**Followers.அன்பர்கள்.** தாங்களும் இணையலாமே!!!

இவர் இந்தியாவின் மனசாட்சி. - ஆனந்த விகடன்.

>> Friday, March 1, 2013

ஒடுக்கப்படும் இஸ்லாமியர்களுக்கு ஆதரவாகவும், சுதந்திரப் போராட்டக் காலத்தில் இஸ்லாமியர்களின் பங்களிப்பு குறித்தும் கட்ஜு தொடர்ச்சியாக எழுதிவருகிறார்.

இவர் இந்தியாவின் மனசாட்சி! 

நான் ஏன் பால் தாக்கரேவுக்கு அஞ்சலி செலுத்த விரும்பவில்லை?’ - இப்படி ஒரு தலைப்பில் கட்டுரை எழுதத் துணிச்சல் வேண்டும். அது மார்கண்டேய கட்ஜுவுக்கு இருக்கிறது.

அதுவும் பால் தாக்கரே மரணத்தை ஒட்டி இணையதளத்தில் கருத்துச் சொன்னதற்காக இரண்டு மும்பை மாணவிகள் கைது செய்யப்பட்ட சமயத்தில் இப்படி எழுதினார் கட்ஜு.

அதற்கு முன்னும் பின்னும் நாட்டுநடப்புகள் குறித்து பட்டவர்த்தனமாக கட்ஜு வெளியிடும் கருத்துகள் ஒவ்வொன்றும் இந்திய அரசியல் அரங்கில் மாபெரும் சலனங்களை உண்டுபண்ணுகின்றன.

இந்திய பிரஸ் கவுன்சில் தலைவர் என்ற பதவி அத்தனை அதிகாரம் மிக்கது இல்லை.

ஆனால், மார்கண்டேய கட்ஜு தலைவராக வந்த நாளில் இருந்து அதிரடிகளுக்குப் பஞ்சமே இல்லை.

சமீபத்தில், 'பாரதிய ஜனதா தனது பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடியை முன்னிறுத் தப்போவதாகச் சொல்லப்படுகிறது. 1933-ல் ஜெர்மானியர்கள் செய்த தவறை, 2014-ல் இந்திய மக்கள் செய்துவிடக் கூடாது’ என்று எழுதினார். ஹிட்லருடன் மோடியை ஒப்பிட்டு எழுதியதற்காக கட்ஜு பதவி விலக வேண்டும் என்று பா.ஜ.க. வலியுறுத்த, அதற்கு காங்கிரஸ் பதில் சொல்ல... சர்ச்சைகள் தொடர்கின்றன.

ஆனால், கட்ஜு இத்தகைய எதிர்ப்புகளுக்கு ஒருபோதும் அஞ்சியவர் அல்ல. அவருக்கு பா.ஜ.க.,காங்கிரஸ் என்ற கட்சி பேதமும் இல்லை.

அவரது முக்கியமான விமர்சனக் கணைகள் அனைத்தும் மீடியாக்களையே குறி வைக்கின்றன.

ஒரு தனியார் சேனலின் நேர்காணலின் போது, ''நமது மீடியா மக்களை மடையர்களாக்கும் வேலையைச் செய்கிறது. ரோமாபுரி அரசன், 'மக்களுக்கு ரொட்டி கொடுக்க முடியவில்லை எனில், சர்க்கஸ் பார்க்க ஏற்பாடு செய்’ என்று சொல்வானாம். அதுபோல இங்கு மக்களுக்குத் தேவையானதைக் கொடுக்காமல் டி.வி. பார்க்கவைக்கிறோம்.

அறிவியல் சிந்தனையைத் தூண்டுவதற்குப் பதில், ஜோசியம், மூடநம்பிக்கை போன்ற அறிவியலுக்கு எதிரான விஷயங்களை மீடியா பரப்புகிறது!'' என்று கட்ஜு தெரிவித்த கருத்து, ஊடக உலகையே உலுக்கிப் போட்டது.

ஒடுக்கப்படும் இஸ்லாமியர்களுக்கு ஆதரவாகவும், சுதந்திரப் போராட்டக் காலத்தில் இஸ்லாமியர்களின் பங்களிப்பு குறித்தும் கட்ஜு தொடர்ச்சியாக எழுதிவருகிறார்.

'ஹஜ் பயணத்துக்கு அரசு மானியம் வழங்குவது அரசியல் சட்டத்துக்கு எதிரானது’ என்ற மனு வந்த போது, அதை டிஸ்மிஸ் செய்தார்.

ஒடிஸாவில் கிறிஸ்துவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட போது, ''மத சிறுபான்மையினர் மீதான தாக்குதல்களைத் தடுத்து நிறுத்த முடியாவிட்டால், அரசாங்கம் விலகிக்கொள்ளட்டும்'' என்று அதிரடியாகச் சொன்னார்.

ஆனால் அவரே, இஸ்லாமியமாணவர்கள் தாடி வைத்துக் கொள்வது தொடர்பான ஒரு வழக்கில், ''இதை அனுமதித்தால் நாடு 'தலிபான்’ மயமாகிவிடும்'' என்று சொன்ன போது பெரும் கொந்தளிப்பு உருவானது.

இந்து மத அடையாளங்களுடன் மாணவர்கள் பள்ளிகளில் அனுமதிக்கப்படும் போது, இஸ்லாமிய அடையாளங்களுடன் அனுமதிக்கப்படுவதில் என்ன தவறு என்று பலரும் கேட்டனர்.

உடனே, தனது கருத்தைத் திரும்பப் பெற்றதோடு அதற்காக மன்னிப்பும் கோரினார்.

1946-ல் லக்னோவில் பிறந்த கட்ஜு, காஷ்மீரி பண்டிட் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரது தந்தை எஸ்.என்.கட்ஜு அலகாபாத் நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்தவர். பண பலமும் செல்வாக்கும் மிக்க குடும்பப் பின்னணி என்ற போதிலும் கட்ஜு, சாதாரண மக்களை நோக்கியே சிந்தித்தார்.

சம்ஸ்கிருதம், உருது இரு மொழிகளிலும் சம அளவு புலமைகொண்ட கட்ஜு, 'இந்தியாவில் உருது மொழிக்கு இழைக்கப்படும் அநீதி’ என்ற தலைப்பில் எழுதிய கட்டுரை முக்கியமானது.

''உருது, வெளிநாட்டு மொழி; அது முஸ்லிம்கள் மட்டுமே பேசும் மொழி... என்ற இரண்டு நம்பிக்கைகளுமே முழுப் பொய். உருது, இந்திய மண்ணில் உருவான மொழி. கடந்த தலைமுறை வரையிலும் இந்து, முஸ்லிம், சீக்கியர்கள், கிறிஸ்துவர்கள் என அனைத்து மதத்தைச் சேர்ந்த மக்களாலும் உருது பேசப்பட்டது'' என உருதுக்காக உறுதியாக வாதாடியவர்.

தமிழ் மீதும் பெரும் பற்று கொண்டவர். சென்னை உயர் நீதிமன்றத்தில் சில காலம் தலைமை நீதிபதியாகப் பணிபுரிந்தவர்.

பால் தாக்கரே பற்றிய தனது கட்டுரையை, 'முப்பது கோடி முகமுடையாள், உயிர் மொய்ம்புற ஒன்றுடையாள்’ என்ற பாரதியார் பாடலில் இருந்து தொடங்கியவர்.

20 ஆண்டுகள் நீதித் துறையில் பணியாற்றியபோது கட்ஜுவின் நீதிமன்ற அறை எப்போதும் பரபரப்பாக இருக்கும். ஒரு வாரத்துக்குக் குறைந்தது 100 வழக்குகளையேனும் விசாரிப்பார்.

'லிவிங் டுகெதர்’ வாழ்க்கையில் பெண்ணுக்கான உரிமைகளை நிலை நிறுத்தும் முக்கியமான தீர்ப்பு இவர் வழங்கியதுதான்.

மூளை மரணம் அடைந்த நிலையில் உள்ளவர்களைக் கருணைக் கொலை செய்வது தொடர்பான வழக்கில், 'இது தொடர்பான சட்ட விதிகளைத் தளர்த்திக்கொள்வதைப் பற்றி மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும்’ என்று கருணைக் கொலைகளுக்கு ஆதரவாகத் தீர்ப்பு எழுதினார்.

அவரே, 'கௌரவக் கொலைகள் என்ற பெயரில் காட்டுமிராண்டித்தனத்தில் ஈடுபடுவோரைத் தூக்கில் போட வேண்டும்’ என்று காட்டம் காட்டினார்.

இந்திய சாதியச் சடங்குகளை விடாமல் பின்பற்றும் மக்களைக் கண்டு கடுப்பாகி, '90 சதவிகிதம் இந்தியர்கள் முட்டாள்கள்’ என்றார் கோபத்துடன்.

''இந்திய - பாகிஸ்தான் பிரச்னை தீர்வதற்கு ஒரே வழி, இரண்டு நாடுகளும் ஒன்று சேர்வது தான்'' என்றார் அதிரடியாக. இவை அதிர்ச்சி அலைகளை உருவாக்கலாம். ஆனால், அவரது நோக்கம் அது அல்ல. அவர் தீர்வுகளை விரும்புகிறார். அதை நோக்கி இடைவிடாமல் இயங்குகிறார்.

அவர், இந்தியாவின் மனசாட்சி!-  ஆனந்த விகடன்.

நன்றி: விகடன்.காம்

***********


தாக்கரேவுக்கு ஏன் அஞ்சலி செலுத்தமுடியாது?

இன்றைய தி ஹிந்துவில் (நவம்பர் 19, 2012) வெளியான ஜஸ்டிஸ் மார்கண்டேய கட்ஜுவின் கட்டுரை Why I can’t pay tribute to Thackarey, அவர் அனுமதியுடன் இங்கு மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. தமிழில் : மருதன்.

அரசியல்வாதிகள், சினிமா நட்சத்திரங்கள், கிரிக்கெட் வீரர்கள் என்று பலரும் முண்டியடித்து மறைந்த பால் தாக்கரேவுக்கு அஞ்சலி செலுத்திக்கொண்டிருக்கிறார்கள். பிரபலங்களிடம் இருந்து புகழஞ்சலிகளும் நினைவஞ்சலிகளும் குவிந்துகொண்டிருக்கின்றன. இந்தப் பின்னணியில் எனது மாறுபட்ட கருத்தை இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன்.

இறந்தவர்களைப் பற்றி நல்லவிதமாக மட்டுமே பேசவேண்டும் என்று சொல்வார்கள். ஆனால் இத்தகைய விதிகளைக் காட்டிலும் என் நாட்டின் நலன் எனக்கு முக்கியம்.

பால் தாக்கரேவின் பண்பு என்று எதைச் சொல்லலாம்? எனக்குத் தெரிந்து மண்ணின் மைந்தன் (பூமிபுத்ரா) என்னும் அவருடைய தேச விரோதக் கோட்பாடுதான்.

இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் பகுதி 1(1) இவ்வாறு கூறுகிறது. ‘இந்தியா, அதாவது பாரத் மாநிலங்களின் யூனியனாக இருக்கும்.’ அதாவது, இந்தியா என்பது கூட்டுக்குழு அல்ல, யூனியன்.

இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் பகுதி 19(1)(e) இவ்வாறு கூறுகிறது. ‘இந்தியாவில் எந்தப் பகுதியிலும் தங்கவும், குடியமரவும் அனைத்து குடிமக்களுக்கும் உரிமை இருக்கிறது.’

ஒரு குஜராத்தியோ, தென் இந்தியனோ, பிகாரியோ, உத்தரப் பிரதேசத்துக்காரரோ அல்லது இந்தியாவில் எந்தப் பகுதியில் இருப்பவராக இருந்தாலும் சரி, மகாராஷ்டிராவுக்குக் குடிபெயரலாம். இது அனைவருக்குமான அடிப்படை உரிமை. (சில வரலாற்றுக் காரணங்களுக்காக ஜம்மு காஷ்மிர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் அவ்வாறு குடியேறுவதில் சில கட்டுப்பாடுகள் இருக்கின்றன.)

ஆனால், பூமிபுத்ரா கோட்பாட்டின்படி, மகாராஷ்டிரா மராத்தியர்களுக்கு மட்டுமே உரியது. குஜராத்திகள், தென் இந்தியர்கள், வட இந்தியர்கள் ஆகியோர் ‘வெளியில் இருப்பவர்கள்’. நாம் மேலே கண்ட அரசியலமைப்புச் சட்ட விதிகளுக்கு நேர் எதிரான கோட்பாடு அல்லவா இது! இந்தியா என்பது ஒரு தேசம். மராத்தியர் அல்லாதாரை அயல்நாட்டினரைப் போல் மகாராஷ்டிராவில் நடத்தமுடியாது.

தாக்கரே தோற்றுவித்த சிவ சேனா, அறுபதுகள் மற்றும் எழுபதுகளில் தென் இந்தியர்களைத் தாக்கி, அவர்களுடைய வீடுகளையும் உணவிடங்களையும் அழித்தொழித்தது.

மும்பையில் செய்தித்தாள்கள் விற்பவர்களாகவும் டாக்ஸி ஓட்டுநர்களாகவும் இருந்த பிகாரிகளையும் உத்தரப் பிரசேத்துக்காரர்களையும் 2008ல் தாக்கினார்கள். அவர்களுடைய வாகனங்கள் நொறுக்கப்பட்டன. ஊடுருவல்காரர்கள் என்று அழைக்கப்பட்டு அவர்கள் தாக்கப்பட்டார்கள்.

இஸ்லாமியர்கள் வில்லன்களாகச் சித்திரிக்கப்பட்டார்கள்.

இவையனைத்தும் ஓட்டு வங்கிகள் உருவாக தாக்கரேவுக்கு உதவி செய்தன. வெறுப்புணர்வின் அடிப்படையில் திரண்ட வங்கிகள் இவை.

ஹிட்லரும் இப்படித்தான் செய்தார் என்பதையும் தாக்கரே ஹிட்லரை நேசித்தவர் என்பதையும் இங்கே நினைவுபடுததிக்கொள்ளவேண்டும்.

தாக்கரோவை நான் விமரிசிப்பதற்குக் அவருடைய தேச விரோத மற்றும் அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரான கோட்பாடு மட்டும் காரணமல்ல. இன்னொரு முக்கியமான காரணமும் இருக்கிறது.

What is India? என்னும் என்னுடைய கட்டுரையில் குறிப்பிட்டுள்ளபடி, இந்தியா என்பது வட அமெரிக்காவைப் போல குடியேறிகளால் உருவான ஒரு நாடு.

இன்று இங்கு வசிக்கும் 92 முதல் 93 சதவிகித மக்கள் இந்தியாவின் பூர்வக்குடிகள் அல்லர்.

அவர்கள் குடியேறிகளின் வழிவந்தவர்கள். நல்ல வாழ்வு தேடி வட மேற்குப் பகுதியில் இருந்து இந்தியத் துணைக் கண்டத்துக்கு வந்தவர்கள் அவர்கள்.

இதுபற்றி மேலும் விரிவாக அறிய என் வலைப்பதிவுக்குச் செல்லுங்கள். இந்தியாவின் அசலான பூர்வகுடிகள் (பூமிபுத்ராக்கள்) ஆதிவாசிகள் என்று அழைக்கப்பட்ட திராவிட பழங்குடிகளுக்கு முந்தையவர்கள். (கோண்டுகள், சாந்தல்கள், தோடாக்கள் போன்றவர்கள்.) இப்போது அவர்களுடைய மக்கள்தொகை 7 அல்லது 8 சதவிகிதம் மட்டுமே.

பூமிபுத்ரா கோட்பாட்டை நிர்தாட்சண்யமாக அமல்படுத்தவேண்டுமானால், 92 முதல் 93 சதவிகிதி மகாராஷ்டிரியர்களை நாம் அந்நியர்களாக மதிப்பிடவேண்டியிருக்கும்.

இவர்களுள் தாக்கரே குடும்பத்தினரும் அடக்கம்.

மகாராஷ்டிராவைப் பொருத்தவரை உண்மையான பூமிபுத்ராக்கள் எனப்படுவோர் பழங்குடிகள் (Bhils போன்றவர்கள்). இவர்கள் தற்போது 7 முதல் சதவிகிதம் வரையிலேயே இருக்கிறார்கள்.

இப்படிப்பட்ட பல பிரிவினைவாத சக்திகள் இன்று இந்தியாவில் இருக்கிறார்கள். இந்தியாவைத் துண்டுகளாக உடைப்பதே இவர்கள் குறிக்கோள். நாட்டுப்பற்று உள்ள அனைவரும் இவர்களுக்கு எதிராகப் போராடவேண்டும்.

நாம் எதற்காக ஒன்றாக இருக்கவேண்டும்?

ஏனென்றால், மக்களின் வாழ்க்கைத் தரம் உயரவேண்டும். வாழ்க்கைத் தரம் உயரவேண்டுமானால் மிகப் பெரிய அளவில் செல்வம் சேர்த்தாகவேண்டும். விவசாயத்தால் மட்டும் இதனை நம்மால் சாதிக்கமுடியாது. நமக்கு நவீனத் தொழிற்சாலைகள் தேவை. நவீனத் தொழிற்சாலைகளுக்கு மிகப் பெரிய சந்தை தேவைப்படுகிறது.

ஒன்றுபட்ட இந்தியாவால்தான் இப்படிப்பட்ட மிகப் பெரிய சந்தையை அளிக்கமுடியும். வறுமையை ஒழிக்கவேண்டுமானால், வேலையில்லாத் திண்டாட்டத்தை ஒழிக்கவேண்டுமானால், பிற சமூக அவலங்களை ஒழிக்கவேண்டுமானால் நவீன தொழிற்சாலைகள் தேவை. நவீன கல்விமுறையையும், நல்ல மருத்துவ வசதிகளையும் நாம் உருவாக்கவேண்டும். அதற்கு நாம் ஒன்றாக இருக்கவேண்டியது அவசியம். உலகின் முன்னேறிய நவீன நாடுகளில் ஒன்றாக இந்தியா வளரவேண்டும்.

எனவே, திரு பால் தாக்கரேவுக்கு அஞ்சலி செலுத்தமுடியாததற்கு நான் வருந்துகிறேன்.

(கட்டுரையாளர், சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும், உச்சநீதிமன்றத்தின் நீதிபதியாகவும் இருந்தவர். தற்சமயம், இந்திய பிரஸ் கவுன்சில் தலைவராக இருக்கிறார்).

கீழுள்ள சுட்டிகளை சொடுக்கி படிக்கவும்.

மோடியை தோலுரித்து காட்டும் உச்ச நீதிமன்ற நீதிபதி மார்கண்டேய கட்ஜு

நமது மீடியாக்களின் வண்டவாளங்கள் தண்டவாளத்திலே.! - உச்ச நீதிமன்ற நீதிபதி மார்கண்டேய கட்ஜு

திணிக்கப்படும் அவமரியாதைகளை புறந்தள்ளுவோம். -

0 comments:

இஸ்லாமிய வரலாற்றில்

இஸ்லாமிய வரலாற்றில் பலஸ்தீன் படத்தின் மேல் சொடுக்கி படிக்கவும்.
பலஸ்தீன் வரலாறு

.

.

About This Blog

***இவ்வளைதளத்தின் பதிவுகளை தங்களுடைய வளைத்தளத்தில் மீள்பதிவு செய்பவர்கள் அன்பு கூர்ந்து இவ்வளைத்தளத்தின் சுட்டியை தங்களுடைய மீள்பதிவுகளில் இணைக்குமாறு அன்புடன் கோரப்படுகின்றார்கள்.

Labels

Lorem Ipsum

ISLAM HISTORY.

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP