களைத் திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்பது மட்டுமல்ல. அக்காபிள்ளைகள், மாமன் பிள்ளைகள், அத்தைப் பிள்ளைகள் ஆகியோரைக் கூடத் திருமணம் செய்து கொள்ளக்கூடாது என்பதுதான்.

இந்துக்கள் இந்தத் திருமணத் தடைகளை ஏற்றுக் கொள்வதில்லை என்பது உங்களுக்குத் தெரியும்.

முஸ்லிம்கள் பெற்றோருடன் கூடப் பிறந்தவர்களின் பிள்ளைகளைத் திருமணம் செய்துகொள்கின்றனர். அவ்வளவுதான் வேறுபாடு. எனவே முஸ்லிம்களை மட்டும் குறைசொல்வதில் பயனில்லை. முஸ்லிம்களும் கூட வேறு சில திருமணத் தடைகளைக் கடைபிடிக்கவே செய்கின்றனர். சீனாவில் இரண்டுவிதமான திருமண உறவுகளும் தடை செய்யப்பட்டுள்ளன.

2. இஸ்லாமியர் பசுவதை செய்பவர்களல்லவா? மாட்டிறைச்சி தின்பது இழிவல்லவா?

ஆட்டிறைச்சி சாப்பிடும்போது மாட்டிறைச்சி சாப்பிடுவது தவறானது என்பதற்கு அறிவியல் ஆதாரம் எதுவுமில்லை.

சொல்லப் போனால் ஆடடிறைச்சியைக் காட்டிலும் மாட்டிறைச்சியில் புரோட்டீன் முதலிய சத்துக்கள் அதிகம்.

பசு மாமிசத்தை முஸ்லிம்கள் மட்டுமல்ல, இந்து மதத்திலேயே பல பிரிவினர், ஆங்கிலோ இந்தியர், தாழ்த்தப்பட்டவர் எனப் பலரும் சாப்பிடுகின்றனர்.

வெளிநாட்டவர் எல்லோரும் விரும்பிச் சாப்பிடுவது மாட்டிறைச்சியைத்தான். வடஆற்காடு அம்பேத்கர் மாவட்டம் முழுவதிலும் ‘பீஃப் பிரியாணி கிடைக்கும்’ என்கிற அறிவிப்புப் பலகைகளைப் பார்க்க முடியும்.

வரலாற்றில் மேய்ச்சல் மற்றும் வேட்டை வாழ்க்கையை மேற்கொள்ளும் சமூகங்கள் கால்நடை இறைச்சி உண்பது வழக்கம்.

வேதகாலத்தில் குதிரை, மாடு முதலியவற்றைப் பலியிட்டுத் தின்றுள்ளனர்.

“உங்கள் பிள்ளைகள் அறிவுடையோராகவும், வேதமறிந்தவர்களாகவும், நீண்ட ஆயுளைப் பெற்றவராகவும் இருக்க வேண்டுமானால் நெய் சேர்த்த மாட்டுக் கறி சாப்பிடுங்கள்” என்று பிருகதாரண்ய உபநிடதம் (6418) குறிப்பிடுகிறது. இதற்கு ஆதி சங்கராச்சாரி உரையும் எழுதியுள்ளார்.

விவசாயச் சமூகங்களில் கால்நடைகளின் தேவை இருந்ததால் மாட்டிறைச்சி சாப்பிடுவது இழிவானது என்கிற மதிப்பீடுகள் தோன்றின.

இந்தியாவில் வேத மதத்திற்கு எதிராகத் தோன்றிய புத்த-சமண சமயங்கள் இதனை வலியுறுத்தின. எனவே பின்னாளைய பார்ப்பன மதமும் மாட்டிறைச்சி சாப்பிடுவதை இழிவாக்கியது. இன்று விவசாயத் தொழில்நுட்பங்கள் எவ்வளவோ வளர்ந்துவிட்டன. விவசாயத்தில் கால்நடைகளின் பங்கு குறைந்துவிட்டது. எனவே உலகெங்கிலும் பல முன்னேறிய சமூகங்களில் மாட்டிறைச்சி உண்ணப்படுகிறது.

3. நாம் செய்வது எல்லாவற்றிற்கும் எதிராகச் செய்கிறார்களே இஸ்லாமியர். நாம் இறந்தவர்களை எரித்தால் அவர்கள் புதைக்கிறார்களே?

ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு விதமான பழக்கங்கள் உள்ளன. முஸ்லிம்கள் மட்டுமல்ல; அய்ரோப்பியர், அமெரிக்கர், ரசியர் எனப் பலரும் புதைப்பதையே பழக்கமாக வைத்துள்ளனர். பண்டைய தமிழ்ச் சமூகத்திலும் கூடப் புதைக்கும் பழக்கம் இருந்திருக்கிறது.

மதத் தலைவர்கள் இறக்கும்போது எரிக்காமல் புதைத்து ‘அதிஷ்டானம்’ கட்டி வழிபடுவது இந்து மதப் பழக்கம்தான்.

அறிவியல் ரீதியாய் பார்த்தாலும் கூட எரிப்பதைக் காட்டிலும் புதைப்பதுதான் சரியானது எனச் சுற்றுச் சூழலியலாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

4. பலதார மணம் புரிந்து கொள்வது குரானிலேலே அனுமதிக்கப்பட்டுள்ளதே?

எந்தச் சூழலில் பலதார மணம் குர் ஆனில் அனுமதிக்கப்பட்டது என்பதைப் பார்க்க வேண்டும்.

இஸ்லாம் தோன்றிய காலத்தில் பல்வேறு இனக்குழுக்கள், மதப் பிரிவுகள் ஆகியவற்றின் எதிர்ப்புக் குள்ளானது. நிறைய போர்களைச் சந்திக்க வேண்டிய நிர்பந்தம் அதற்கிருந்தது. போர்களில் ஆண்கள் ஏராளமாகக் கொல்லப்பட்டதையடுத்துச் சமூகத்தில் பெண்களின் எண்ணிக்கை அதிகமாகியது. எடுத்துக்காட்டாக உகுத் என்னுமிடத்தில் நடைபெற்ற போரில் எழுபது ஆண்கள் கொல்லப்பட்டனர். அப்போது மொத்த சனத்தொகையே 700 பேர்கள்தான். இந்தச் சூழலில் சமூகச் சமநிலையைக் காப்பாற்றவும் விதவைகளுக்கு வாழ்க்கை தரவும் பலதார மணத்தை இஸ்லாம் அனுமதித்தது.

அனாதைப் பெண்கள், விதவைகள் ஆகியோரைப் பற்றிப் பேசும்போதுதான் புனித குர் ஆன் (4:3) ஒரு ஆண் நான்கு மனைவியரை திருமணம் செய்து கொள்ளலாம் எனச் சொல்கிறது. அந்த நால்வரும் சமமாக வைத்துக்கொள்ளப்பட வேண்டும் என்றும் வலியுறுத்துகிறது.

குர்-ஆன் இப்படி அனுமதித்துள்ளதால் முஸ்லிம்கள் அனைவரும் ஒன்றுக்கு மேற்பட்ட மனைவியரைத் திருமணம் செய்து கொண்டுள்ளனர் எனப் பொருளில்லை.

புள்ளி விவரங்களின் அடிப்படையில் பார்த்தால் முஸ்லிம்களைக் காட்டிலும் இந்துக்கள்தான் அதிக அளவில் பலதார மணம் புரிபவர்களாக உள்ளனர் என்பது விளங்கும்.

இந்தியப் பெண்களின் நிலை பற்றி ஆராய அரசால் நியமிக்கப்பட்ட (1975) குழு ஒன்றின் முடிவு கீழே தரப்பட்டுள்ளது. பலதார மணம்

(எண்ணிக்கைகள் சதவீதங்களைக் குறிக்கின்றன)

ஆண்டுகள் இந்துக்கள் இஸ்லாமியர்

1931-41...............6.79......................7.29

1941-51...............7.15......................7.06

1951-61...............5.06......................4.31

1981ம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பும் கூடப் பலதார மணம் இந்துக்கள் மத்தியில் அதிகமாக உள்ளதை நிறுவியுள்ளது.

இன்னொன்றையும் நீங்கள் கவனிக்க வேண்டும். இந்தியாவிலுள்ள முஸ்லிம் ஆண்களைக் காட்டிலும் பெண்களின் எண்ணிக்கை 25 லட்சம் குறைவு. எனவே முஸ்லிம்கள் அனைவரும் நான்கு மனைவியரைக் கட்டிக் கொள்வது என்பதெல்லாம் நடைமுறைச் சாத்தியமில்லாத விசயங்கள்.

5. இஸ்லாமியர் குடும்பக் கட்டுப்பாடு செய்து கொள்வதில்லை. எனவே அவர்கள் மத்தியில் மக்கள் தொகைப் பெருக்கம் அதிகமாக இருக்கிறது. இந்நிலை தொடர்ந்தால் அவர்கள் பெரும்பான்மை ஆகிவிடுவார்களே?

இந்து மத வெறியர்கள் இந்தக் கருத்துக்கு ஆதரவாக 1981ம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பைக் காட்டுவார்கள்.

அதாவது முஸ்லிம்களின் எண்ணிக்கை 61 மில்லியனிலிருந்து 75 மில்லியனாகியிருக்கிறது (30.69 சத அதிகரிப்பு). ஆனால் அதே சமயத்தில் இந்துக்களின் எண்ணிக்கை 453 மில்லியனிலிருந்து 549 மில்லியனாக உயர்ந்துள்ளது. (24.14 சத அதிகரிப்பு).

இந்தப் புள்ளி விவரத்தை மட்டும் பார்க்கும்போது அவர்கள் சொல்வது உண்மை போலத் தோன்றும். முழுமையாக இந்தப் பிரச்சினையை விளங்கிக் கொள்ள கீழேயுள்ள தகவலைப் பாருங்கள்.

மக்கள் தொகை வளர்ச்சி

(எண்கள் சதவீதங்களைக் குறிக்கின்றன.)

ஆண்டுகள்....இந்துக்கள்.....இஸ்லாமியர்

..1961-71......23.69.......30.84

...1971-81.....24.14.......30.69

இதன்படி பார்த்தால் முதல் பத்தாண்டுகளைக் காட்டிலும் அடுத்த பத்தாண்டில் இந்துக்களின் மக்கள் தொகை வளர்ச்சி வீதம் அதிகரித்துள்ளது.

ஆனால் முஸ்லிம்களின் வளர்ச்சி வீதமோ குறைந்துள்ளது.

ஒன்றைப் புரிந்து கொள்வது நல்லது. மக்கள் தொகை வளர்ச்சி வீதம் என்பது மத உணர்வைப் பொறுத்ததல்ல.

கல்வியறிவு, பொருளாதார வளர்ச்சி போன்ற இதர காரணிகளையே அது பொருத்திருக்கிறது என்பதை ஆராய்ச்சியாளர் நிறுவியுள்ளனர்.

முஸ்லிம்கள் மத்தியில் கல்வி, பொருளாதார நிலைகள் என்பன இந்துக்களைக் காட்டிலும் குறைவு.

முஸ்லிம்கள் மத்தியில் வறுமை இந்துக்களைக் காட்டிலும் 17 சதம் கூடுதல்.

பொதுவில் கல்வி வளர்ச்சி அதிகமாகும்போது குழந்தை பெறும் வீதம் குறைந்துவிடுகிறது. காஷ்மீரில் 75 சத முஸ்லிம்கள் குடும்பக் கட்டுப்பாடு செய்து கொள்கின்றனர். தமிழ்நாட்டில் மொத்த சனந்தொகையில் முஸ்லிம்களின் வீதம் 5.21. மொத்தம் குடும்பக் கட்டுப்பாடு செய்து கொள்பவர்களில் முஸ்லிம்களின் பங்கும் கிட்டத்தட்ட இதே அளவுதான் இருக்கிறது.

எனவே முஸ்லிம் சனத் தொகை பெருகி வருகிறது என்பதும், இப்படியே போனால் அவர்கள் பெரும்பான்மை ஆகிவிடுவர் என்பதும்அப்பட்டமான பொய்கள்.

6. இஸ்லாமியர்க்கு மத உணர்வு அதிகமில்லையா? தேர்தல்களில் தங்கள் மத்தைச் சேர்ந்தவர்களுக்குத்தானே அவர்கள் வாக்களிக்கின்றனர்?

இந்தியாவிலுள்ள முஸ்லிம்கள் எல்லோரும் ஒரே மாதிரியாகத்தான் வாக்களிக்கிறார்கள் என்பதற்கும் ஆதாரங்களில்லை.

இடத்திற்கு இடமும், காலத்திற்குக் காலமும் முஸ்லிம்கள் வாக்களிக்கும் முறையும் வேறுபடுகிறது. பால் ஆர்.பிராஸ் என்பவர் கான்பூரை மையமாமக வைத்தும் பீட்டர் பி. மேயர் என்பவர் திருச்சி, ஜபல்பூர் ஆகிய நகரங்களை மையமாக வைத்தும் 1957, 1962 தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் செய்த ஆய்வுகளின்படி முஸ்லிம்கள் மதவாத அடிப்படையில் வாக்களிப்பதில்லை என்பது நிரூபணமாகியுள்ளது. (எகனாமிக் அண்ட பொலிடிகர் வீக்லி ஆண்டுமலர், 1988).

தேசியக் கட்சிகளுக்குத்தான் அவர்கள் அதிகமாக வாக்களிக்கின்றனர். வகுப்புவாத இயக்கங்களாகத் தோற்றமளிப்பவைகட்கு அவர்கள் வாக்களிப்பதில்லை.

1952 தேர்தலில் முஸ்லிம்களின் வாக்குகளில் 65.41 சதம் தேசியக் கட்சிகளுக்குத்தான் விழுந்தன. 1962ல் இது 75.2 சதமாக அதிகரித்தது.

மொத்த மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 12 சதம் பேர் முஸ்லிம்கள் இருந்தும்கூட முஸ்லிம் லீக் கட்சியால் 1957 தேர்தலில் பாராளுமன்றத்திற்கு ஒரே ஒரு உறுப்பினரையும், 1962ல் இரண்டே இரண்டு உறுப்பினர்களையும் மட்டுமே அனுப்ப முடிந்தது.

இதுவும் கூடக் கேரளத்திலிருநதுதான் சாத்தியமாயிற்று. கூட்டணி இல்லாமல் எங்குமே முஸ்லிம் லீக்கோனில்லை வேறெந்த முஸ்லிம் கட்சிகளோ வெற்றி பெற இயலாது என்பதுதான் உண்மைநிலை.

7. அமெரிக்காவிற்கும் அரபுநாடுகளுக்கும் அல்லது இஸ்ரேலுக்கும் வளைகுடா நாடொன்றுக்கும் சண்டை வந்தால் இங்கே இருக்கும் முஸ்லிம்கள் முஸ்லிம் நாடுதான் வெற்றி பெற வேண்டும் என்று பிரார்த்திகிறார்களே?

முஸ்லிம்கள் அப்படிப் பிரார்த்தித்தால்கூட அதில் எந்தத் தவறுமில்லை யாரும் அமெரிக்காவும், இஸ்ரேலும் முஸ்லிம் நாடுகளுக்கெதிராகச் செய்துவரும் அயாக்கியத்தனங்களை ஏற்றுக் கொள்ள முடியாது.

வரலாறு பூராவும் அமெரிக்க அய்ரோப்பிய நாடுகளும், கிறிஸ்தவ மதமும் முஸ்லிம்களுக்கு எதிராகச் செய்து வந்த அநீதிகள் ஏராளம்.

எண்ணெய் வளம் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு, முஸ்லிம் நாடுகள் கொஞ்சம் சுதாரித்துக் கொள்ளத் தொடங்கிய போதும் இன்றளவும் அமெரிக்க அய்ரோப்பியப் பன்னாட்டு நிறுவனங்கள்தான் அந்த எண்ணெய் வளத்தையும் கொள்ளையடிக்கின்றன.

ஷாவின் ஆட்சிக்காலத்தில் ஈரான், அமெரிக்காவின் எடுபிடியாகவும் படைத்தளமாகவுமே மாற்றப்பட்டது. இந்தப் பின்னணியில்தான் அமெரிக்க அய்ரோப்பிய வல்லரசுகளுக்கெதிராகவும், கிறிஸ்தவக் கலாச்சார மேலாண்மைக்கு எதிராகவும் எழுகிற இஸ்லாமிய அடிப்படைவாதத்தை நாம் பார்க்க வேண்டும்.

கோமேனியின் தலைமையில் நடைபெற்ற எழுச்சியை ‘இஸ்லாமியப் புரட்சி’ என்றே வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர். அதை அடிப்படைவாதம் எனச் சொன்னால்கூட அது அமெரிக்க மேலாண்மையையும், அடிவருடி ஷாவின் ஆட்சியையும் எதிர்த்த வகையில் இருக்கும் நிலையில் முனனோக்கிய மாற்றம் ஏற்படுத்தும் நோக்குடன் இருந்தது.

ஆனால் அத்வானி தலைமையில் இங்கே உருவாகும் இந்து மீட்புவாதம் என்பது மாற்றங்களுக்கு எதிரானது. நாட்டைப் பின்னோக்கித் தள்ளுவது. வருணாசிரமத்தை நிலைநாட்ட முனைவது. இந்த வகையில் இஸ்லாமிய அடிப்படை வாதத்தையும், இந்து மீட்பு வாதத்தையும் வேறுபடுத்திப் பார்க்க வேண்டும்.

8. அப்படியானால் இஸ்லாமிய மதம்தான் உயர்ந்தது என்கிறீர்களா?

மதம் மக்களின் அபின். எந்த மதமும் மக்களுக்கு எதிரானதுதான் என்கிற கருத்தை நம்புகிறவர்கள் நாங்கள். ஒரு சிறுபான்மை மத்திதிற்கெதிராக ஒரு பெரும்பான்மை மதம் உள்நாட்டு அளவிலோ, உலக அளவிலோ பொய்ப் பிரச்சாரத்தை வலிமையாக மேற்கொள்ளும்போது நாம் உண்மையைக் கண்டறிய வேண்டியவர்களாக இருக்கிறோம்.

தவிரவும் எந்த ஒரு போராட்டமும், அது மத அடிப்படையிலானதாக இருந்தாலும் சரி, மொழி அடிப்படையிலானதாக இருந்தாலும் சரி பின்னணியில் ஒரு அரசியல் இருக்கிறது. அந்த வகையில் பின்னணியாயுள்ள உண்மைகளை நாம் கணக்கிலெடுக்க வேண்டியதாயிருக்கிறது.

இந்தியாவுக்குள் சாதியை வென்ற மதமாகவும் ஒப்பீட்டளவில் சமத்துவத்தைப் பேணும் மதமாகவும் இஸ்லாம் மட்டுமே உள்ளது என்பதையும் நாம் மறந்து விடலாகாது.

9. நீங்கள் சொல்வதெல்லாம் சரி போலத்தான் தோன்றுகிறது. என்றாலும்…. முஸ்லிம்கள் மத்தியில் மற்றவர்களைக் காட்டிலும் மத அடிப்படையிலான ஒற்றுமை கூடுதலாக இருக்கிறதே? அவர்களின் நாட்டுப் பற்றை நாம் நம்ப முடியுமா?

சிறுபான்மையினரின் உளவியலை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

முஸ்லிம்களின் பல உரிமைகள் படிப்படியாகப் பறிக்கப்பட்டுள்ளன. அவர்கள் மீதான பெருமத வெறியும், வன்முறையும் அமைப்பு ரீதியாக அதிகரித்துள்ளன.

அரசு, இராணுவம், பத்திரிகைகள் எல்லாம் வெளிப்படையாக முஸ்லிம்களுக்கு எதிராக உள்ளன.

இத்தகைய பாதுகாப்பற்ற சூழலில் முஸ்லிம்கள் மதத்தின் பெயரால் இணைந்து நிற்பதையும் தங்களின் அடையாளங்களைக் காப்பாற்றிக் கொள்ள முனைவதையும் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.

அவர்களின் மத உணர்வு தற்காப்பு நோக்கிலானது; தாக்குதல் நோக்கிலானதல்ல. நாட்டுப் பற்றில் முஸ்லிம்கள் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல.

சுதந்திரப் போராட்டத்தில் அவர்களின் பங்கை ஏற்கனவே குறிப்பிட்டோம்.

இந்தியாவுக்கும் அண்டை நாடுகளுக்குமிடையே போர் மூண்டபோது முஸ்லிம்களின் தனிப் பெருந்தலைவர் காயிதே மில்லத் அவர்கள் இந்திய எல்லையைக் காப்பதற்காகத் தன் மகனை அனுப்பத் தயார் என்று கூறினார்.

நாட்டுப் பற்று என்பதெல்லாம் இயற்கையான உணர்வல்ல.

சோவியத் யூனியன் ஒன்றாக இருந்தபோது ஒரு ஜார்ஜியன் அல்லது உக்ரேனியனது நாட்டுப் பற்று என்பது சோவியத் யூனியனுக்கு விசுவாசமாக இருப்பது. இன்று அங்கே நிலைமை முறறிலும் மாறிவிட்டதை நீங்கள் அறிவீர்கள். இன்று ஒரு ஜார்ஜியன் மாஸ்கோவுக்கு விசுவாசமாக இருந்தால் அதன் பெயர் நாட்டுப் பற்று அல்ல, தேசத் துரோகம்.

10. இஸ்லாம் அடிப்படையில் வன்முறையைப் போதிக்கும் மதந்தானே? ஒரு கையில் குர் ஆனையும் ஒரு கையில் வாளையும் வைத்துக் கொண்டு மதத்தைப் பரப்புவதும், சிலை வணக்கம் செய்பவர்கள் மீது ‘ஜிஹாத்’ (புனிதப் போர்) நடத்துவதும்தானே இஸ்லாமியரின் மதக் கொள்கை?

இஸ்லாம் அடிப்படையில் வன்முறையைப் போதிக்கும் மதமுமல்ல. குர்ஆனின் அடிப்படைச் செய்தி வன்முறையுமல்ல.

‘இஸ்லாம்’ என்ற சொல்லின் பொருளே “ஆண்டவனுக்கு அர்ப்பணித்துக கொண்டு அமைதியை நிலைநாட்டுவது” என்பதுதான்.

ஒரு முஸ்லிம்கள் மற்றொரு மனிதனை அவன் எம்மதத்தைச் சார்ந்தவனாக இருந்தாலும் சரி எதிரே பார்க்கும்போது ‘சலாம் அலேய்க்கும்’ என்று வாழ்த்த வேண்டும். இதன் பொருள் “உனக்கு அமைதி உண்டாகுக” என்பதுதான். அல்லாஹ் கருணையானவர். (அல் ரஹ்மான்); ஆறுதல் அளிப்பவர் (அல் ரஹீம்), கருணை மிகுந்த அல்லாஹ் யார்மீதும் தேவையற்ற வன்முறையைப் போதிக்கச் சொல்லவில்லை.

மதத்தைப் பரப்புவதில் வன்முறைக்கு மட்டுமல்ல. வற்புறுத்தலுக்கும் இடமில்லை என்கிறது குர்ஆன் (2:256).

இந்த வரிகளுக்கு விளக்கம் சொல்ல வந்த மவுலானா முகம்மதலி, “கத்தியை வைத்துக் கொண்டு மதத்தைப் பரப்புமாறு நபிகள் நாயகம் சொன்னதாக அவதூறு செய்பவர்களுக்கு இதுவே பதில்.

அதிகாரம் கையிலுள்ள போது ‘மதத்தில் கட்டாயமில்லை’ என்கிற கொள்கையை முஸ்லிம்கள் கடைபிடிப்பது முககியம்” என்கிறார்.

அல்லாவைத் தவிரவேறு கடவுளை வணங்குவோரை அவதூறு செய்யக் கூடாது என்று சொல்லும் திருக்குர்ஆன் (6:109)

மற்ற கடவுளை வணங்குவோருடன் ஒரே சமூகமாய் இணைந்து வாழவேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறது. ‘இல்லாவிட்டால் அல்லாஹ் உங்களை மட்டும் தனியாக அல்லவா படைத்திருப்பார்” என்பது இஸ்லாமிய இறைவாக்கு (5:48).

இதன் பொருள் இஸ்லாமில் வன்முறையின் அடையாளமே இல்லை என்பதல்ல; எல்லா மதங்களையும் போலவே இஸ்லாமும் போர்க்களத்தில் வன்முறையைப் பிரயோகிப்பதை ஆதரிக்கிறது.

போர்க்களத்தில் இரத்த உறவுடையோர் மீது கூட வன்முறையைப் பிரயோகிக்கத் தயங்க வேண்டியதில்லை என்று கீதா உபதேசம் செய்யவில்லையா கிருஷ்ணன்?

‘ஜிஹாத்’ என்கிற புனிதப் போரும் இப்படி ஒரு சூழலை முன்வைத்துச் சொல்லப்பட்டதுதான்.

‘ஜிஹாத்’ என்பது மதத்தைப் பரப்புவதற்கான போர் அல்ல. அது ஒடுக்குமுறைக்கு எதிரான போர்.

‘மக்கா’வில் இருந்தவரையிலும் ‘மதினா’வில் அடைக்கலம் புகுந்த கொஞ்சநாள் வரையிலும்கூட முகம்மது நபி அவர்கள் வன்முறை பற்றியும் ‘ஜிஹாத்’ பற்றியும் பேசவில்லை.

நபிகளுடன் செய்து கொண்ட ஒப்பந்ததை மீறி அரேபியாவிலிருந்தே இஸ்லாத்தை ஒழித்துவிட வேண்டும் என்கிற கங்கணத்துடன் மாற்று நம்பிக்கையாளர்கள் போர் தொடங்கியபோதுதான் அவர் வன்முறை பற்றிப்பேசத் தொடங்கினார்.

போரைக்கூட, ‘அல்லாஹ்வின் வழியிலான போர்’ எனவும், ‘பிசாசின் வழியிலான போர்’ எனவும் பிரித்துப் பேசுகிறது குர்ஆன் (4:75).

மவுலானா முகம்மதலி கூறுகிறார்: “மக்காவிலிருந்து ஒடுக்கு முறையார்களின் கொடுமை தாளாமல் முடிந்தவர்களெல்லாம் தப்பியோடிய பின்னர் பலவீனமானவர்கள் மட்டும் அங்கேயே தங்க நேரிட்டது. அத்தகைய பலவீனர்களும், பெண்களும், குழந்தைகளும் தொடர்ந்து தாக்கப்பட்டபோது, அவர்களைக் காப்பாற்ற போரில் இறங்கச் சொன்னார் நபிகள் நாயகம்.

ஒடுக்குமுறையாளரிடமிருந்து ஒடுக்கப்பட்டவர்களைக் காப்பாற்றுவதற்கான போர்தான் அல்லாஹ்வின் வழியிலான போ.ர் ஒடுக்குவதற்கும் ஆக்ரமிப்பதற்குமான போர் பிசாசின் வழியிலான போர் (தாகுத்)”.

ஆக்கிரமிப்புப் போரை குர்ஆன் மறுக்கிறது (2:190).

எந்த வழிபாட்டு இல்லத்தையும் இடிக்கக்கூடாது எனவும் குர்ஆன் கட்டளையிடுகிறது.

ஏனெனில் “எல்லா வழிபாட்டு இல்லங்களிலும் ஒலிப்பது அல்லாஹ்வின் திருப்பெயர்தான்” (22:40).

இஸ்லாமியரல்லாதவர் மீது வன்முறை பிரயோகிக்கப்பட வேண்டும் எனச் சொல்வதாக குர்-ஆனிலிருந்து மேற்கோள் காட்டப்படும் எந்த வரியுமே இஸ்லாமை ஏற்றுக்கொள்ளாத காரணத்திற்காகத் தனிநபர்கள் தாக்கப்பட வேண்டும் என்கிற அர்த்தத்தில் சொல்லப்பட்டவை அல்ல.

ஒப்பந்தத்தை மீறி நியாயத்துக்குப் புறம்பாகத் தாங்கள் தாக்கப்படும்போது மேற்கொள்ள வேண்டிய வன்முறைதான் அது.

அதிலும்கூட, “சிலை வணக்கம் செய்வோர் யாரேனும் பாதுகாப்புத் தேவை என உங்களிடம் வந்தால் அவருக்குப் பாதுகாப்பு அளியுங்கள். பாதுகாப்பான இடத்தில் அவரை சேர்ப்பிப்பது உங்கள் கடமை” என்கிறது குர்ஆன் (9:6).

11. அப்படியானால் வேறெந்த மதத்தைக் காட்டிலும் இஸ்லாத்தை ஏன் இந்துக்கள் வெறுக்கிறார்கள்?

மறுபடியும் சொல்கிறேன். பொத்தம் பொதுவாக இந்துககள் என்று சொல்லாதீர்கள். சாதாரண மக்கள் வெறுப்பில்லாமல் சகோதர்களாகத்தான் வாழ்கிறார்கள். வடமாநிலங்களில் பல இடங்களில் பெயர், உடை போன்ற அம்சங்களை வைத்து முஸ்லிம்களையும் இந்துக்களையும் பிரித்துவிட முடியாது.

தமிழ்நாட்டுக் கிராமங்களில் முஸ்லிம்களும் இந்துக்களும் உறவுமுறை சொல்லி வாழ்வது உங்களுக்குத் தெரியுந்தானே?

12. சரி, ஆர்.எஸ்.எஸ்., விசுவ இந்து பரிஷத், பாரதீய ஜனதா போன்ற இந்து மதவெறி அமைப்புகள் மற்ற மதங்களைக் காட்டிலும் இஸ்லாத்தை குறிவைப்பதேன்?

இதற்குப் பல காரணங்கள் உண்டு.

முதலில்: இந்து மதத்திற்கு அடுத்த பெரிய மதம் இஸ்லாம். சில மாவட்டங்களில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாகக் கூட உள்ளனர்.

அடுத்தது: வரலாற்று ரீதியாய் முஸ்லிம்களை ‘எதிரி’யாக நிறுத்துவது எளிது. இதனை முன்பே விளக்கியுள்ளோம்.

கடைசியாக: இந்து மதத்தின் அடிப்படைகளான வருணாசிரமம்,

சாதிக் கொடுமை, தீண்டாமை ஆகியவற்றுக்கு ஒரு சரியான சவாலாக விளங்குவது இஸ்லாம்தான்.

கிறிஸ்தவம் உட்படப் பிற மதங்கள் சாதிக்குப் பலியானபோது இஸ்லாம் மட்டுமே சாதியை ஒப்பீட்டு அளவில் வென்று நின்றது.

இதனால்தான் ஆர்.எஸ்.எஸ். நிறுவனர் குரு கோல்வால்கர், “நான்கு வருணம் என்கிற நமது சமூக அமைப்பில் முதலில் தலையிட்ட மதம் இஸ்லாம்தான்.

இந்தியாவில் நுழைந்த இஸ்லாம் நமது சாதி வர்க்கச் சமூக அமைப்பிற்குச் சவாலாய் இருந்தது” என வயிறெரிந்தார்.

ஆர்.எஸ்.எஸ்., பாரதீய ஜனதா போன்றவை வருணாசிரமத்தைப் பேணுபவை.

இமாசலப் பிரதேச மாநிலப் பாரதிய ஜனதா அரசு பதவியிலிருந்த கொஞ்ச காலத்தில் செய்த காரியங்களிலொன்று மணலி என்ற இடத்தில் மனு கோயிலைப் பல கோடி ரூபாய் செலவு செய்து புதுப்பித்தது. இவர்கள் இஸ்லாமை முதன்மை எதிரியாகக் கருதாமல் வேறென்ன செய்வார்கள்? - பேரா. அ. மார்க்ஸ்

தொடரும் .....

மீண்டும் வாருங்கள்.

சொடுக்கி படியுங்கள்.


இஸ்லாமியர்களை ஏன் எதிர்க்க வேண்டும்? அ.மார்க்ஸ். பாகம் 1.


இரண்டாம் தரக் குடிமக்களாக புறக்கணிக்கப்படும் இஸ்லாமியர். - அ.மார்க்ஸ். பாகம் 3

3 comments:

Unknown October 20, 2013 at 12:54 PM  

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

நான் இத்தளத்தில் வரும் அனைத்து பதிவுகளையும் தொடர்ந்து படித்து வருகிறேன். இஸ்லாமிய சமுதாயத்திற்கு தன்னை யாரென்று அறிமுகப் படுத்தவும், விழிப்புணர்வை தூண்டவும், பொய் புரட்டுக்களின் முகத்திரையை கிழிக்கவும் செய்கிறது உங்கள் சமுதாயப் பணி!
நானும் ஒரு எழுத்தாளனாக என் பணியை இப்போது தான் ஆரம்பித்து உள்ளேன். மிகவும் பயனுள்ளதாக உள்ளது உங்கள் பதிவுகள்.

மறுமையில் நிச்சயம் அல்லாஹ் நற்கூலி வழங்குவான்.என்று து ஆச் செய்கிறேன்.

VANJOOR October 20, 2013 at 3:06 PM  

வ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ் ...

அன்பின் அஹமது அலி,

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் "துஆ" வுக்கும் நன்றி.

உண்மையை உரத்துக்கூறும் வகையில் தங்களது பதிவுகள் தொய்வில்லாது தொடர எல்லாம் வல்ல இறைவன் அருள்வானாக.

வாஞ்சையுடன்
வாஞ்ஜூர்.

VANJOOR November 8, 2013 at 9:22 PM  

Mr.Mohamed Iqbal,

Asalamu Alaikkum w.r.b.

Thank you for your message.

இஸ்லாமிய வரலாற்றில்

இஸ்லாமிய வரலாற்றில் பலஸ்தீன் படத்தின் மேல் சொடுக்கி படிக்கவும்.
பலஸ்தீன் வரலாறு

.

.

About This Blog

***இவ்வளைதளத்தின் பதிவுகளை தங்களுடைய வளைத்தளத்தில் மீள்பதிவு செய்பவர்கள் அன்பு கூர்ந்து இவ்வளைத்தளத்தின் சுட்டியை தங்களுடைய மீள்பதிவுகளில் இணைக்குமாறு அன்புடன் கோரப்படுகின்றார்கள்.

Labels

Lorem Ipsum

ISLAM HISTORY.

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP