**Followers.அன்பர்கள்.** தாங்களும் இணையலாமே!!!

இஸ்லாமியர்களை ஏன் எதிர்க்க வேண்டும்? ‍ அ.மார்க்ஸ். பாகம் 1.

>> Thursday, October 17, 2013

இஸ்லாமியர் படை எடுத்து வந்து இந்துக் கோயில்களை இடித்து கட்டாயமாக மதம் மாற்றி இந்துக்கள் மீது ‘ஜிஸியா’ என்னும் தண்டனை வரி விதிக்கப்பட்டதாகப் பாடநூல்களில் படித்திருக்கிறோமே?

{கேள்வி பதில் வடிவிலான இந்நூல் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டது. இதுவரை அய்ந்துக்கும் மேற்பட்டபதிப்புகள் வந்துள்ளன. முஸ்லிம்கள் குறித்துப் பொதுப்புத்தியில் பதிககப்பட்டுள்ள பல பொய்மைகளைத் தோலுரிக்கும் இந்நூல் முழுமையாக இங்கே தரப்படுகிறது.}

பேரா. அ.மார்க்ஸ்.
இஸ்லாமியருக்கு எதிரான கட்டுக்கதைகள்- - பேரா. அ. மார்க்ஸ்

ஒன்று : வரலாற்றில் வகுப்பு வாதம்

1. இந்த நாட்டின் மீது படையெடுத்து வந்தவர்கள்தானே இஸ்லாமியர். வந்தேறிகளுக்கு வக்காலத்து வாங்குவதுதான் உங்கள் நோக்கமா?

வரலாற்று நூல்கள் உங்களுக்கு அப்படிப் போதித்துள்ளன. ஆனால் வரலாற்றை ஆழமாக யோசித்துப் பார்த்தோமானால் இன்று இஸ்லாமியரை அந்நியர் எனச் சொல்லும் பலரும் ஏதோ ஒரு காலத்தில் இங்கே வந்து குடியேறியவர்கள்தான் என்பது விளங்கும்.

வடமொழி வேதங்களில் (கி.மு. 1500-கி.மு.500) ‘தஸ்யு’க்கள் என்னும் உள்நாட்டு மக்களைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்கள் படைஎடுத்து வந்த ஆரிய மொழி இனத்தவரால் அடிமையாக்கப்பட்டார்கள்.

இந்த ஆரீயர்கள் ரிக் வேதக் காலத்தில் கால்நடை வளர்க்கும் மேய்ச்சல் இனத்தவராக ஈரான் வழியாக இந்தியாவில் புகுந்து இங்கிருந்த விவசாய மக்களுடன் கலந்து, உள்நாட்டுப் பழங்குடியினரை அடிமையாக்கிச் சூத்திரர்களாகவும், தீண்டத்தகா தவர்களாகவும் ஆக்கினார்கள்.

ரஜபுத்திரர்கள் கூடத் துருக்கியர்கள் குடியேறிய காலத்தில் இங்குக் குடியேறியவர்கள்தான்.

சௌகான், பரிகரர், சோலங்கி எல்லாம் வந்தேறிகள்தான்.

எனில் இஸ்லாமியரை மட்டும் வந்தேறிகள் எனச் சொல்வது என்ன நியாயம்?

“ஆரியர் வருகை” எனச் சொல்லும் நம் பாடநூல்கள் “இஸ்லாமியர் படை எடுப்பு” எனச் சொல்வது பிஞ்சு மனத்தில் வகுப்பு வாதத்தை பதிப்பதில்லையா?

இங்குள்ள கிறிஸ்தவர்களும் இஸ்லாமியரும் இந்த நாட்டுக் குடிமக்களாக இருந்து மதம் மாறியவர்கள்தான்.

யாருக்கும் வக்காலத்து வாங்குவதல்ல நமது நோக்கம். அரசியல் நோக்கில் இங்கே பரப்பப்பட்டுள்ள மதவெறி பல்லாயிரக்கணக்கானோர் கொன்று குவிக்கப்படுவதற்குக் காரணமாகியுள்ளது.

இளைஞர்களும் பொதுமக்களும், படித்தவர்களும் உண்மையான பிரச்சினைகளிலிருந்து தங்களின் கவனத்தைத் திருப்பி வகுப்பு வெறிக்கு பலியாவதற்கு முஸ்லிம்கள் பற்றி மதவெறியர்களாலும், பத்திரிகைகளாலும், கல்வியாளர்களாலும் திட்டமிட்டுப் பரப்பப்படும் கட்டுக் கதைகள் முககியப் பங்கு வகிக்கின்றன.

எனவே இந்தக் கட்டுக் கதைகளை ஆராய்ந்து உண்மை நிலையைக் கண்டறிவது சனநாயக உணர்வுடைய ஒவ்வொருவரின் கடமை. இந்த நிலையில் வரலாற்று ஆதாரங்கள், ஆராய்ச்சிக் கட்டுரைகள், புள்ளி விவர நிறுவனங்கள் தொகுத்துள்ள செய்திகள் ஆகியவற்றின் அடிப்படையில் உண்மை நிலையைக் கண்டறிவதுதான் நமது நோக்கம்.

இங்கே சொல்லப்பட்டவற்றை ஆதாரங்களுடன் மறுத்தால் நாம் ஏற்றுக்கொள்கிறோம்.

2. இஸ்லாமியர் படை எடுத்து வந்து இந்துக் கோயில்களை இடித்துச் சிதைத்தார்கள் என்பதற்குத்தான் ஆதாரங்கள் இருக்கிறதே?

கஜினி முகம்மது பதினேழு முறை சோமநாதபுரம் கோயிலை இடித்து நொறுக்கினார் என்று உங்களுக்குப் பாடநூற்கள் சொல்லியுள்ளன இல்லையா?

பண்டைய இந்தியாவில் கோயில்கள் என்பன சாமி கும்பிடுகிற இடங்கள் மட்டுமல்ல. மன்னர்களின் கோட்டைகளாகவும் நிதிக் களஞ்சியங்களாகவும் அவை இருந்தன. இல்லாவிட்டால் தஞ்சைப் பெரிய கோயிலைச்சுற்றி இவ்வளவு பெரிய அகழி ஏன்?

பண்டைய மன்னர்களின் போர்கள் என்பன பெரும்பாலும் கொள்ளைடியப்பதற்காக மேற்கொள்ளப் பட்டவைதான். இந்த அடிப்படையில்தான் கஜினி முகமது கொள்ளையிட்டதும். கோவிலுக்குள் ஒளிந்து கொண்ட எதிரி மன்னனைக் கொல்லவும், ஒளித்து வைக்கப்பட்ட செல்வத்தைக் கொள்ளையிடவும் எதிரியின் பண்பாட்டு ஆளுமையை அழிக்கவும்தான்

கோயில்கள் மீது படையெடுக்கப்பட்டன. எந்த முஸ்லிம் மன்னனும் தன்னுடைய எல்லைக்குள் இருந்த இந்துக் கோயில்களையோ தனது பாதுகாப்பிலிருந்த இந்துக் கோயில்களையோ இடித்ததில்லை.

அவுரங்கசீப் ஆட்சிக்காலத்திலும் அப்படித்தான். அவருக்கு எதிராகச் சதி செய்தவர்களின் கோட்டைகளும் கோயில்களும் இடிக்கப்பட்டன. மற்றபடி முழுமையான மதச் சுதந்திரம் இருந்தது.

அவுரங்கசீப் ஆட்சிக் காலத்தில்தான் தமிழ்நாட்டிலிருந்து குமரகுருபரர் காசிக்குச் சென்று முப்பதாண்டுகள் சமயப் பொழிவுகள் செய்து அங்கே குமாரசாமி மடம் ஒன்றையும் நிறுவினார்.

இன்னொன்றையும் யோசித்துப் பாருங்கள்.

தஞ்சைப் பெரிய கோயில் உட்பட இன்றுள்ள பல கோயில்கள் சமண/புத்த கோயில்களை இடித்துக் கட்டப்பட்டவைதானே.

இராசராசன் இலங்கையிலுள்ள அநுராதபுரம், பொலனருவை ஆகிய இடங்களிலிருந்த புத்தக் கோயில்களை இடித்துத் தரைமட்டமாக்கி அந்த ஊர்களுக்கு ‘ஜனநாத மங்கலம்’ என்னு தன்னுடைய பெரையச் சூட்டவில்லையா?

சுபதாவர்மன் (கி.பி. 1193-1120) என்கிற ‘பார்மரா’ மன்னன் குஜராத்தைத் தாக்கி அங்கிருந்த சமணக் கோயில்களைக் கொள்ளையிடவில்லையா? காசுமீர் இந்து மன்னன் ஹர்ஷன் ஆட்சியில் கோயில்களை இடிப்பதற்கென்றே ‘தெய்வங்களை நிர்மூலம் செய்கிற அதிகாரி’ (தேவோத்பத நாயகன்) என்று ஒரு அதிகாரி நியமிக்கப்பட்டிருந்ததாக கல்ஹணன் எழுதிய ராஜதரங்கிணில் குறிப்பிடப்பட்டுள்ளதே!

பவுத்த சமணக் கோவில்களை இடித்துத்தான் தஞ்சைப் பெரிய கோவில், காஞ்சி காமாட்சி கோவில் போன்றவையெல்லாம் கட்டப்பட்டன என சுரேஷ்பிள்ளை, மயிலை சீனிவேங்கடசாமி முதலியோர் நிறுவியுள்ளனர்.

திருவாரூர் கோவில் திருக்குளத்தை விரிவு செய்ய வேண்டும் எனக் காரணம் சொல்லி அங்கிருந்த சமணக் குடியிருப்பு அழிக்கப்பட்டது குறித்துப் பெரியபுராணத்திலேயே சான்றுகள் உள்ளன.

எனவே கோயில் இடிப்பு என்பதை எந்தஒரு குறிப்பிட்டமதத்தைப் பின்பற்றும் மக்களின் செயலாகவும் கருத வேண்டியதில்லை.

3. ஆனால் இஸ்லாமியர் கட்டாயமாக மதம் மாறியுள்ளனரே? இந்துக்களாக இருந்தவர்மீது ‘ஜிஸியா’ என்னும் தண்டனை வரி விதிக்கப்பட்டதாகப் பாடநூல்களில் படித்திருக்கிறோமே?

மறுபடியும் பாடநூல்களா, சரி. மன்னர்கள் எந்த மதத்தைச் சார்ந்தவர்களாக இருந்தபோதும் அவர்கள் மக்களின் எதிரிகள்தான். ஏதாவது ஒன்றைச் சொல்லி மக்களைக் கொள்ளையடித்தவர்கள்தான்.

முஸ்லிம் மன்னர்கள் இந்துக்கள் மீது ‘ஜிஸியா’ வரிசுமத்தியது உண்மைதான். ஆனால் இந்த வரி இந்துக கோயில்களைப் பராமரிக்க என்று சொல்லப்பட்டது.

இஸ்லாமிய மக்கள் மீது வரி இல்லை என்று நினைத்துவிடாதீர்கள். ‘சக்காத்’ என்ற பெயரில் அவர்களிடமும் வரி வசூலிக்கப் பட்டது.

‘ஜிஸியா’ வரியும் கூடப் பெண்கள், குழந்தைகள், பார்ப்பனர்களிடம் வசூலிக்கப்பட்டதில்லை.

இந்து மன்னர்கள் யூதக் குடிகளிடமிருந்து ‘ஜிஸியா’ வசூலித்தனர் என்று பதினான்காம் நூற்றாண்டுப் பயணி ஒருவர் குறிப்பிடுகிறார்.

ஜிஸியாவுக்காகப் பயந்து கொண்டு இந்துக்கள் மதம் மாறினார்கள் என்று நினைத்துவிடாதீர்கள்.

எந்த முஸ்லிம் மன்னரது காலத்திலும் இந்து மக்கள் கட்டாயமாக மதம் மாற்றப்பட்டதில்லை.

இதன் பொருள் மதமாற்றங்ளே இல்லை என்பதல்ல; இரண்டு வகைகளில் மதமாற்றங்கள் நடைபெற்றன.

ஒன்று: “எல்லோரும் சகோதரர்களே” என்கிற ‘சுஃபி’ துறவிகளின் பிரச்சாரத்தால் ஈர்க்கப்பட்டு இந்து மதச் சாதிக் கொடுமைகளால் வெறுப்புற்ற அடிநிலை மக்கள் இஸ்லாமிற்கு மாறினர்.

இரண்டு: அரசியல் ரீதியாக ஆளும் வர்க்கமாக இருந்து புதிய மன்னர்களைத் தங்கள் விசுவாசத்தால் அசத்த விரும்பியர்களும் மதம் மாறியுள்ளனர்.

ஆனால் எந்த நிலையிலும் சாதாரண மக்கள் கட்டாயமாய் மதம் மாற்றப்பட்டதில்லை. அரசியல் காரணங்களுக்காகச் சில சமயங்களில் சந்தேகத்திற்கிடமான சில சமீன்தார்கள் மதம் மாற்றப்பட்டிருக்கலாம்.

4. அலாவுதீன் கல்ஜி இந்து ஜமீன்தார்களை ஒடுக்கினானே?

அவர் இந்துவல்லாத இஸ்லாமிய ‘இக்தாதார்’களையும் கூடத்தான் ஒடுக்கினார்.

மதவெறியன் என நீங்கள் அவரைத் தூற்றுகிறீர்கள்.

ஆனால் அவர் காலத்திய இஸ்லாமிய வரலாற்றாசிரியர் ஜியாபரனி என்ன சொல்கிறார் தெரியுமா?

இஸ்லாம் மதத்திற்காகக் கல்ஜி ஒரு அரசன் என்ற முறையிலோ, தனி வாழ்விலோ எதுவும் செய்ததில்லை எனத் தூற்றினார்.

திருப்பித் திருப்பிச் சொல்கிறேன் என நினைக்காதீர்கள்.

அரசியல் காரணங்களுக்காகச் சில தனிநபர்களை இஸ்லாமாக்க அவுரங்கசீப் போன்ற மன்னர்கள் செய்த சில முயற்சிகளை, பெரும் மக்கள் திரள்களைக் கட்டாயமாக மதம்மாற்றினார்கள் என்ற பொருளில் நாம் புரிந்துகொள்ளக் கூடாது.

அரசியல் நோக்கத்திற்காகக் குறுநில மன்னர்களோடு கட்டாயமான மண உறவுகளை இந்து மன்னர்கள் ஏற்படுத்திக் கொண்டது பற்றி வரலாற்றிலும், சங்கப் பாடல்களிலும் படிக்கிறோமில்லையா அப்படித்தான் இதுவும்.

இதெல்லாம் சரி அல்லது தவறு என நான் சொல்ல வரவில்லை.

எத்தனையோ தலைமுறைகளுக்கு முன்புமேற்கொள்ளப்பட்ட அதிகார வெறி பிடித்த மன்னர்களின் நடவடிக்ககளை அவற்றிற்குரிய சூழலிலிருந்து விலக்கிப் பூதாகரப்படுத்தி இன்றைய தலைமுறையைச் சேர்ந்த அப்பாவி மக்கள் மீது இரத்த வெறி கொண்ட பகைமையை ஏற்படுத்தப் பயன்படுத்தக் கூடாது.

5. இந்து மன்னர்கள் எத்தனையோ கொடுமைகள் செய்திருக்கலாம். ஆனால் ஓரிருவரைக் கூடக் கட்டாயமாய் மதம் மாற்றியதில்லையே?

நாம் சில அடிப்படைகளைப் புரிந்து கொள்ள வேண்டும்.

முதலில் இஸ்லாம், கிறிஸ்தவம், பவுத்தம் போன்றவை பரப்புதற்குரிய மதங்கள்.

இந்து மதம் அப்படிப்பட்டதல்ல. முற்பிறவியில் ஒருவர் செய்த கருமவினைகளுக்கேற்ப இப்பிறவியில் அவர் குறிப்பிட்ட சாதியில் பிறந்து இழிவுகள் அல்லது பெருமைகளை அடைகிறார் என்கிறது இந்துமதம்.

எனவே ஒருவரை வேற்று மதத்திலிருநது இந்து மதத்திற்கு மாற்றினால் அவரை எந்தச் சாதியில் வைப்பது என்பது இந்து மதத்திற்கு ஒரு பிரச்சனை.

அடுத்து இங்கேயுள்ள வைதிக, சனாதன, வருணாசிரமதத்திற்கு இந்து மதம் என்ற பெயர் சமீபத்தில் ஏற்பட்டதுதான் என்பதை சங்கராச்சாரி, விவேகானந்தர், பாரதி உட்படச் சகலரும் ஏற்றுக்கொள்கின்றனர்.

வரலாறு முழுமையும் பல்வேறு சுதந்திரமான இனக்குழு மக்களை அவர்களுக்கொரு சாதிப் பெயர் கொடுத்துத் தனது ஆட்சிக்குள்ளும் சாதிய ஏற்றுத் தாழ்வுகளுக்குள்ளும் இந்து மன்னர்கள் பார்ப்பனரின் துணையோடு கொண்டு வந்துள்ளனர்.

இதன்மூலம் அந்தச் சுதந்திர மக்கள் மீது பொருளாதாரச் சுரண்டல்களும் சாதியக் கடமைகளும் திணிக்கப்பட்டு அவர்கள் என்றென்றும் அடிமைகளாக்கப் பட்டனர்.

மூன்றாவதாக மதம் மாற்றியதில்லையே தவிர, மாற்று மதஙகளை இழிவு செய்வதிலும் அரசதிகாரத்தின் துணையோடு மாற்று மதத்தவரை இரக்கமேயில்லாமல் கொன்று குவித்ததிலும் இந்து மதம் வேறெந்த மதத்திற்கும் சளைத்ததில்லை.

இந்து சமயாச்சாரியார்களின் துணையோடு பாண்டிய மன்னன் எண்ணாயிரம் சமணர்களை ஆசன வாயில் கூரிய இரும்பைச் செருகிக் கொன்றதை நமது பக்தி இலக்கியங்கள் பாராட்டியுள்ளதை நீங்கள் அறிவீர்கள்.

‘பாசிப்பல் மாசிமெய்யர்’, ‘ஊத்தைவாயர்’, ‘மந்திபோல் திரியும் அந்தகர்கள்’ என்றெல்லாம் திருநாவுக்கரசர் சமணர்களைத் திட்டியுள்ளதைத் தேவாரத்தில் காணலாம்.

சமணர்களையும் சாக்கியர்களையும் “கூடுமேல் தலையை ஆங்கே அறுப்பதே கருமங்கட்டாய் அரங்கமா நகருளானே” என்று தொண்டரடிப்பொடி ஆழ்வார் வேண்டினார்.

எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தாற்போலச் சாக்கியப் பெண்களைக் கற்பழிக்கத் திருவுள்ளம் வேண்டுமெனச் சம்பந்தர் பாடினார். பாடியது மட்டுமல்ல சோழ, பாண்டிய அரசுகளின் துணையோடு இவை எல்லாம் நிறைவேற்றப்பட்டதற்கு வரலாற்றில் சான்றுகளுள்ளன.

6. பிற்கால நாயக்க, மராட்டிய மன்னர்கள் காலத்தில் இஸ்லாமியக் கோயில்களைப் பராமரிப்பதற்கு உரிமை இருந்திருக்கிறது. பல இஸ்லாமியர் இந்து மன்னர்களின் படைத் தலைவர்களாகக் கூட இருந்திருக்கிறார்களே!

உண்மைதான். நான் முன்பே குறிப்பிட்டபடி இவை எல்லாமே அரசியல் நோக்கில் செய்யப்பட்டவைதான்.

முஸ்லிம் மன்னர்களின் காலத்திலும் இந்துக் கோயில்கள் பராமரிக்கப்பட்டதால் இன்றளவும் பழமையான இந்துக் கோயில்கள் நாடெங்கும் உள்ளன என்பதை மறந்துவிடாதீர்கள்.

ரஜபுத்திரர், பார்ப்பனர் போன்ற இந்துமத ஆதிக்கச் சக்திகள் முஸ்லிம் மன்னர்களிடம் உயரதிகாரிகளாக இருந்துள்ளனர்.

அக்பரிடம் அதிகாரியாக இருந்த ராஜா மான்சிங் பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கும்.

முகம்மது பின் துக்ளக் காலத்தில் அலிஷா நாது என்கிற இஸ்லாமிய குறுநிலத் தலைவன் தனக்குட்பட்ட பகுதியில் கொடுமைகள் செய்வதாகப் பரான் என்ற இந்து நிலப்பிரபு முறையிட, அந்தப் பகுதி நாதுவிடமிருந்து பறிக்கப்பட்டு பரானிடம் வழங்கப்பட்டது. இதற்காக நாது சகோதரர்கள் துக்ளக்கை எதிர்த்துக் கலகம் செய்தனர்.

அயோத்தியிலுள்ள அனுமான் கர்த்திக் கோயில் தொடர்பாகச் ‘சுன்னி’ முஸ்லிம்களுக்கும் இந்துச் சாதுக்களுக்குமிடையே பிரச்சினை வந்தபோது டில்லி மன்னர் வாஜித் அலிஷா இந்துக்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டுள்ளார்.

இது தொடர்பாக அலிஷா மேற்கொண்ட இராணுவ நடவடிக்கையில் சுமார் முன்னூறுக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கொல்லப்பட்டதாகச் செய்திகள் உள்ளன.

7. பழைய சங்கதிகள் கிடக்கட்டும். சமீபத்திய வரலாற்றுக்கு வருவோம். இந்தியா-பாகிஸ்தான் பிரிவினைக்கு முஸ்லிம் லீக் கட்சிதானே காரணம்?

நாடு என்றால் என்ன, நாட்டுப் பற்று என்பதெல்லாம் எவ்வாறு மக்கள் மத்தியல் உருவாக்கப்படுகிறது, இந்தியா என்றொரு நாடு ஆங்கிலேயர் வருகைக்கு முன்பு இருந்ததுண்டா, எந்த ஒரு பகுதி மக்களும் தாங்கள் பிரிந்து போய்ச் சுதந்திரமாக வாழ வேண்டும் என விரும்பினால் அதனை நிறைவேற்றுவதுதானே நியாயம் என்பன போன்ற கேள்விகளிலிருந்து தொடங்கி மிகவும் விரிவாகப் பேசப்பட வேண்டிய விசயம் இது. விரிவாகப் பேசுவதற்கு இங்கே அவகாசமில்லாததால் நேரடியாக நீங்கள் கேட்டதற்கு வருவோம்.

ஆங்கில ஏகாதிபத்தியத்திற்கெதிராகத் தொடக்க காலத்தில் எந்த வேறுபாடுகளும் இல்லாமல் இந்துக்களும் முஸ்லிம்களும் இணைந்தே போராடினர்.

குறிப்பாக 1857 முதல் சுதந்திரப் போரில் முஸ்லிம் மன்னர்களின் பங்கு குறிப்பிடத்தக்கது.

அகில இந்தியத் தேசிய உணர்வு என்பதை முதற்கட்ட இந்துத் தலைவர்கள் உருவாக்கியபோது ஆங்கில ஆட்சியின் ‘புதிய இழிவு’களுக்கெதிராக இந்தியப் பழமையை அவர்கள் உயர்த்திப் பிடித்தனர்.

இந்தியப் பழமை என்பதை இந்துப் பழமையாகவே முன் வைத்த இவர்கள் இந்த அடிப்படையில் ஆரிய சமாஜம், வருணாசிரம சபை, இந்து மகாசபை போன்ற புத்துயிர்ப்பு நடவடிக்கைகளில் இறங்கினர்.

இன்றைய ‘இந்துத்துவம்’, ‘இந்து ராஷ்டிரம்’ ஆகிய கருத்தாக்கங்கள் முதன் முதலில் முன் வைக்கப்பட்டது இந்துமகாசபையில்தான் என்பது இன்று அவர்களே ஏற்றுக்கொள்ளும் உண்மை.

சாவர்கர், பாய் பரமானந்தர் போன்றவர்களால் தலைமை தாங்கப்பட்டு இயங்கிய இவ்வமைப்பு இந்துக்கள் மத்தியில் முக்கியமான கருத்தியல் சக்தியாக விளங்கியது. குறிப்பாகக் காந்தியின் வருகைக்கு முன்பு இதன் பங்கு குறிப்பிடத்தக்கது.

1933ல் இந்து மகாசபையின் தலைவராக இருந்த பாய் பரமானந்தர் பிரிவினைக்கு முறபட்ட இந்தியாவை மத அடிப்படையில் இரு நாடுகளாகப் பிரிக்க வேண்டும் என முதன் முதலில் சொன்னவர்களில் ஒருவர்.

இப்போதுள்ள பாகிஸ்தான் பகுதியைச் சிந்துவிற்கு அப்பாற்பட்ட ஆப்£கானிஸ்தான் முதலியவற்றோடு இணைத்து “ஒரு மாபெரும் முஸல்மான் பேரரசு உருவாக்கப்பட வேண்டும். அங்குள்ள இந்துக்கள் இங்கே வந்துவிட வேண்டும். இங்குள்ள முஸ்லிம்கள் அங்கே போய்விடவேண்டும்” என்றார்.

1905ம் ஆண்டு வாக்கிலேயே தனக்கு இக்கருத்து தோன்றியது எனவும் அவர் கூறினார்.

பின்னர் 1937ம் ஆண்டு அகமதாபாத்தில் நடைபெற்ற இந்து மகாசபை மாநாட்டில் அப்போது தலைவராக இருந்த சாவர்கர், “இந்தியாவை ஒற்றைத் தேசமாகக் கருத முடியாது. முக்கியமாக இரண்டு தேசங்கள் இந்தியாவிற்குள் உள்ளன. ஒன்று இந்துக்களின் தேசம்; மற்றது முஸ்லிம்களின் தேசம்” என்றார்.

இங்கொன்றை நீங்கள் கவனிக்க வேண்டும். முஸ்லிம்களுக்குத் தனி நாடு வேண்டுமென்ற கோரிக்கை முஸ்லிம் லீக்கால் முதன் முதலில் எப்போது வைக்கப்பட்டது தெரியுமா?

1940ம் ஆண்டு லாகூர் மாநாட்டில்தான். அதற்கு முன்பே இந்து மகாசபை இந்தக் கோரிக்கையை வைத்துவிட்டது என்பதுதான் உண்மை. நாட்டுப்பிரிவினை பற்றிப் பேச சர்வ கட்சி மாநாடு ஒன்று கூட்டப்பட்டது.

அதில் ஜின்னா மூன்று கோரிக்கைகளை வைத்தார்.

1. மத்திய சட்டமன்றத்தில் முஸ்லிம்களுக்கு மூன்றில் ஒன்று பிரதிநிதித்துவம்,

2. பஞ்சாப் மற்றும் வங்கத்தில் முஸ்லிம் மக்கள் தொகைக்கு ஏற்ப பிரதிநிதித்துவம்,

3. சிந்து, பலூசிஸ்தான் மற்றும் வடமேற்கு எல்லை மாகாணம் எனப் புதிய மூன்று முஸ்லிம் பெரும்பான்மை மாகாணங்களை உருவாக்குதல்.

இவை அனைத்தும் முற்றிலும் நியாயமான கோரிக்கைகள். அன்றைய முஸ்லிம் மக்கள் தொகைக்கு ஏற்ப பிரதிநிதித்துவம் கோரினார் ஜின்னா. காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் பலரும் இதை ஏற்றுக் கொண்டனர். தேஜ் பகதூர் சப்ரு போன்றவர்கள் இதை அம்மாநாட்டிலேயே ஆதரித்துப் பேசினர்.

மாநாட்டில் பங்கு பெற்ற இந்து மகாசபைத் தலைவர்கள் இதற்கு எதிராகப் பேசி ஒரு முடிவுக்கு வராமல் மநாட்டைக் கலைத்தனர். அதன் பிறகு ஜின்னா தனிநாடு கோரிக்கையை முன்வைத்தார். “ஜின்னாவின் திட்டம் அறிவு ததும்பும் திட்டம்” எனப் பாராட்டினார் பெரியார் ஈ.வெ.ரா.

8. தாங்கள் பெரும்பான்மையாக உள்ள ஒரு நாட்டைப் பிரிக்க வேண்டுமென்று இந்துககள் சொன்னார்களா? நம்ப முடியவில்லையே! அவர்களுக்கு இதில் என்ன லாபம்?

இந்துக்கள் சொன்னார்கள் என்று நான் சொல்லவில்லை. இந்து மகாசபைத் தலைவர்கள் சொன்னார்கள்.

சாதாரண மனிதனுக்கு, தான் ஒரு இந்து என்ற உணர்வே கிடையாது.

அவனுக்கு ஏதாவது உணர்வு இருக்கிறதென்றால் சாதி உணர்வு வேண்டுமானால் இருக்கலாம்.

உயர்சாதி இந்து ஆதிக்கச் சக்திகள் வெள்ளையரிடமிருந்து ஆட்சி அதிகாரத்தைப் பறித்துத் தாங்கள் வைத்துக் கொள்ள விரும்பியபோது சாதிகளாய்ப் பிளவுண்டிருந்த மக்களை ‘இந்துக்கள்’ என்ற பெயரில் ஒன்றிணைக்க வேண்டியிருந்தது.

எனவே முஸ்லிம்கள் என்றொரு ‘எதிரி’யைக் காட்டித் தங்களிடமிருந்து அந்நியமாகியிருந்த தாழ்ந்த சாதி மக்களைத் தங்களோடு இணைத்துக்கொள்ள வேண்டிய அவசியம் உயர்சாதியினருக்கு இருந்தது.

இன்னொன்றையும் நீங்கள் வரலாற்று ரீதியாய்ப் புரிந்துகொள்ள வேண்டும்.

ஆங்கிலேயரின் வருகையோடு தேர்தல் அரசியலும், மக்கள் தொகைக் கணக்கீடும் (1891) இங்கே நுழைந்தது. இந்தக் கணக்கீட்டில் முஸ்லிம், கிறிஸ்தவர், சாதி இந்துக்கள், தாழ்த்தப்பட்டவர் எனத் தனித் தனியே விவரங்கள் சேகரிக்கப்பட்டன.

இச்சூழலில் பாகிஸ்தான் இந்தியாவோடு இணைந்திருந்தால் முஸ்லிம்கள் மற்றும் தாழ்த்தப்பட்டவரின் மொத்த எண்ணிக்கை இந்துக்களின் எண்ணிக்கையை விட அதிகமாய்ப் போய், தேர்தல் அரசியலில் தங்களுக்குப் பாதிப்பு ஏற்படும் ஆபத்திருந்ததை இந்துத் தலைவர்கள் உணர்ந்தனர். இந்நிலையை எதிர்கொள்ள அவர்கள் இரண்டு வழிகளை மேற்கொண்டனர்.

ஒன்று : தாழ்த்தப்பட்டவர்களையும் இந்துககளாகக் கருத வேண்டும் என்கிற கருத்தைப் பரப்புவது. 1934 பிப்ரவரியில் அலகாபாத்தில் கூட்டப்பட்ட இந்து மகாசபையின் சிறப்புக் கூட்டமொன்றில் இக்கருத்து விவாதிக்கப்பட்டது.

தாழ்த்தப்பட்டவர்களையும் இந்துககளாகக் கருத வேண்டும் என்ற கருத்தை ஆர்ய சமாஜிகளும் இதர சனாதனிகளும் எதிர்த்தனர்.

எனினும் அரசியல் லாபம் கருதித் தலைவர்கள் இக்கருத்தை வலியுறுத்தினர். இறுதியாக, தாழ்த்தப்பட்டவர்களுக்கு பொதுக்கிணற்றில் நீர் இறைக்கும் உரிமை போன்றவற்றை மறுக்கக்கூடாது என்ற தீர்மானத்தை நிறைவேற்றிய இந்து மகாசபை, “இருந்தாலும் அவர்கள் ‘யஞ்ஞோபவீதம்’ (பூணூல்) அணியக்கூடாது” என அறிவித்தது.

இரண்டு: முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள பகுதிகளைப் பிரித்து தனி நாடாக்கிவிட்டால் எஞ்சிய பகுதியில் ‘இந்து ராஜ்யம்’ அமைத்து அதில் தாங்கள் ஆட்சி செலுத்த முடியும் என உயர்சாதி இந்துக்கள் நினைத்தனர்.

உண்மைஇப்படி இருக்க நாட்டுப் பிரிவினைக்கு முஸ்லிம் லீக் மட்டுமே காரணம் எனச் சொல்வது அபத்தம்.

9. அப்படியானால் நாட்டுப் பிரிவினையில் முஸ்லிம்களுக்குப் பங்கே இல்லை என்கிறீர்களா?

இந்துக்களுக்குத் தனியாக ஒரு நாடு என்றால் அதில் தாங்கள் தலைமை ஏற்க முடியும் என இந்து ஆதிக்கச் சக்திகள் நினைத்தது போலவே முஸ்லிம்களுக்குத் தனிநாடு என்றால் தாங்கள் ஆதிக்கம் செலுத்த முடியும் என முஸ்லிம் மேல்தட்டினரும், முஸ்லிம் லீக் தலைவர்களும் நினைத்தனர்.

ஆனால் அடிப்படையில் ஒவ்வொரு முஸ்லிமும் பிரிவினைவாதி என்றோ, முஸ்லிம் மதத் தலைவர்கள் (உலமாக்கள்) பிரிவினை வாதத்தை முன் வைத்து முஸ்லிம்களைத் தங்களின் கீழ்த் திரட்டினர் என்றோ கருத வேண்டியதில்லை.

ஹைதர் அலி, திப்பு சுல்தான் போன்ற மன்னர்கள் வெள்ளையராட்சியை எதிர்த்துக் கடுமையாகப் போராடியதை முன்பே குறிப்பிட்டேன்.

1857 சுதந்திரப் போர் பற்றிய நாட்டுப்புறப் பாடல்களில் மவுல்விகளான அகமதுல்லாஷா, இனாயத் அலி போன்றோர் நானாசாகேப், ஜான்சிராணி ஆகியோரோடு இணையாகப் போற்றப்படுகின்றனர்.

1885ல் காங்கிரஸ் கட்சி ஆரம்பிக்கப்பட்டபோது சர் சையத் போன்ற இஸ்லாமிய மேல்தட்டினர் காங்கிரசில் சேர வேண்டாம், ஆங்கிலேய ஆட்சிக்குச் சார்பாக இருந்து முஸ்லிம்களுக்குச் சலுகைகள் பெறுவதுதான் முக்கியம் எனக் கூறியபோது முஸ்லிம் மதத்தலைவர்களான மவுலானா ரஷீத் அலி காங்கோய் போன்றோர், “காங்கிரசில் சேர்ந்து இந்துச் சகோதரர்களுடன் போராடுங்கள்” என முஸ்லிம்களுக்கு அழைப்பு விடுத்தனர்.

இந்தத் தன்மை கடைசிவரை தொடர்ந்தது.

ஜின்னா போன்ற அரசியலை முதன்மையாகக் கொண்ட சக்திகள் காங்கிரசுக்கு மாற்றாக இருந்து பிரிவினையை ஆதரிப்பது என்பதும் மவுலானா அபுல் கலாம் ஆசாத் போன்ற மதப் பற்றாளர்கள் தொடர்ந்து காங்கிரசில் இருந்து அதனை எதிர்ப்பது என்பதும் தொடர்ந்தது.

மத அடிப்படையிலும் உலமாக்கள் நாட்டு ஒற்றுமைக்கு ஆதாரவு காட்டினர். கூட்டுத் தேசியத்திற்கு இஸ்லாம் எதிரானதல்ல. முகம்மது நபி அவர்களே மதினாவிற்குச் சென்றவுடன் பிற மதத்தினருடன் கூட்டுத் தேசியத்தை வலியுறுத்தினார்.

ஜமாத் லைவராக இருந்த மவுலானா உசேன் அகமத் மதானி, “தேசம் (குவாம்) என்பது நில எல்லைத் தொடர்பான கருத்தாக்கம். ‘உம்மாஹ்’ அல்லது ‘மிலாத்’ என்பது மதம் தொடர்பான கருத்தாக்கம். இரண்டையும் குழப்ப வேண்டியதில்லை. ஒருநில எல்லைக்குள் இரு மதத்தினர் இணைந்து வாழ்வதென்பது இஸ்லாமியக் கோட்பாடுகளுக்கு எதிரானதல்ல” என்றார்.

10. சர் சையத் போன்ற மேல்தட்டினர் காங்கிரசுக்கு எதிராக வெள்ளையருக்கு ஆதரவளித்தனர் என்று சொன்னீர்கள். இது இழிவில்லையா?

சர் சையத் செய்தது சரி என்று நான் சொல்ல வரவில்லை. ஆனால் இந்து மத ஆதிக்கச் சக்திகளுக்கெதிராக வெவ்வேறு குழுவினர் தங்களின் உரிமைகளைப் பெற வேண்டி, காங்கிரசை எதிர்த்தனர் என்பது சர் சையத் போன்றோர் மட்டும் செய்த காரியமல்ல. பல பிரிவினரும் இதைச் செய்துள்ளனர்.

நமது நீதிக்கட்சி, தந்தை பெரியார், டாக்டர் அம்பேத்கர் ஆகியோரும் கூட இந்நிலை எடுக்க நேர்ந்ததை நாம் மறந்துவிடக் கூடாது நான் சொல்ல வருவது இதுதான்.

ஒன்று: ஆதிக்கச் சக்திகள் அவர்கள் – முஸ்லிம்களாக இருந்தாலும் சரி, இந்துக்களாக இருந்தாலும் சரி – தங்களின் நலன் நோக்கில்தான் செயல்படுகின்றன. முஸ்லிம்களை மட்டும் சுட்டிக்காட்டி எதிர்ப்பது அபத்தம்.

இரண்டு: முஸ்லிம்கள் அனைவரும் ஒற்றைக் கருத்துடையவர்கள், ஒரே மாதிரி செயல்படுபவர்கள், ஒரே மாதிரி வாக்களிப்பவர்கள் என்பதெல்லாம்கூட அவர்கள் பற்றிச் சொல்லக்கூடிய கட்டுக் கதைகளில் ஒன்றுதான். முஸ்லிம்களுக்குள்ளும் பல்வேறு போக்குகள் இருந்தன.

அரசியல் சக்திகளது கருத்தும் மதத் தலைவர்களது கருத்தும் எல்லாக் காலங்களிலும் ஒத்துப்போனதில்லை.

பலரும் நினைப்பது போல முஸ்லிம் மதத் தலைவர்களும் முஸ்லிம் மக்களும் பிரிவினைவாதிகள் இல்லை.

தவிரவும் மிகவும் பின்தங்கிய நிலையிலிருந்த முஸ்லிம் சமூகத்தை நவீனப்படுத்துவது, புதிய ஆங்கிலக் கல்வியை அவர்களுக்கு அறிமுகம் செய்வது, புதிய பல்கலைக் கழகம் ஒன்றை உருவாக்குவது என்றெல்லாம் சையத் போன்றவர்கள் மேற்கொண்ட முயற்சிகளை வெறும் ஆங்கில ஆதரவு நடவடிக்கையாகப் பார்த்துவிட முடியாது.

11. இந்திய வரலாறு எழுதப்பட்டதே இந்து வகுப்புவாதச் சார்போடுதான் என்பது போலச் சொன்னீர்கள். வரலாறு என்பது பழைய சம்பவங்களைத் தொகுத்துச் சொல்வதுதானே? இது எப்படி ஒரு பக்கச் சார்பாக இருக்க முடியும்?

வரலாறு என்பது ஒருவகையான ‘கதை சொல்லல்’தான்.

ஒரு சம்பவத்தைக் கண்ணால் பார்த்த இருவர் தனித்தனியே அதை விவரிக்கும் போது இருவேறு கதைகள் உருவாகிவிடுகின்றன என்பதை நாம் அனுபவத்தில் உணர்கிறோம்.

வரலாறும் அப்படித்தான் சம்பவங்கள் ஒன்றாக இருந்த போதிலும் சொல்பவரின் விருப்பு வெறுப்புக்கு ஏற்ப அவற்றில் ஒரு சில தேர்ந்தெடுக்கப்படும்போது வெவ்வேறு வரலாறுகள் தோன்றிவிடுகின்றன.

தொடக்கக் காலத்தில் இந்திய வரலாற்றை எழுதியவர்கள் ஜேம்ஸ்மில் போன்ற வெள்ளையர்கள்தான். பிரித்தாளும் சூழ்ச்சி என்பது அவர்களின் அரசியல் கொள்கை.

எனவே இந்திய வரலாற்றைக் காலப்பாகுபாடு செய்யும்போது ‘இந்து இந்தியா’, ‘முஸ்லிம் இந்தியா’, ‘பிரிட்டிஷ் இந்தியா’ எனப் பகுத்தனர்.

எனவே இந்து இந்தியா படையெடுப்பால் முஸ்லிம் இந்தியாவாக்கப்பட்டது என்பதும் வெள்ளையராட்சியில் இது நவீன வளர்ச்சியைப் பெற்றது என்பதும் இதன் மூலம் பொருளாகிறது.

ஆனால் நவீன வரலாற்றறிஞர்கள் இந்திய வரலாற்றை இப்படி மத அடிப்படையில் பகுப்பது தவறு என்கின்றனர்.

பண்டைய இந்தியா, இடைக்கால இந்தியா, நவீன இந்தியா எனப் பிரிப்பதுதான் பொருத்தமாக இருக்கும். நேரு கூட இப்படித்தான் பகுத்துள்ளனர்.

வெள்ளையர் எழுதிய வரலாற்றுக்கு எதிராக இந்தியத் தேசியவாதிகள் வரலாறு எழுதியபோது ஆங்கில ஆட்சிக்கு எதிராகப் பழம் பெருமையைத் தூக்கிப் பிடித்தனர்.

உணர்வு ரீதியாய் இந்தியத் தேசியத்தைக் கட்டமைக்க முயன்ற உயர்சாதி இந்துக்கள் பண்டைய ‘இந்து’ இந்தியாவை இலட்சியமாக முன் வைத்தனர்.

இந்தச் செயற்பாடுதான் முஸ்லிம்கள் பற்றிய பல்வேறு விதமான வரலாற்றுப் பொய்களுக்கும் காரணமாகியுள்ளன.

பெரும்பாலும் உயர்சாதியினரே ஆதிக்கம் செலுத்தும் கல்வித்துறை, பத்திரிகை, தொலைக்காட்சி முதலியவற்றில் இந்நிலை தொடர்கிறது.

இதனால் சாதாரண மக்கள் மத்தியிலும் இப்பொய்கள் ஆழப்பதிந்துள்ளன.

இருந்தபோதிலும் பல சனநாயகச் சிந்தனையுடைய வரலாற்றாசிரியர்களும், இடதுசாரிச் சிந்தனையாளர்களும் இத்தகைய வரலாற்றுப் பொய்களைத் தோலுரிக்கும் முயற்சிகளையும் செய்தே வந்திருக்கின்றனர்.

பாபர் மசூதிப் பிரச்சினையில் கூட இந்து மத வெறியர்கள் வரலாற்றைப் புரட்ட முயற்சித்த போதெல்லாம் இந்தப் புரட்டல் வேலைகளுக்கெதிரான இவர்களின் முயற்சிகள் பாராட்டும்படியாக இருந்தன.

இன்று இந்துத்துவவாதிகள் ஆட்சியைக் கைப்பற்றியவுடன் செய்த முதல் வேலைகளில் ஒன்று வரலாற்றைத் திருத்தியதுதான். பழைய பாடநூற்களை நீக்கிவிட்டு சி.பி.எஸ்.சி என்கிற மத்திய உயர் கல்வி நிறுவனம் இப்போது ஏழு புதிய வரலாற்றுப் பாடநூற்களை வெளியிட்டுள்ளது.

இதில் மதச்சார்பற்ற கருத்துக்கள் பல நீக்கப்பட்டு, முஸ்லிம்கள் மீது வெறுப்பைத் தூண்டும் பல கருத்துகள் இணைக்கப்பட்டுள்ளன. எதிர்காலத்தில் மிகப் பெரிய ஆபத்தை ஏற்படுத்தப் போகிற முயற்சி இது.

12. கடைசியாக ஒரு கேள்வி. இந்தக் காஷ்மீர் விவகாரம் பற்றிக் கொஞ்சம் சொல்லுங்கள். இந்திய யூனியனில் ஒரு மாநிலமாகிய காசுமீருக்கு மட்டும் என்ன தனி உரிமை? அரசியல் சட்டத்தின் 370வது பிரிவை நீக்கிவிட வேண்டும் என்கிற கோரிக்கை நியாமானதுதானே?

காஷ்மீர்ப் பிரச்சினையையும் நீங்கள் கொஞ்சம் வரலாற்று ரீதியாய்ப் பார்க்க வேண்டும்.

1846க்குப் பின்பு பிரிட்டிஷாரின் எடுபிடிகளான டோக்ரா மன்னர்கள் காஷ்மீரை ஆண்டு வந்தனர். இவர்கள் இந்துக்கள். ஆனால் காஷ்மீர் பள்ளத்தாக்கின் மொத்த சனத் தொகையில் 77 சதம் பேர் முஸ்லிம்கள். டோக்ரா மன்னர்களின் கொடுமையான ஆட்சிக் கெதிராக 1931ல் காஷ்மீர மக்கள் கிளர்ந்தெழுந்தனர். இதன் விளைவாக அரசியல் சீர்திருத்தத்திற்கான குழு ஒன்றை அன்றைய அரசு அமைத்தது.

இந்தப் பின்னணியில் 1939ல் ஷேக் அப்துல்லா தலைமையில் ‘தேசிய மாநாடு’ கட்சி தொடங்கப்பட்டது. இக் கட்சியின் சார்பாகப் பல்வேறு சனநாயகக் கோரிக்கைகளை உள்ளடக்கிய ‘புதிய காஷ்மீர்’ கோரிக்கை 1944ல் முன்வைக்கப்பட்டது.

தொடர்ச்சியாக 1945ல் “டோக்ரா மன்னர்களே வெளியேறுங்கள்” போராட்டம் தொடங்கப்பட்டது. ராஜா அரிசிங்கின் அரசு கொடும் அடக்குமுறை மூலம் போராட்டத்தை ஒடுக்க முயன்றது. இதற்கிடையில் 1947ஆக.15ல் ஆட்சி மாற்றம் நடைபெற்றது.

மத அடிப்படையிலான நாட்டுப் பிரிவினையோடு இந்த ஆட்சி மாற்றம் அரங்கேறியது. ஜோத்பூர், ஜீனாகத், அய்தராபாத், காஷ்மீர் போன்ற சமஸ்தானங்களைப் பொறுத்தமட்டில் “மக்கள் விருப்பை அறியக் கணிப்புத் தேர்தல் ஒன்று நடத்தி அதனடிப் படையில் இணைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என இந்திய அரசு (அக். 5, 1947) அறிவித்தது.

ராஜ அரிசிங் இணைப்பு பற்றித் திட்டவட்டமாக முடிவு எதையும் அறிவிக்காத சூழலில் 1947 அக்டோபர் 26ல் வடமேற்கு எல்லைப் பகுதியிலிருந்த இனக்குழு மக்கள் பாக்கிஸ்தான் அரசாதரவோடு காஷ்மீர் மீது படையெடுத்தனர்.

சமாளிக்க முடியாத அரிசிங் இந்திய அரசின் உதவியை நாடினார். இணைப்புக்கு ஒப்புக்கொண்டால் மட்டுமே படைகளை அனுப்ப முடியும் என்கிற நிபந்தனையோடு படைகளை அனுப்பிக் காஷ்மீரை இந்திய அரசு கைப்பற்றிக் கொண்டது.

இணைப்பு ஒப்பந்தத்தை எதிர்த்து மக்கள் கிளர்ச்சி செய்யவே அரிசிங் காஷ்மீரை விட்டே ஓடினார்.

சட்டம் ஒழுங்குப் பிரச்சினை சீரானவுடன் கணிப்புத் தேர்தல் நடத்துவதாக நேரு வாக்களித்தார். ஆனால் அந்த முடிவை நிறைவேற்றும் முயற்சியை அவர் மேற்கொள்ளவேயில்லை.

இந்த அடிப்படையில் இந்திய-பாக். போர் ஒன்று நிகழும் வாய்ப்பு வளர்ந்தது.

இந்தப் பின்னணியில் இந்தியாவே இந்தப் பிரச்சினையை ஜன. 1, 1948 அன்று அய்.நா. அவையின் பாதுகாப்புக் குழுவிற்கு எடுத்துச் சென்றது.

ஜன. 20, 1948 அன்று பாதுகாப்புக் குழு காஷ்மீர் பிரச்சினையை ஆராயக் குழு ஒன்றை நியமித்து. அந்த அடிப்படையில் ஆக.13, 1948 அன்று காஷ்மீர் தீர்மானத்தை அய்.நா. நிறைவேற்றியது. போர் ஓய்வு, இராணுவத்தைத் திரும்பப் பெறுதல் கணிப்புத் தேர்தல் நடத்துவது என்கிற மூன்று அம்சங்களை இந்தத் தீர்மானம் வலியுறுத்தியது.

அய்.நா. இந்த நடவடிக்கையை மேற்கொண்டிருக்கும் போதே காஷ்மீருக்கான அரசியல் நிர்ணய அவை ஒன்றை இந்தியா அமைத்தது.

“அரசியல் சட்ட உருவாக்கத்தில் ஜம்மு-காஷ்மீர் மக்களும் பங்கு பெற வேண்டும் என்கிற நோக்கத்துடன்தான் இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.

மற்றபடி அந்த மக்கள் பிரிந்து போக விரும்பினால் அந்த விருப்பம் நிச்சயமாய் நிறைவேற்றப்படும். இந்த அரசியல் நிர்ணய சபை அதற்குத் தடையாக இராது” என இந்திய அரசு (நவ. 21, 1949) வாக்களித்தது.

370வது பிரிவு ஒன்றை உருவாக்கிக் காஷ்மீர் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. வெளியுறவு, பாதுகாப்பு, தகவல் தொடர்பு தவிர பிற அம்சங்களில் சுயாட்சி உரிமைகள் காஷ்மீர் மக்களுக்கு வழங்கப்பட்டன. 370வது பிரிவு பற்றி என்.கோபாலசாமி அய்யங்கார் அரசியல் நிர்ணய அவையில் கூறியதை உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன். அவர் கூறினார்: ‘காஷ்மீரில் இன்னும் போர் நீடிக்கிறது. சில பகுதிகள் எதிரிகள் வசம் உள்ளன. அய்.நா.அவையும் இதில் தலையிட்டுள்ளது. காஷ்மீர மக்களுக்கு இந்திய அரசு சில உறுதிகளையும் வழங்கியுள்ளது. இந்நிலையில் 370வது பிரிவின் மூலம் சில சிறப்புரிமைகளை காஷ்மீர மக்களுக்குத் தருவது தவிர்க்க இயலாது”.

இதுதான் 370வது பிரிவு உருவான கதை. கணிப்புத் தேர்தலை இந்திய அரசு வஞ்சகமாக முறியடித்ததுதான் தவறேயொழிய 370வது பிரிவைச் சேர்த்ததை எப்படித் தவறாகச் சொல்ல முடியும்?

சொல்லப் போனால் காஷ்மீர மக்களுக்கு வாக்களிக்கப்பட்ட உரிமைகள் இந்திய யூனியனில் அடங்கியுள்ள சகல தேசிய இனங்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என நாமும் கோருவதுதான் நமது சனநாயக உயர்வுக்கு அடையாளமாக இருக்க முடியும்.

13. காஷ்மீர மக்களுக்கு இந்திய அரசால் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டனவா?

இல்லவே இல்லை. முழுமையாகக் காஷ்மீர மக்கள் ஏமாற்றப்பட்டனர்.

நவ.5, 1951: அரசியல் நிர்ணய அவைகூட்டப்பட்டது.

நவ. 15, 1952: அரசியல் சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

ஆக.9,1953: காஷ்மீர இணைப்பைச் சட்டப் பேரவையைக் கூட்டி நிறைவேற்றாமல் பிரிவினை முயற்சியில் இறங்கினார் எனக் குற்றம்சாட்டப்பட்டு ஷேக் அப்துல்லா கைது செய்யப்பட்டார். 22 ஆண்டுக்காலம் அவர் சிறையிடப்பட்டார்.

பிப்ரவரி 1954: பலரும்கைது செய்து சிறையிலடைக்கப்பட்டு இணைப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மார்ச் 27, 1957: கணிப்புத் தேர்தல் நடத்த முடியாது என நேரு அறிவித்தார்.

14. இருந்தாலும் 370ஆவது பிரிவு இன்னும் நீடிக்கிறதே?

பெயருக்குத்தான் நீடிக்கிறது. அந்தப் பிரிவின் கீழான அத்தனை உரிமையும் இன்று பறிக்கப்பட்டுள்ளன அல்லது குறுக்கப்பட்டுள்ளன.

1954ல் தொடங்கி இது படிப்படியாக நிறைவேற்றப்படுகிறது. தனது கூட்டாட்சி அதிகாரத்தை மைய அரசு காஷ்மீர் மீது பரப்பத் தொடங்கியது.

1965ல் அரசியல் சட்டம் திருத்தப்பட்டு காஷ்மீர் முதல்வராவதற்கு ஒருவர் 25 ஆண்டுக் காலம் காஷ்மீரில் வசித்திருக்கவேண்டும் என்கிற நிபந்தனை நீக்கப்பட்டது. 1984ல் 248வது பிரிவு திருத்தப்பட்டது. இதன்படி காஷ்மீர் தொடர்பான போராட்ட எதிர்ப்புச் சட்டங்களை நிறைவேற்றும் உரிமையை இந்தியப் பாராளுமன்றம் எடுத்துக் கொண்டது.

‘ஜம்மு-காஷ்மீர் கலவரப் பகுதிச் சட்டம்’ (ஜூலை 1990), 1991ம் ஆண்டுப் ‘போராட்டத் தூண்டல் சட்டத் திருத்தம்’ ஆகியவற்றின் மூலம் கொடும் அடக்குமுறைக்கான உரிமைகளைக் காஷ்மீர மக்கள் மீது இந்திய அரசு எடுத்துக் கொண்டது.

‘பயங்கரவாதிகளை’ அடக்குதல் என்கிற பெயரில் காஷ்மீர மக்கள் ஊரடங்கு வாழ்வுக்கு ஆட்படுத்தப்பட்டுள்ளனர்.

15. காஷ்மீர முஸ்லிம்கள் இந்தியாவிற்குள் எங்கு வேண்டுமானாலும் நிலம் வாங்கலாம். ஆனால் இந்தியர் யாரும் காஷ்மீருக்குள் நிலம் வாங்க முடியாதது என்ன நியாயம் என ஆர்.எஸ்.எஸ். போன்ற அமைப்பினர் வாதிடுகிறார்களே?

இது காஷ்மீர முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல, ஜம்மு-காஷ்மீர் பகுதியிலுள்ள அனைத்து மக்களுக்கும், இந்துக்களுக்கும் பொருந்தும் சட்டம்தான்.

இந்தச் சட்டத்தை உருவாக்கியது இந்து டோக்ரா மன்னர்கள்தான்.

தமிழ்ச் சூழலைக் கணக்கிலெடுத்துக் கொண்டு இதனை யோசித்துப பாருங்கள்.

தமிழக மக்களைச் சுரண்டிச் சேகரித்த நிதியைக் கொண்டு வடநாட்டுப் பார்சி-பனியா சேட்டுகள் தமிழ்நாட்டில் மிக முக்கிய நகரங்களில் சொத்துக்களை வாங்கிக் குவிக்கின்றனர்.

இது எப்படி நியாயமாக இருக்க முடியும்?

எனவே யார் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் சொத்துக்கள் வாங்கலாம் என்கிற உரிமை வெளிநாட்டு, வடநாட்டு இந்து ஆதிக்கச் சக்திகளுக்குச் சாதகமான கோரிக்கைதான்.

மாறாக ஒவ்வொரு மாநிலத்திலும் அந்த மக்கள் மட்டுமே சொத்துக்கள் வாங்க முடியும் என்கிற நிலையைப் பரவலாக்குவதுதான் சரியான கோரிக்கையாக இருக்க முடியும். - பேரா. அ. மார்க்ஸ்

(எழுத்தாளர் பேச்சாளர் களச்செயற்பாட்டாளர் என பன்முகப் பரிமாணங்களோடு இயங்கிவருகிற பேரா. அ. மார்க்ஸ் செய்திருக்கும் பங்களிப்புகள் அளப்பரியது.)

தொடரும் .....

மீண்டும் வாருங்கள்.

சொடுக்கி படியுங்கள்.
இந்து மதவெறி அமைப்புகள் இஸ்லாத்தை குறிவைப்பதேன்? அ.மார்க்ஸ். பாகம் 2


இரண்டாம் தரக் குடிமக்களாக புறக்கணிக்கப்படும் இஸ்லாமியர். - அ.மார்க்ஸ். பாகம் 3

0 comments:

இஸ்லாமிய வரலாற்றில்

இஸ்லாமிய வரலாற்றில் பலஸ்தீன் படத்தின் மேல் சொடுக்கி படிக்கவும்.
பலஸ்தீன் வரலாறு

.

.

About This Blog

***இவ்வளைதளத்தின் பதிவுகளை தங்களுடைய வளைத்தளத்தில் மீள்பதிவு செய்பவர்கள் அன்பு கூர்ந்து இவ்வளைத்தளத்தின் சுட்டியை தங்களுடைய மீள்பதிவுகளில் இணைக்குமாறு அன்புடன் கோரப்படுகின்றார்கள்.

Labels

Lorem Ipsum

ISLAM HISTORY.

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP